6.2 வரையறைகள்

அகப்பொருள் இலக்கணத்தில் பயன்படுத்தப்படும் கலைச்சொற்களுக்கு உரிய விளக்கங்கள் கீழே தரப்பட்டுள்ளன.

(1)

முதற்பொருள் :

நிலமும், அதைச் சார்ந்த பொழுதுகளும்

(2)

சிறு பொழுது :

ஒரு நாளின் ஐவகைப்பட்ட கூறுபாடு

(3)

பெரும் பொழுது :

ஓர் ஆண்டின் அறுவகைப்பட்ட உட்பிரிவுகள்

(4)

கருப்பொருள் :

ஐவகை நிலங்களில் இடம் பெறும் உயிருள்ள, உயிரற்ற பொருள்கள்.

(5)

உரிப்பொருள் :

ஐவகைப்பட்ட நிலத்திற்குரிய ஒழுக்கம்.

(6)

நிமித்தம் :

அகப்பொருள், உரிப்பொருள் (ஒழுக்கம்) தொடர்பான முன் பின் செயல்பாடுகள்

(7)

கைகோள் :

தலைவன் தலைவி இருவரும் கைக்கொள்ளும் ஒழுக்க நடைமுறைகள்

(8)

களவு :

மறைமுகக் காதல் வாழ்க்கை

(9)

கற்பு :

வரைவு என்னும் திருமணத்திற்குப் பிந்தைய இல்லற வாழ்க்கை

(10)

கைக்கிளை :

தலைமக்களில் ஒருவருக்குத் தோன்றும் காதல்

(11)

பெருந்திணை :

பொருத்தம் இல்லாத காதல்

(12)

குறிப்பறிதல் :

தலைவிக்குத் தன் மீது விருப்பம் உள்ளதா என்பதை அவளது பார்வை வழியாகத் தலைவன் புரிந்து கொள்ளுதல்.

(13)

இயற்கைப் புணர்ச்சி :

தலைவனும் தலைவியும் முதன் முதலாகத் தாமே கண்டு கூடுவது.

(14)

இடம் தலைப்பாடு :

தலைமக்கள் கூடி மகிழ்ந்த குறிப்பிட்ட இடத்திலேயே மீண்டும் (மறுநாளும்) சந்திப்பது.

(15)

பாங்கன் கூட்டம் :

தலைவன், தன் தோழன் மூலமாகத் தலைவியைச் சந்தித்து மகிழ்வது.

(16)

பாங்கியிற் கூட்டம் :

தலைவன் தோழி மூலமாகத் தலைவியைச் சந்தித்து மகிழ்வது.

(17)

உள்ளப் புணர்ச்சி :

தலைமக்கள் இருவரும் உள்ளத்தால் ஒன்றுபட்டு மகிழ்தல்.

(18)

மெய்யுறு புணர்ச்சி :

உள்ளத்தால் அன்பு கலந்து ஒன்றிய தலைமக்கள் இருவரும் உடலால் சேரும் சேர்க்கை

(19)

பூத்தரு புணர்ச்சி :

தலைமகன் தலைவியின் கூந்தலில் மலர்க் கொத்தைச் சூட, அவனையே தலைவனாகத் தலைவி மனத்தளவில் முடிவு செய்தல்.

(20)

புனல் தரு புணர்ச்சி :

தலைவி ஆற்று வெள்ளத்தில் மகிழ்ந்து நீராட, அப்போது நிகழ்ந்த இடையூற்றில் இருந்து மீட்ட ஆடவனையே தனக்குரிய காதல் தலைவனாகக் கொள்ளுதல்.

(21)

களிறு தரு புணர்ச்சி :

தலைவி தினைப் புனம் காவல் புரிந்த காலத்தில் களிறு (யானை) ஒன்றின் தாக்குதலில் இருந்து தன்னைக் காத்தவனையே தலைவனாக ஏற்றல்.

(22)

மதியுடன்பாடு :

தலைவியின் களவுக் காதலைத் தோழி அறிந்து கொள்ளுதல்.

