பாடம் - 1

D01141 புறநானூறு - 1

இந்தப் பாடம் என்ன சொல்கிறது?

தமிழ் இலக்கியங்களில்     காலப் பழைமைமிக்கன சங்க இலக்கியங்கள். அவை பத்துப்பாட்டும் எட்டுத்தொகையும் எனப் பதினெட்டு நூல்களாகும். இப்பதினெட்டு நூல்களில் புறநானூறு, எட்டுத்தொகை நூல்களில் ஒன்று எனச் சொல்லுகின்றது.

புறநானூற்றில் நானூறு செய்யுட்கள் இருக்க வேண்டும். ஆனால் 267, 268 ஆகிய இரு செய்யுட்கள் கிடைக்கவில்லை. சில செய்யுட்கள் இடையிலே சிதைந்துள்ளன என்பதைக் கூறுகின்றது.

புறநானூற்றில் இணையம் வழங்கும் பாடப்பகுதியில் முப்பது செய்யுட்கள் இடம்பெறுகின்றன. அவற்றுள் புறநானூறு-1 என்னும் இப்பாடத்தில் 2, 9, 10, 30, 47, 50, 74 என்ற எண்ணுடைய ஏழு செய்யுட்களின் விளக்கம் கூறப் பெறுகின்றது.

இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?

1. சங்க காலம் எனப்பெறும் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட காலத்தில்     தமிழ் இலக்கியங்கள் எங்ஙனம் படைக்கப்பட்டன என அறியலாம்.

2. பழந்தமிழ் இலக்கியமாகிய சங்க இலக்கியம், அக இலக்கியம் (அகம்) புற இலக்கியம் (புறம்) என்ற இரு பகுப்புடையது. இவற்றில் புற இலக்கியம் எத்தகையது என அறியலாம்.

3. பண்டைக் காலத் தமிழர்களின் வீரம், மானம், கொடை, ஒப்புரவு, வலிமை, வறுமை, சமூகச்சூழல், அரசியல், அறநோக்கு, புகழ் விருப்பம் ஆகிய புறப்பொருளை அறியலாம்.

4. பழந்தமிழ்ப் பாவலர்களின் மொழியாற்றல், செய்யுள் புனையும் கலை, கற்பனைப்பாங்கு, கருத்துப் புலப்பாட்டு உத்தி, வாய்மை, அஞ்சாமை, ஆளுமை ஆகியவற்றை அறியலாம்.