நற்றாய், தலைவியைப் பெற்றெடுத்தவள். தலைவியின் வேறுபாடு கண்டு
செவிலியை வினாவுதலும், தந்தை; தன்னையர்க்கு அறத்தொடு நிற்றலும்,
உடன்போக்கின்போது புலம்புதலும், கண்டோரை வினவுதலும் என நற்றாய் கூற்றுகள் - துறைகள் அமையும்.
அக இலக்கியங்களிலும் இலக்கணங்களிலும் நற்றாய்க்கும் தலைவிக்கும் உள்ள தொடர்பு
மேலோட்டமாகவே காட்டப்பட்டுள்ளது. தலைவி மீது நற்றாய்க்கு அக்கறையும் பாசமும் இல்லாதது
போலவே எண்ணத் தோன்றும்.
உடன்போக்கு மேற்கொண்ட தன் மகளை எண்ணி நற்றாய் வருந்துகிறாள். அலர் பேசும்
பெண்டிர் தலைவனுக்கும் தலைவிக்கும் உள்ள தொடர்பைத் தங்களுக்குள்ளும் பேசிக்கொள்கின்றனர்;
நற்றாயிடமும் தெரிவிக்கின்றனர். "தலைவியின் செயலால் மகிழ்ச்சி அடைவதோ துன்பப்படுவதோ நம்முடைய
வேலை, இதில் ஏன் மற்றவர்கள் மூக்கை நுழைக்கிறார்கள்?” என்று வெகுள்கிறாள் - வேதனைப்படுகிறாள், நற்றாய்.
தன் மகள் நாணுவாள் என்பதால்தான் அலர்வாய்ப் பெண்களின் கூற்றைத்
தன் மகளிடம் விசாரிக்காமல் இருக்கின்றாள். தன் மகள் தனது உள்ளம் என்ன என்பதை அறியாமலேயே
சென்றுவிட்டாளே என்று வருந்துகிறாள்.
அவர்கள் போகும் பாதையில் உள்ள சிற்றூரில், நொச்சி மரம் சூழ்ந்த குடிசையில்
வாழும் ஒரு பெண்ணாக மாற்றுருக்கொண்டு, அவர்களை வரவேற்று, விருந்து உபசரிக்க
எண்ணுகின்றாள். இதுவே அகநானூறு 203 ஆம் பாடலில் இடம்பெற்றுள்ள செய்தி.
இப்பாடல் நற்றாய், தலைவியைக் கூர்ந்து கவனித்துக் கொண்டு இருப்பதையும், அவளது
காதலுக்கு ஆதரவாய் இருப்பதையும், காதலனுடன் சென்றுவிட்ட மகள்மீது கோபம் கொள்ளாமல்
இருப்பதையும் எடுத்துக்காட்டி, தலைவி மீது நற்றாய்க்கு உள்ள அக்கறையையும் பாசத்தையும்
வெளிப்படுத்தி உள்ளது. அக இலக்கியங்களில் இத்தகு அரிய பாடல் இது ஒன்றே எனலாம். |