6.4 வரைவிடை வைத்துப் பொருள்வயின் பிரிதல்

திருமணத்தை முன்வைத்து அதற்குத் தேவைப்படும் பொருளீட்டுதல் காரணமாக, தலைவன் தலைவியைப் பிரிந்து செல்லுதல் வரைவிடை வைத்துப் பொருள்வயின் பிரிதல் எனப்படும்.

6.4.1 வரைவிடை வைத்துப் பொருள்வயின் பிரிதலின் வகைகள்

வரைவிடை வைத்துப் பொருள்வயின் பிரிதல் ஒன்பது வகைகளை உடையது. அவையாவன:

  1. பிரிவு அறிவுறுத்தல்
  2. பிரிவு உடன்படாமை
  3. பிரிவு உடன்படுத்தல்
  4. பிரிவு உடன்படுதல்
  5. பிரிவுழிக் கலங்கல்
  6. வன்புறை
  7. வன்பொறை
  8. வரும்வழிக் கலங்கல்
  9. வந்துழி மகிழ்ச்சி
  • பிரிவு அறிவுறுத்தல்
  • திருமணத்தை முன் வைத்து, பொருளீட்டுதல் காரணமாகத் தான் பிரியப்போகும் செய்தியைத் தலைவிக்குத் தெரிவிக்கும்படி தோழியிடம் தலைவன் கூறுதல் பிரிவு அறிவுறுத்தல் எனப்படும்.

  • பிரிவு உடன்படாமை
  • திருமணத்தை முன்வைத்து, பொருளீட்டுதல் காரணமாகத் தலைவன் பிரிவதைத் தோழி உடன்படாமல் தலைவனிடம் மறுத்துக் கூறுதல் பிரிவு உடன்படாமை எனப்படும்.

  • பிரிவு உடன்படுத்தல்
  • உரிய காரணங்களையும் சென்று வரவேண்டியதன் இன்றியமையாமையையும் எடுத்துக் கூறிய தலைவன் தனது பிரிவைத் தோழி உடன்படுமாறு செய்தல் பிரிவு உடன்படுத்தல் எனப்படும்.

  • பிரிவு உடன்படுதல்
  • உரிய காரணங்களையும் சென்று வரவேண்டியதன் இன்றியமையாமையையும் தலைவன் எடுத்துரைக்க, அதை உணர்ந்த தோழி தலைவனது பிரிவை உடன்படுதல் பிரிவு உடன்படுதல் எனப்படும்.

  • பிரிவுழிக் கலங்கல்
  • வரைவிடை வைத்துப் பொருள் ஈட்டுதல் காரணமாகத் தலைவன் பிரிந்து செல்ல, அதனால் தலைவி மனம் கலங்கி இருத்தல் பிரிவுழிக் கலங்கல் எனப்படும்.

  • வன்புறை
  • தலைவனது பிரிவு அவசியமானது; அப்பிரிவை ஏற்றுப் பொறுத்து ஆற்றியிருத்தலே பொருத்தமுடையது என்று தோழி தலைவியிடம் வற்புறுத்திக் கூறுதல் வன்புறை எனப்படும்.

  • வன்பொறை
  • தலைவி தோழியின் சொற்களைக் கேட்டு ஆற்றி இருத்தல், வன்பொறை ஆகும். (பொறை - பொருத்துக்கொள்ளுதல்)

  • வரும்வழிக் கலங்கல்
  • பொருள்வயின் பிரிவு மேற்கொண்ட தலைவன், தன்பணி முடித்துத் திரும்புகிறான். திரும்பும் வழியில் தன் பிரிவால் தலைவிக்கு ஏற்பட்டிருக்கும் வருத்தம் - கலக்கம் - தாங்க இயலாத தன்மைகளை எண்ணி மனம் கலங்குகிறான். இதுவே வரும்வழிக் கலங்கல் எனப்படும்.

  • வந்துழி மகிழ்ச்சி
  • பொருளீட்டிக் கொண்டு திரும்பிவரும் வழியெங்கும் வருந்தியவாறே வந்த தலைவன் மீண்டு வந்ததும் அவனைக் கண்ட தலைவி மனம்மகிழ்தல் வந்துழி மகிழ்ச்சி எனப்படும்.

