5.1 அகத்திணை

அகப்பொருளின் அனைத்துக் கூறுகளையும் உள்ளடக்கியது அகத்திணை ஆகும். அகம் என்பது காதல் கொண்ட இருவரின் அனுபவங்கள் அல்லது இல்லறம் மேற்கொண்டுள்ள இருவரின் அனுபவங்கள் பற்றியதாகும். அகத்திணை ஏழு ஆகும். திணை என்ற சொல்லுக்கு ஒழுக்கம் என்று பொருள் என்பதை நீங்கள் அறிவீர்கள் அல்லவா?

கைக்கிளை, முல்லை, குறிஞ்சி, பாலை, மருதம், நெய்தல், பெருந்திணை என்பவை ஏழு திணைகளாகும். இவற்றை அடிப்படையாகக் கொண்டே அகப்பொருள் பாடல்கள் அமையும். இவற்றுள் கைக்கிளை மற்றும் பெருந்திணையில் அமைந்த பாடல்கள் அகநானூற்றில் இடம்பெறவில்லை.

5.1.1 முப்பொருள்

அகத்திணைப் பாடல்களில் மூன்று வகையான பொருள்கள் இடம் பெற்றிருக்கும். இவற்றை முதற்பொருள், கருப்பொருள், உரிப்பொருள் என்ற பெயர்களால் குறிப்பிடுவர்.

தொல்காப்பியம் இம்மூன்று பொருள்களின் விளக்கங்களையும் உட்கூறுகளையும் விவரித்துள்ளது. முதற் பொருள் நிலம், பொழுது என இருவகையாகும். இவற்றுள் பொழுது பெரும்பொழுது, சிறுபொழுது என இருவகைப்படும். மேலும் ஐந்து திணைக்கும் உரிய முதற்பொருள்கள் எவை என்பதையும் உரிப்பொருள்கள் எவை என்பதையும் தொல்காப்பியம் விளக்கியுள்ளது. கருப்பொருளை மட்டும் பட்டியலிட்டதோடு நிறுத்திவிட்டது. உரை ஆசிரியர்களே திணைக்குரிய கருப்பொருள்களைப் பட்டியலிட்டுள்ளனர். இவற்றின் வழி அகநானூற்றுப் பாடல்களில் இடம்பெற்றுள்ள முதல், கரு, உரிப்பொருள்கள் பற்றி அறியலாம்.

5.1.2 முல்லைத் திணை

தொல்காப்பியர் பட்டியலிடும்போது முதலாவதாகக் குறிப்பிடும் திணை இதுவாகும்.

• முதற்பொருள்

முல்லைத் திணையின் முதற்பொருளில் நிலம் முல்லை நிலமாகும். அதாவது காடும் காடுசார்ந்த இடமும் ஆகும். காடு, கானம், புறவு முதலிய சொற்களால் அகநானூற்றில் இது குறிப்பிடப் பெறுகிறது.

பெரும்பொழுது கார்காலம் ஆகும். சிறுபொழுது மாலைப்பொழுது ஆகும். கார், மாலை, அந்தி பற்றிய குறிப்பு பல பாடல்களில் உள்ளது.

• கருப்பொருள்

மக்கள், தெய்வம், தொழில், இசைக்கருவி, விலங்குகள், பறவைகள், உணவு முதலிய பொருள்கள் கருப்பொருள் எனப்படும்.

முல்லைக்குரிய தெய்வம் மாயோன் (திருமால்) என்று தொல்காப்பியம் குறிப்பிடுகிறது. அகநானூற்றில் முல்லைத்திணைக்கு உரிய கருப்பொருள் பற்றிய செய்திகள் பல உள்ளன.

• மக்கள் - நாடன், கிழத்தி, இடையன், இடைச்சி, கோவலர்
• தொழில் - ஆடு, மாடு மேய்த்தல்
• விலங்கு - மான் (திரிமருப்பு இரலை), பசு (கறவை), ஆடு (மறி)
• மரம் - குருந்து, கொன்றை
• பறவை - அன்னம் (எகினம்), கிளி (செந்தார்ப் பைங்கிளி)
• இசைக்கருவி - குழல், யாழ்
• பண் - செவ்வழி
• மலர் - முல்லை, தோன்றி, கொன்றை, வேங்கை
• உணவு - வரகு, பால்

• உரிப்பொருள்

முல்லைத் திணையின் உரிப்பொருள் இல்லிருத்தல் ஆகும். அதாவது, பிரிந்திருக்கும் தலைவன் மீது வருத்தம் கொள்ளாமல், தானும் வருந்தாமல் ஆற்றியிருத்தலும், ஆற்றியிருக்கக் கூறுதலும் ஆகும்.

