தலைவி தன் முன் வந்து நிற்க, அவளை
உற்றுநோக்கிய தோழி, அவளின் காதல் உண்மையை
உணர்தல் முன்னுற உணர்தல் எனப்படும்.
பாங்கற் கூட்டத்தின்போது தலைவனைக் கூடி மீண்ட
தலைவி தோழி முன் வந்து நிற்பாள். அப்போது தலைவியின்
வேறுபாட்டைக் கண்டு, களவு ஒழுக்கம் நிகழ்ந்துள்ளது என்ற
உண்மையைத் தோழி அறிவாள். இதுவே முன்னுற உணர்தல்
ஆகும். இது மூன்று உட்பிரிவுகளை உடையது.
- ஐயப்படுதல்.
- ஐயம் தீர்தல்
- சொல்லால் ஆராய்தல்
என்பன அவை.
ஐயப்படுதல், ஐயம் தீர்தல்
தலைவியிடம் காணப்படும் மணம் (நாற்றம்), அவளது
தோற்றத்தில் நிகழ்ந்துள்ள புதிய மாற்றம், தலைவி பின்பற்றும்
புதிய செயல்கள் (ஒழுக்கம்), உண்ணும் உணவின் அளவு
குறைதல், தலைவி தன் செயலைத் தோழியிடம் மறைத்தல்,
தோழியர் கூட்டத்தை விட்டு அவ்வப்போது பிரிதல்,
குறிப்பிட்ட ஓரிடத்திலேயே எப்போதும் இருத்தல் (பயில்வு)
முதலான ஏழு வகையிலும் தலைவியின் களவு ஒழுக்கம்
பற்றிய ஐயம் தோழிக்கு ஏற்படும். அவற்றினைக் கொண்டே
களவு உண்மையைப் பற்றிய ஐயம் தீர்தலும் நிகழும்.
குறிப்பு : உணவு குறைதல் ஐயத்தை ஏற்படுத்தும் :
நோய்வாய்ப் படல் முதலான எந்தக் காரணமும் இன்றி
உணவு குறையும்போது அது காதலால் (களவால்) நிகழ்ந்த
மாற்றம் என்று ஐயம் தீர்ந்து, தெளிவும் ஏற்படும்.
இவ்வாறே மற்றவற்றையும் எண்ணிப்பார்த்தல் வேண்டும்.
சொல்லால் ஆராய்தல்
தோழி, தலைவியை நோக்கிச் சொல்லும் சொற்களால்
அவளது களவு ஒழுக்கத்தை உணர முயல்வதும்,
உணர்ந்துள்ளதைச் சுட்டிக் கட்டுவதும் உண்டு. நீர்ச்
சுனையைப் புகழ்தல், வியத்தல், தலைவியின் புற அழகு
மாற்றத்தைப் புனைந்து உரைத்தல் என்பன போன்ற
உரையாடல்கள் வழி, தலைவியின் களவு ஒழுக்கத்தைத்
தோழி உணர்வாள்.
“மலை அணங்கே! சிவந்த கண்ணும் வெளுத்த வாயும்
இல்லை எனில் எங்கள் தலைவியும் உன்னைப் போன்றவளே”
என்று தோழி கூறுவதாக வரும் தஞ்சைவாணன் கோவைப்
பாடல் (எண். 67) இதற்குச் சான்றாகும். (கண் சிவப்பதும்,
வாய் வெளுப்பதும் களவுக் கூட்டத்தினால் தலைவிக்கு
நிகழ்ந்த மாற்றம், அதைக் குறிப்பிட்டுச் சொல்லாடல்
நிகழ்த்தினாள் தோழி)
|