5.6 அகப்புறப் பெருந்திணை |
பெருந்திணை என்பது அகத்திணை இலக்கணத்திற்கு இசைந்ததாக - ஒத்து வருவதாக - ஏற்கத் தக்கதாக அமையும்போது அதனை அகப்பொருட் பெருந்திணை என்று குறிப்பிட்டனர். அதற்கு மாறாக, அகத்திணைக்கு அடங்காமல் - முரண்பட்டதாக அமையும் பெருந்திணைச் செய்திகளை அகப்புறப் பெருந்திணை என்று வகைப்படுத்தினர். |
நாற்கவிராச நம்பி அகப்புறப் பெருந்திணையின் பிரிவுகளாக எண்வகைப்பட்ட செய்திகளை விளக்கிச் சென்றுள்ளார். அவையாவன: |
1) மடலேறுதல் |
தன் குறை நீங்காத தலைவன் பனை மடலால் குதிரையைச் செய்து அதன் மீது ஏறி நின்று தன் விருப்பத்தை வெளிப்படுத்துதல். |
2) விடை தழாஅல் |
தலைவன் தான் விரும்பிய தலைவியை மணத்தல் பொருட்டு, ஆற்றல் மிகுந்த ஓர் எருதினைத் தழுவி அடக்குதல். இதனை ஏறு தழுவுதல் என்று கூறுவர். (விடை-எருது, ஏறு, காளை; தழாஅல்-தழுவுதல்) |
3) குற்றிசை |
தலைவன் தலைவியை முற்றிலுமாகத் துறந்து நிற்றல். |
4) குறுங்கலி |
தன்னை முற்றிலுமாகத் துறந்து நீங்கிய தலைவனைத் தலைவி பழிதூற்றிப் பேசுதல். |
5) சுரநடை |
தலைவியோடு சென்ற தலைவன் இடைவழியில் அவளை இழந்து அதற்காக வருந்துதல். |
6) முதுபாலை |
தலைவனோடு சென்ற தலைவி இடைவழியில் அவனை இழந்து அதற்காகப் புலம்புதல். |
7) தாபதநிலை |
தலைவனை இழந்த தலைவி மேற்கொள்ளும் தவ வாழ்க்கை. |
8) தபுதார நிலை |
தலைவியை இழந்த தலைவன் மேற்கொள்ளும் தனிமை வாழ்க்கை. |