ஓர் ஆணும் ஒரு பெண்ணும் தாங்களே சந்தித்தித்துக் காதல் கொண்டு; உடன்போக்கு மேற்கொண்டு திருமணம் செய்துகொள்ளல்,
காதல்கொண்டோர் பெற்றோரின் அனுமதியுடன் திருமணம் செய்துகொள்ளல், பெற்றோரின் ஏற்பாட்டில் திருமணம்
செய்துகொள்ளல் என்ற மூன்று வகையான திருமணங்களிலும் இல்லறம் தொடங்கப்பட்டுள்ளது.
திருமணத்திற்கு முன்னும் பின்னும் பல சடங்குகள், நடைமுறைகள் வழக்கத்தில் இருந்திருக்கின்றன.
அவற்றுள் சிலவற்றைக் காண்போம்.
• பருவப் பெண்ணுக்குப் பாதுகாப்பு
பெண்கள் பருவம் அடைந்ததும் அவர்களுக்குச் சிறப்புப் பாதுகாப்புக் கொடுப்பது,
இன்று மட்டுமல்ல அன்றும் நிலவிய பழக்கம் ஆகும். இதற்கு
இற்செறிப்பு என்று பெயர். கீழ்க் காணும்பகுதி இதற்குச் சான்று ஆகும்.
பெண்துணை சான்றனள் இவளெனப் பன்மாண்
கண்துணை யாக நோக்கி நெருநையும்
அயிர்த்தன்று மன்னே நெஞ்சம், பெயர்த்தும்
அறியா மையின் செறியேன் யானே(315) |
என்ற பாடற் பகுதி, ஒரு தாயின் புலம்பலாகும்.
தனது பெண்ணின் பருவ வளர்ச்சியை அவளது பெண்மை உறுப்புகளின் வளர்ச்சியால் தாய்
தன் கண்ணால் நோக்கி அறிந்து கொண்டாள். பெண்மை காரணமாகப் பாதுகாப்புக் கொடுத்திருக்க
வேண்டும். ஆனால் கொடுக்கவில்லை. அதற்காக வருந்துகிறாள்.
• வீட்டைப் புதுப்பித்தல்
திருமணத்திற்காக வீட்டைப் புதுப்பிக்கும் பழக்கம் இருந்தது. இதனை,
கடலம் தானைக் கைவண் சோழர்
கெடலரு நல்லிசை உறந்தை அன்ன
நிதியுடை நல்நகர் புதுவது புனைந்து
தமர்மணன் அயரவும்- (369) |
என்ற பாடற் பகுதியால் அறியலாம்.
இப் பாடற் பகுதி சுற்றத்தாருடன் கூடிப் பெற்றோர் செய்யும் திருமணம் பற்றிக் குறிப்பிட்டுள்ளது.
சோழரின் புகழ் படைத்த உறந்தை நகர் போலச் செல்வம் நிறைந்த நல்ல மனையைப் புதுப்பித்து,
சுற்றத்தார் திருமணம் செய்தனர் என்ற செய்தி பாடலில் இடம்பெற்றுள்ளது.
• சிலம்புகழி நோன்பு
திருமணத்திற்கு முன்பாகப் பெண்ணின் வீட்டில் அவளது தாய், தலைவி
அணிந்திருக்கும் சிலம்புகளை அகற்றுவாள். இது ஒரு விழாவாக நடைபெறும். இதற்குச்
சிலம்பு கழி நோன்பு என்று பெயர். காதலனுடன் சென்றுவிட்ட தன் பெண்ணுக்குச் சிலம்பு
கழி நோன்பு செய்ய முடியாத தாயின் புலம்பலில் இதற்கான சான்றுகள் கிடைக்கின்றன.
... என் சிறுமடத் தகுவி
சிறப்பும் சீரும் இன்றிச் சீறூர்
நல்கூர் பெண்டின் புல்வேய் குரம்பை
ஓர்ஆ யாத்த ஒருதூண் முன்றில்
ஏதில் வறுமனைச் சிலம்புடன் கழீஇ
மேயினள் கொல்?என நோவல் யானே.(369) |
என்பது சிலம்பு கழி நோன்பு பற்றிய செய்திகளைத் தரும் பகுதியாகும்.
இந் நோன்பு பெண் வீட்டில் நடப்பதே முறை என்றும் அழைத்துச் சென்ற ஆடவன் வீட்டில் நடப்பதை இழுக்காகவும்
கருதியுள்ளனர் என்பதை மேற்கூறிய பாடற்பகுதிகள் விளக்குகின்றன.
• பரிசம் போடுதல்
திருமணத்திற்கு முதல்நாள் மாலை அல்லது
முன்இரவில் பரிசம் என்ற சடங்கு இன்றளவும் கிராமப்புறங்களில் நடைபெற்றுக்
கொண்டிருக்கிறது. இன்று மணமகன் வீட்டார், வரதட்சணை என்ற பெயரில் பணமும்
பொருளும் பெறுவது போல, முன்னர் மணமகள் வீட்டார் முலை விலை, சிறுவளை விலை,
பாசிழை விலை என்ற பெயரில் பணமும் பொருளும் பெற்றனர். இதைப் பரிசம் போடுதல்,
பரியம் போடுதல் என்ற சடங்காகவே நடத்தினர். இப்பாசிழை விலை குறித்த சான்று
அகநானூற்றில் உள்ளது.