    6.4.2 வரைவிடைவைத்துப் பொருள்வயின் பிரிதலின் விரிவுச் செய்திகள்

    மேற்கண்டவாறு ஒன்பது வகைப்பாடுகளை உடைய வரைவிடைவைத்துப் பொருள்வயின் பிரிதல் என்பது 21 விரிவுச்செய்திகளையும் உடையதாகும். என் பொருள் பிரிவு உணர்த்து ஏந்திழைக்கு என்பது முதலாக ஆற்றுவித்திருந்தமை பாங்கி கூறலும் என்பது ஈறாக அவ்விரிவுச் செய்திகள் அமைந்துள்ளன. அவற்றை வகைப்பாடுகளின் அடிப்படையில் காண்போம்.

  • பிரிவு அறிவுறுத்தலுக்கு உரியது
    1. ‘பொருள் காரணமாகப்பிரியும் என் பிரிவைத் தலைவிக்கு உணர்த்துக’ என்று தலைவன் தோழியிடம் கூறுதல்.
    2. தோழி தலைவி்க்குத் தலைவனின் பொருள்வயின் பிரிவை உணர்த்துதல்.
  • பிரிவு உடன்படாமைக்கு உரியது
    1. தோழி ‘உன் பொருட்பிரிவை நீயே தலைவியிடம் சொல்’ என்று தலைவனிடம் மறுத்துப் பேசுவது.
  • பிரிவு உடன்படுத்தல், பிரிவு உடன்படுதலுக்கு உரியது
    1. ‘பொருள்வயின் பிரிவில் நெடுங்காலம் நீட்டித்து இருக்கமாட்டேன். விரைவில் திரும்பி வருவேன்’ என்று தலைவன் தோழியிடம் கூறுதல்.
  • பிரிவுழிக் கலங்கலுக்கு உரியவை
    1. தலைவி தலைவன்பிரிவுக்குவருந்துதல்.
    2. பாங்கி தலைவியிடம் கொடிய சொற்களைப் பேசுதல்.
    3. மழைக்காலம் வந்ததாகக் கருதித் தலைவி புலம்புதல்.
    4. மழைக்காலம் வந்ததாகத் தோன்றுவது மாயத் தோற்றம் என்று கூறிய தோழியைத் தலைவி மறுத்துப் பேசுதல்.
    5. பொருளீட்டச் சென்ற இடத்தில் தலைவன் புலம்புதல்.
  • வன்புறைக்கு உரியவை
    1. தலைவி கொடுஞ்சொற்களைச்சொல்லுதல்.
    2. தலைவன் விரைந்து மீண்டு வருவான் எனத் தோழி சொல்லுதல்.
    3. பருவம் வந்ததாகத் தோன்றுவது மாயத் தோற்றமே என்று தோழி கூறுதல்.
    4. தலைவனது வரவை அறிவிக்கும் தூதுவனாகவே கார்காலம் வந்தது என்று தோழி கூறுதல்.
  • வன்பொறைக்கு உரியது
    1. தலைவி தோழியின் வார்த்தைகளைக் கேட்டு ஆற்றியிருத்தல்.
  • வரும்வழிக் கலங்கலுக்கு உரியவை
    1. பொருளீட்டி மீண்டு வரும் தலைவன் தேர்ப்பாகனிடம் பேசுதல்.
    2. பொருளீட்டி மீண்டு வரும் தலைவன் மேகத்திடம்பேசுதல்.
  • வந்துழி மகிழ்ச்சிக்கு உரியவை
    1. தோழி வலம்புரிச் சங்கின் ஓசையைக் கேட்டு, தலைவன் வருகையைத் தலைவிக்குச் சொல்லுதல்.
    2. தலைவி வலம்புரிச் சங்கை வாழ்த்திக் கூறுதல்.
    3. திரும்பி வந்த தலைவனிடம் ‘பிரிந்திருந்த காலத்தில் எம்மை நினைத்தீரோ’ என்று தோழி வினவுதல்.
    4. ‘பிரிந்திருந்த காலத்தில்உம்மை யான் மறந்து அறியேன்’ என்று தலைவன் கூறுதல்.
    5. தலைவியைப் பொறுத்திருக்கச் செய்து அவளைக் காப்பாற்றிய அருமைப்பாட்டைத் தலைவனிடம் தோழி கூறுதல்.

    இவையாவும் வரைவிடைவைத்துப் பொருள்வயின் பிரிதலின் விரிவுச் செய்திகளாகும்.