முல்லை வைந்நுனை தோன்ற, இல்லமொடு
பைங்காற் கொன்றை மென்பிணி அவிழ,......
மணிநா ஆர்த்த மாண்வினைத் தேரன்
உவக்காண் தோன்றும் குறும்பொறை நாடன்,......
ஆய்தொடி அரிவை நின் மாணலம் படர்ந்தே.
(4)

என்ற அகநானூற்றுப் பாடலை முல்லை உரிப்பொருள் சிறப்பிற்குச் சிறந்த சான்றாக இலக்கண உரையாசிரியர்கள் காட்டியுள்ளார்கள். கார்காலம் வரும்போது தானும் வருவதாகக் கூறிப் பிரிந்து சென்றிருக்கிறான் தலைவன். கார்காலம் வந்துவிட்டது. கார்காலம் வரும்வரை ஆற்றி இருந்த தலைவியிடம் தலைவனின் வரவைத் தோழி எடுத்துக் கூறுகிறாள். இதில் முல்லையின் உரிப்பொருள் சிறந்திருக்கிறது.

5.1.3 குறிஞ்சித் திணை

தொல்காப்பியத்தில் இரண்டாவதாக வைத்து எண்ணப்படும் திணை குறிஞ்சி. இது களவொழுக்கத்தைத் தழுவிய பாடல்களைக் கொண்டதாகும்.

• முதற்பொருள்

குறிஞ்சித் திணையின் முதற்பொருளில் நிலம் மலையும் மலையைச் சார்ந்த இடமும் ஆகும். குறிஞ்சி நிலத்தை மலை, பாறை, நல்வரை, ஓங்கல் வெற்பு, நெடுவரை, சிலம்பு, அடுக்கம் எனப் பல பெயர்களில் அகநானூறு குறிப்பிடுகிறது.

பெரும்பொழுது கூதிர்காலம், சிறுபொழுது யாமம்.

அகநானூற்றில் ஆலங்கட்டியுடன் மழைபொழிந்த நள்ளிரவு என்றும், வாடைக் காற்று வீசும் இரவு என்றும் கூதிர்காலம் குறிப்பாகச் சுட்டப்படுகிறது.

உருகெழு நடுநாள், பானாள் கங்குல், அரைநாள் யாமம் என்று சிறுபொழுது பல பாடல்களில் குறிக்கப் பெறுகிறது.

• கருப்பொருள்

குறிஞ்சித் திணைக்குரிய கருப்பொருள்கள் அகநானூற்றின் பல பாடல்களில் பயின்று வருகின்றன.

• தெய்வம் - முருகன்
• மக்கள் - மலை நாடன், வெற்பன், குறவர், கொடிச்சி, கானவர்
• உணவு - தினை (ஏனல்), தேன்
• விலங்குகள் - புலி (உழுவை), குரங்கு, பன்றி, கரடி (பெருங்கை ஏற்றை, உளியம்), யானை, கடுவன்.
• பறவைகள் - மயில், கிளி
• மரங்கள் - வாழை, மூங்கில் (வேய், அமை, கழை), வேங்கை, பலா, சந்தனமரம்
• மலர்கள் - குறிஞ்சி, காந்தள், வேங்கை
• தொழில் - தினை விளைத்தல், தேனெடுத்தல்
• ஊர் - சிறுகுடி
• இசைக்கருவி - முழவு, யாழ்
• இசை - குறிஞ்சிப்பண்

• உரிப்பொருள்

குறிஞ்சித் திணைக்குரிய உரிப்பொருள் புணர்தலாகும். அதாவது தலைவன் ஒருவன், தலைவி ஒருத்தியை அவளது இல்லத்தார் அறியாமல் புணருவதும் அதற்கான முயற்சிகளும் ஆகும்.

