2.4 மீட்சி |
செவிலித்தாய் தலைவியைத் தேடிச் சென்று காணாமல் திரும்பி வருதல் மீட்சி எனப்படும். உடன்போக்காகச் சென்ற தலைவனும் தலைவியும் மீண்டு வருதலையும் மீட்சி என்று குறிப்பிடுவர். இவ்விரு நிகழ்வுகளையும் உள்ளடக்கியதாக அமையும் மீட்சி என்பது நான்கு வகைகளை உடையது. |
|
உடன் போக்காகச் சென்ற தலைவியைத் தேடிக் காணாமல் திரும்பி வந்த செவிலித்தாய் நற்றாயிடம் ‘தலைவி நெடுந்தூரம் சென்று விட்டாள்’ என்று கூறி அவளைத் தெளிவித்தல் தெளித்தல் எனப்படும். அவ்வாறே தலைவன் மீண்டு வரும்போது தலைவியினது ஊர் நெருங்கிவிட்டதனைக் கூறுதலும், தெளித்தல் ஆகும். |
|
தலைவி தலைவனுடன் திரும்பி வருவதை, அவளுக்கு முன்னே செல்லும் சிலர் தோழியிடம் சென்று கூறுவர். அது கேட்டு, தோழி மகிழ்வாள்; உடனே தோழி சென்று நற்றாயிடம் கூறுவாள். அவளும் அதைக் கேட்டு மகிழ்வாள். இவ்விரண்டும் மகிழ்ச்சி என்னும் வகையின் விளக்கங்கள் ஆகும். |
|
தலைவி மீண்டு வருவதை அறிந்த நற்றாய் தன் மகளைத் தலைவன் நம் மனைக்குக் கொண்டு வருவானா அல்லது தன் நகர்க்கே கொண்டு செல்வானா என்று, வெறியாட்டு நிகழ்த்தும் வேலனிடம் கேட்பது வினாதல் எனப்படும். |
|
தலைவியின் வருகையை அவளுக்கு முன் சென்றோர் தோழியிடம் கூறுதல் செப்பல் எனப்படும். |
மேலே நான்கு வகைப்பட்டதாக உரைக்கப்பட்ட மீட்சி என்பது ஆறு வகைப்பட்ட விரிவுக் கிளவிகளைக் கொண்டதாகும். அவையாவன : |
(1) தலைவி நெடுந்தூரம் சென்றதைச் செவிலி நற்றாயிடம் கூறுதல். |
(2) திரும்பி வரும்போது தலைவன் தாம் தலைவியின் ஊரை நெருங்கி விட்டதைத் தலைவிக்கு கூறுதல். |
(3) தனது வருகையைத் தோழிக்கு அறிவிக்குமாறு தனக்கு முன் செல்கின்றவரிடம் தலைவி கூறுதல். |
(4) முன் சென்றோர் தோழிக்குத் தலைவியின் வருகையைத் தெரிவித்தல். |
(5) தலைவியின் வருகையைத் தெரிந்துகொண்ட தோழி அதனை நற்றாய்க்குக் கூறுதல். |
(6) தலைவியின் வருகையை உணர்ந்த நற்றாய் வேலனைப் பார்த்துத் தலைவன் தன் மகளுடன் இங்கு வருவானோ தன் நகர்க்கே செல்வானோ என்று வினவுதல். |
இவை யாவும் மீட்சியின் விரிவுக் கிளவிகளாக அமைகின்றன. |
ஒரு வகையில் மீட்சியின் நான்கு வகைகளுக்கான விளக்கவுரைகளாகவும் இவற்றைக் கொள்ளலாம். |