5.7 அகப்பாட்டினுள் பாடப்படுவோர்

அகப்பாடல்களில் பாடப்படும் தலைவன் இரு நிலைப் பட்டவனாக அமைகிறான். இதனை அகப்பொருள் விளக்க நூலாசிரியர் கீழ்க்கண்டவாறு விளக்குகிறார்.

பாட்டுடைத் தலைவன் கிளவித்தலைவன் எனப்
பாட்டினுள் பாடப் படுவோர் இருவர் (245)

அவருள், உயர்ந்தோன் பாட்டுடைத் தலைவன் ஆகும் (246)

இந்நூற்பாக்களின்படி, அகப்பாட்டினுள் பாடப்படுவோர் பாட்டுடைத் தலைவன் - கிளவித்தலைவன் என இருநிலைப்பட்டவராக அமைகின்றனர்; இவ்விருவருள் உயர்ந்தோன் பாட்டுடைத் தலைவன் ஆவான்.

5.7.1 அகப்பாட்டினுள் பாடப்படுவோர் பெயர்கள்

அகப்பாட்டினுள் பாடப்படும் பாட்டுடைத்தலைவன், கிளவித் தலைவன் என்னும் இருவருக்கும் கூறப்படும் பெயர்கள் பல உள்ளன. அவற்றை நிலப்பெயர், வினைப்பெயர், பண்புப்பெயர், குலப்பெயர், இயற்பெயர் என்னும் ஐந்து பிரிவாக வகுத்துள்ளனர்.

இவற்றுள் இயற்பெயர் என்பது கிளவித் தலைவனுக்குக் கூறப்படுவதில்லை. ஏனைய நிலப்பெயர் முதலான நான்கு பெயர்கள் கூறப்படும். பாட்டுடைத் தலைவனுக்கு இயற்பெயர் உட்பட ஐந்து வகைப் பெயர்களும் கூறப்படும்.

ஐவகைப் பெயர்களுக்கும் சான்றுகளைக் காண்போம்.

1) நிலப்பெயர் :

மலைநாடன், ஊரன்

2) வினைப்பெயர் :

மலையைப் பிளந்தான், வேட்டுவன்

3) பண்புப்பெயர் :

நெடுஞ்சேரலாதன், பெருவழுதி, அண்ணல்

4) குலப்பெயர் :

சேரன், சோழன், பாண்டியன், குறவன், ஆயன்

5) இயற்பெயர்

:

அவரவர் பெற்றோர், ஆசிரியர் வைத்த குறியீட்டுப் பெயர்.