கருங்கண் கோசர் நியமம் ஆயினும்
உறும்எனக் கொள்குநர் அல்லர்.
நறுநுதல் அரிவை பாசிழை விலையே!(90) |
கோசர்களின் (ஓர் அரச பரம்பரையினர்) வளப்பம் மிக்க,
புது வருவாயை உடைய நியமம் என்ற ஊரையே பாசிழை விலையாகக் கொடுத்தாலும் இவள் வீட்டார் ஏற்பார்
அல்லர் என்ற செய்தி பாடலில் இடம்பெற்றுள்ளது.
• திருமண நிகழ்வு
திருமணம் என்ற நிகழ்வு, பல சடங்குகளை உள்ளடக்கியது ஆகும். நல்லாவூர்
கிழார் என்ற புலவர் அச் சடங்குகளையெல்லாம் தொகுத்து வழங்கியுள்ளார்.
பாடற் பகுதி (86) சடங்குகளில் பலவற்றைக் குறிப்பிட்டுள்ளது. அவை வருமாறு,
-
தீய கோள்களின் தொடர்பு இல்லாத வளைந்த வெண்சந்திரனை,
புகழுடைய உரோகிணி விண்மீன் கூடிய நல்ல நாளைத் திருமணத்திற்குத்
தேர்ந்தெடுத்தனர்.
-
இருள் முற்றிலும் நீங்கிய இனிய காலைப்
பொழுதில் திருமணம் நடந்தது.
-
வாசலில் வரிசையாகக் கால்கள் நட்டு, பந்தல்
போட்டு அதில் மணல் பரப்பப்பட்டது.
-
பந்தலின் ஒரு பகுதியில் மனைவிளக்கு ஏற்றப்பட்டது.
மாலைகள் தொங்கவிடப்பட்டன.
-
தலையிலே குடத்தையும் கைகளிலே கலயங்களையும்
உடையவரும் குரவை ஒலி எழுப்புபவரும் ஆகிய முது பெண்டிர் வேண்டியவற்றை
முறையாக எடுத்துக் கொடுத்தனர்.
-
பிள்ளைகளைப் பெற்றெடுத்த, ஆபரணங்கள் அணிந்த
பெண்கள் நால்வர் கூடி, கற்பிலிருந்து வழுவாமல், கணவனோடு அவனை
என்றும் விரும்பிப் பேணுபவளாக இனிது வாழ்க என வாழ்த்தி, திருமணத்தை
நடத்தினர்.
-
அலரிப் பூ, நெல் ஆகியவை கலந்த நீரைத்தெளித்து
வாழ்த்தினர்.
-
திருமணத்தின்போது உழுந்து கலந்து குழைவாகச்
சமைத்த சோற்று உருண்டைகளை உணவாக அளித்தனர்.
- இப்படியாக வதுவை என்னும் மணம் நடந்தது.
|
எனத் திருமணம் நடந்த விதத்தைப் பாடல் விளக்கியுள்ளது. இதற்கு மேலும் பல தகவல்களை
விற்றூற்று மூதெயினனார் பாடல் (136) தருகிறது.
-
பறவைச் சகுனம் பார்த்தனர்.
-
கடவுளை வாழ்த்தினர் - வழிபட்டனர்.
-
மணமுழவையும் முரசங்களையும் ஒலிக்கச் செய்தனர்.
-
வெள்ளிய நூலில் வாகை இலையையும் புதிதாக
முளைத்து வந்த அருகம் புல்லையும் சேர்த்துக் கட்டி, காப்பாக
அணிவித்தனர்.
-
புத்தாடை அணிவித்தனர்.
-
திருமண விருந்தாக நெய்யும் இறைச்சியும்
கலந்து சமைத்த சோற்றை வழங்கினர்.
|
• முதல் இரவு
திருமணம் முடிந்த அன்றைய தினமே முதலிரவை நடத்தினர்.
அன்றைய தினம் பெண்கள், பேசா மடந்தையாக - புத்தாடைக்குள் முகத்தை முற்றிலுமாக மறைத்துக் கொள்ளும் மிகுநாண் கொண்டவர்களாக விளங்கியுள்ளனர்.
தமர்நமக்கு ஈத்த தலைநாள் இரவின்
உவர்நீங்கு கற்பின்எம் உயிர்உடம் படுவி!
முருங்காக் கலிங்கம் முழுவதும் வளைஇப்
பெரும்புழுக் குற்றநின் பிறைநுதல் பொறிவியர்
உறுவளி ஆற்றச் சிறுவரை திறஎன
ஆர்வ நெஞ்சமொடு போர்வை வவ்வலின்
உறைகழி வாளின் உருவுப்பெயர்ந்து இமைப்ப
மறைதிறன் அறியாள் ஆகி,
ஒய்யென நாணினள்(136) |
|