‘கிளை பாராட்டும் கடுநடை வயக்களிறு’ எனத் தொடங்கும் அகநானூற்றுப் பாடல் (218) குறிஞ்சி உரிப்பொருள் சிறப்பிற்குத் தக்க சான்று ஆகும். தலைமகனைச் சந்திக்க வேண்டிய இடத்தில் இரவில் தலைவியை விட்டு வந்த தோழி, எதிரே வந்த தலைவனிடம் கூறுவதாக அமைந்தது இப்பாடல். தலைவனைக் கூடாது தலைவியால் வாழமுடியாது என்ற நிலை. இதே நிலை தலைவனுக்கும். வருவோரைக் கொன்று தின்னக் காத்திருக்கும் புலிகள் உலவும் காட்டில் இருள் அடர்ந்த இரவில் மழையில் தலைவியைச் சந்திக்க வருகிறான் தலைவன். அவனிடம் தோழி பகற்பொழுதில் சந்திக்க வரும்படி வேண்டுகோள் விடுக்கின்றாள். அதன் மூலம் திருமணம் செய்து கொள்ளுமாறு குறிப்பாக உணர்த்துகிறாள். இதில் களவுப் புணர்ச்சி பேசப்பட்டுக் குறிஞ்சிக்குரிய உரிப்பொருள் சிறந்திருக்கிறது.

5.1.4 பாலைத் திணை

தொல்காப்பியரால் நடுவண் ஐந்திணையில் நடுவணதாகப் போற்றப்படுவது பாலைத்திணை. இது, களவில் உடன்போக்கையும் கற்பில் பல வகைப் பிரிவுகளையும் உள்ளடக்கியது.

• முதற்பொருள்

பாலைத் திணையின் முதற் பொருளான நிலம் இது என இலக்கணங்கள் சுட்டிக் காட்டவில்லை. முல்லை நிலமும் குறிஞ்சி நிலமும் வறட்சியால் தம் இயல்பு அழிந்து பாலை நிலம் என்ற நிலையை அடையும் என்று சிலப்பதிகாரம் குறிப்பிட்டுள்ளது. இந்நிலை சுரம், காடு என்ற பெயர்களால் அக இலக்கியங்களில் சுட்டப்படும். வறம் கூர் கடம், வெம்பரல் அதர குன்று, வெம்முனை அருஞ்சுரம் என்று அகநானூற்றில் பாலை நிலம் குறிப்பிடப்படுகிறது.

பாலைத் திணையின் பெரும்பொழுது வேனில் காலமும் பின் பனிக் காலமும் ஆகும்.

சிறு பொழுது நண்பகல் ஆகும்.

நிலமும், காலங்களும் பற்றிய வருணனை அகநானூற்றில் பல பாடல்களில் சிறப்பாக அமைந்துள்ளது.

• கருப்பொருள்

பாலை நிலக் கருப்பொருள்கள் பல அகநானூற்றுப் பாடல்களில் இடம் பெற்றுள்ளன:

• தெய்வம் - கொற்றவை (கானமர் செல்வி)
• மக்கள் - மறவர், அத்தக் கள்வர், விடலை, மழவர்
• தொழில் - வழிப்பறி (ஆறலைத்தல்)
• விலங்கு - செந்நாய், மான் (நவ்வி)
• மரம் - முருங்கை, மராம், பெண்ணை, இலவம்
• பறவை - பருந்து (எருவை), புறா, காக்கை, கூகை (குடிஞை, ஆந்தை)
• இசைக்கருவி - முழவு, கறங்கு, யாழ், சில்லரி, கிணை, துடி
• மலர்கள் - எருக்கு, களரியாவிரை, இருப்பை
• நீர்நிலை - சுனை, கான்யாறு
• ஊர் - மூதூர், முதுபதி

• உரிப்பொருள்

பாலைத் திணைக்கு உரிய உரிப்பொருள் பிரிதல் ஆகும். இல்வாழ்க்கைக்கு வேண்டிய பொருளைத் தேடவும், போர் செய்து நாட்டைக் காப்பதற்கும் தலைவன் தலைவியைப் பிரிந்து செல்வதும், அது தொடர்பான நிகழ்வுகளும் பாலைத் திணைப் பாடல்களுக்கு உரிப் பொருளாகும். களவு வாழ்க்கையில் ஈடுபட்டிருந்த தலைவன், தலைவியின் வீட்டார் அறியாமல் அவளை அழைத்துக்கொண்டு தன் ஊருக்குச் செல்லும் உடன் போக்கும் பாலைத் திணையே ஆகும்.

‘வண்டுபடத் ததைந்த கண்ணி ஒண்கழல்’ எனத் தொடங்கும் அகநானூற்றுப் பாடல் (1) பாலை உரிப்பொருள் சிறந்த பாடலாகும். பிரியமாட்டேன் என்று வாக்குக் கொடுத்திருந்த தலைவர் பொருள் ஈட்ட வேண்டி என்னைப் பிரிந்து கடிய பாதையில் சென்றுள்ளார் என்று தோழியிடம் தலைவி புலம்புவதாக அமைந்துள்ள இப்பாடலில் பாலை உரிப்பொருள் சிறந்துள்ளது.

உடன் போக்கின்போது செவிலித்தாய் வருந்திப் புலம்புவாள். “இல்லத்திற்குள்ளேயே சிறு விளையாட்டுகள் ஆடினால்கூட உடல் நோகின்றது என்று கூறும் என் மகள் (தலைவி) தலைவனோடு சேர்ந்து கடிய காட்டை எப்படிக் கடந்து செல்வாள்” என்று செவிலித்தாய் புலம்புகின்றாள் (அகநானூறு. 17).

5.1.5 மருதத் திணை

தொல்காப்பியத்தில் நான்காவதாக எண்ணப்படுவது மருதத் திணை. பரத்தையரோடு தொடர்புடைய பாடல்களைக் கொண்டதாக இத்திணை இயங்கும்.

• முதற்பொருள்

மருதத் திணையின் முதற்பொருளில் ஒன்றான நிலம் வயலும் வயல்சார்ந்த இடமும் ஆகும். கழனி, வளவயல் என அகநானூற்றில் குறிப்பிடப் பெறுகிறது.

ஆறு பெரும்பொழுதும் மருதத் திணைக்கு உரியவை ஆகும். சிறுபொழுது வைகறை ஆகும். அதாவது விடியற்காலை ஆகும்.

• கருப்பொருள்

• தெய்வம் - இந்திரன்
• மக்கள் - ஊரன், மகிழ்நன், உழவன்
• உணவு - நெல், தேறல், மீன், கரும்பு
• விலங்கு - எருமை (செங்கண் காரான்), நீர்நாய், ஆமை, வாளைமீன், வரால் மீன்
• மரம் - மருது, ஈங்கை
• பறவை - குருகு, கோழி
• தொழில் - உழவு
• மலர்கள் - தாமரை, ஆம்பல், பகன்றை
• இசைக்கருவி - யாழ், முழவு
• நீர்நிலை - பொய்கை, துறை

என்று மருதத்திணைக் கருப்பொருள்கள் அகநானூற்றில் பயின்று வருகின்றன.

• உரிப்பொருள்

மருதத் திணைக்குரிய உரிப்பொருள் ஊடல் ஆகும். காமக் கிழத்தி, காதற் பரத்தை, சேரிப் பரத்தை என இவர்களைச் சந்திக்க வேண்டித் தலைவன் தலைவியைப் பிரிந்து செல்வான். ‘புறத்தொழுக்கம்’ எனப்படும் இத்தீய ஒழுக்கத்தில் ஈடுபட்டுத் திரும்பி வரும் தலைவனிடம் தலைவி பொய்க் கோபம் கொள்வாள். இதுவே ஊடல் எனப்படும். இல்லம் வர விரும்பும் தலைவனுக்காகத் தூது வரும் பாணன் முதலியோரிடமும் சினம் கொண்டு பேசுவாள். இவை எல்லாம் மருதத் திணைப்பாடல்களில் காணப்படும் உரிப் பொருளாகும்.

‘சேற்றுநிலை முனைஇய செங்கண் காரான்’ எனத் தொடங்கும் அகநானூற்றுப் பாடல் (46) மருதத்திணை உரிப்பொருள் சிறப்பிற்குத் தக்க சான்று ஆகும். ‘நீ வேறு ஒரு பெண்ணை மணந்துகொண்டாய் என்று இந்த ஊரார் கூறுகின்றனர். அப்படி நடந்தது பற்றி நான் கருத்து எதுவும் கூறப்போவதில்லை. உனது பிரிவால் எனது உடல் மெலிந்து வருந்தினும் பரவாயில்லை. உன்னைத் தடுக்கவும் நான் தயாராக இல்லை. நீ உன் மனம் போல் நடந்துகொள்ளலாம்’ என்று தலைவி கோபம் கொண்டுள்ளதாகத் தோழி பேசுவதாகப் பாடல் அமைந்துள்ளது.

5.1.6 நெய்தல் திணை

தொல்காப்பியத்தில் இறுதியாக எண்ணப்படுவது நெய்தல். பிரிந்திருக்கின்ற தலைவனை நினைத்துத் தலைவி புலம்புவதாகப் பாடல்கள் அமையும்.

• முதற்பொருள்

நெய்தல் திணைக்குரிய முதற் பொருளில் ஒன்றான நிலம் கடலும் கடல் சார்ந்த பகுதியும் ஆகும்.

கடல், புணரி, துறை, பெருந்துறை, கழி, பெருமணல் அடைகரை, பல்பூங்கானல், தண்ணறுங்கானல், புன்னையங்கானல் போன்ற சொற்களால் இந்நெய்தல் நிலம் அகநானூற்றில் குறிக்கப் பெறுகின்றது.

இத்திணைக்கு ஆறு பெரும்பொழுதும் உரியதாகும். சிறு பொழுது எற்பாடு ஆகும். அதாவது பகற்பொழுதின் பிற்கூறு என்பர். இது முன்னிரவைக் குறிக்கலாம். எல்லி என்று இந்தப் பொழுது அகநானூற்றுப் பாக்களில் குறிக்கப்பெறுகிறது. அரைநாள் என்றும் வழங்குகிறது.

• கருப்பொருள்

• தெய்வம் - வருணன்
• மக்கள் - துறைவன், சேர்ப்பன், புலம்பன், பரதவர், உமணர் (உப்பு வணிகம் செய்பவர்கள்)
• தொழில் - மீன் பிடித்தல், உப்பு விளைவித்தல்; விற்றல்.
• மரம் - பெண்ணை (பனை), தாழை, புன்னை.
• செடிகொடி - முண்டகம், அடும்பு.
• பறவை - நாரை, அன்னம், கொக்கு, சிறுவெண்காக்கை
• விலங்கு - சுறா, புரவி (குதிரை), கோவேறு கழுதை (அத்திரி), ஆமை, அலவன்
• ஊர் - ஊர், சிறுகுடி.
• மலர்கள் - செருந்தி, நெய்தல், காவி, தாழை, புன்னை
• உணவு - நெல், மீன் (இறவு, அயிலை, சுறவு)
• நீர்நிலை - நெடுங்கழி

என்று நெய்தல் திணைக் கருப்பொருள்கள் பல அகநானூற்றில் இடம் பெறுகின்றன.

• உரிப்பொருள்

நெய்தல் திணையின் உரிப்பொருள் இரங்கல் ஆகும். பாலைத் திணைக்குக் கூறியதுபோல ஏதேனும் ஒரு காரணத்தின் பொருட்டுத் தலைவன் தலைவியைப் பிரிந்து செல்வான். அவன் திரும்பி வருவதாகக் கூறிச்சென்ற காலம் வந்தவுடனோ வருவதற்கு முன்போ தலைவி, அக்காலம் வந்ததாகவும் தலைவன் வரவில்லை என்று வருந்துவது இரங்கல் ஆகும்.

‘கானல் மாலைக் கழிப்பூக் கூம்ப’ (40) எனத் தொடங்கும் அகநானூற்றுப் பாடல் நெய்தல் திணை உரிப்பொருள் சிறந்திருப்பதற்குச் சான்று ஆகும். “பிரிந்தவர்கள் வருந்துமாறு வீசும் கீழைக் காற்றினால், நாமும் செயலற்று வருந்தும்படிப் பிரிந்த தலைவர் சொல்லிய காலத்தில் மீண்டும் வந்து நம்மைச் சேரவில்லை. ஆனாலும் அவர் நம்மேல் கொண்ட நட்பு ஒழிந்து போகாமல் இருக்கட்டும். அவரிடம் சென்ற என் நெஞ்சம் அவர் அன்பு செய்யவில்லையே என்று அவரை விட்டு நீங்கி நம்மிடம் வராமல் இருக்கட்டும்” என்று தலைவி தனது கையற்ற நிலையைக் கூறி, இரங்கற் பொருண்மையை வெளிப்படுத்துவதாய்ப் பாடல் அமைந்துள்ளது.

தன் மதிப்பீடு : வினாக்கள் - I
1

காதலிக்கின்ற நிகழ்வுகளைக் குறிக்கும் இலக்கியச்சொல் எது?

விடை
2

புறவு - எந்தத் திணைக்குரிய நிலம்?

விடை
3

அடுக்கம் என்ற சொல் எதனைக் குறிக்கும்?

விடை
4

பாலையின் பெரும் பொழுது யாது?

விடை