(23)

நேர்தல் :

பாங்கன், தலைவனது கருத்துக்கு உடன்பட்டு, செயல்பட முடிவு செய்தல்.

(24)

முன்னுற உணர்தல் :

தலைவியை, உற்றுநோக்கி, தோழி அவளது காதலை உணர்தல்.

(25)

குறையுற உணர்தல் :

தலைவன் வந்து தன் குறையைக் கூற, அதன் வழித் தோழி தலைவியின் காதலை உணர்தல்.

(26)

சேட்படை :

தலைவனது வேண்டுகோளைத் தலைவி உடனடியாக ஏற்காமல் மறுப்பது.

(27)

குறைநயப்பித்தல் :

தலைவனின் மனக்குறையைத் தோழி ஏற்றல்.

(28)

மடல் :

பனை ஓலையால் செய்யப்பட்ட குதிரை வடிவம்.

(29)

மடல் கூற்று :

தலைவன் தலைவி மீது தனக்குள்ள காதலைப் புலப்படுத்தி மடலேறுவேன் என்று சொல்வது.

(30)

மடல் விலக்கு :

தலைவன் மடலேறுதல் கூடாது என்று தோழி தடுத்துப் பேசுவது.

(31)

குறி இடம் :

தலைவனும் தலைவியும் சந்திக்கும் இடம்.

(32)

பகற்குறி :

பகலில் தலைமக்கள் சந்திக்கும் இடம்.

(33)

இரவுக் குறி :

இரவில் தலைமக்கள் சந்திக்கும் இடம்

(34)

குறி இடையீடு :

தலைமக்கள் குறியிடத்தில் சந்திக்கும் நிலைக்கு ஏற்படும் இடர்ப்பாடு.

(35)

அல்லகுறிப் படுதல் :

இரவுக் குறியில் தலைவனது வருகைக்கான அறிவிப்பைப் பிழையாகப் புரிந்துகொண்டு ஏமாற்றம் அடைதல்.

(36)

அறத்தொடு நிற்றல் :

தலைவியின் காதலை உரியவருக்கு உரியவாறு எடுத்துரைத்துக் கற்பு வாழ்வை மலரச் செய்யும் அருஞ்செயல்.

(37)

முன்னிலை மொழி :

ஒரு செய்தியை நேரடியாக உரியவரிடம் கூறுதல்.

(38)

முன்னிலைப் புறமொழி :

ஒரு செய்தியை உரியவரிடம் நேரடியாகக் கூறாமல் அவர் முன்னிலையில் வேறு யாருக்கோ கூறுவது போலச் சொல்லுதல்.

(39)

இற்செறிப்பு :

தலைவி வெளியில் செல்லாதவாறு வீட்டுக் காவலில் வைத்தல்.

(40)

அறப்புறம் காவல் :

அறமன்றங்கள், ஆலயங்கள் முதலானவற்றைப் பாதுகாப்பதற்காகத் தலைவியைப் பிரிவது.

(41)

வாயில்கள் :

தலைவியின் ஊடலை நீக்கி மீண்டும் தலைவனை ஒன்று சேர்க்கும் செயல் புரிபவர்கள்.

(42)

வரைவு கடாதல் :

தோழியோ தலைவியோ, தலைவனிடம் திருமணத்தை வற்புறுத்துதல்.

(43)

வரைவு மலிதல் :

திருமணம் தொடர்பான முயற்சிகள் தொடங்கி, தொடர்ந்து நடக்கும் நிகழ்ச்சிகள்.

(44)

ஆற்றாமை :

தலைவனது பிரிவைத் தாங்காமல் தலைவி வருந்துதல்.

(45)

உவர்த்தல் :

தலைவனது களவுத் தொடர்பை - அதுவே தொடர்வதைத் தோழி வெறுத்தல்.

(46)

செலவு அழுங்குதல் :

தலைவன், தலைவியைப் பிரிந்து செல்லும் செயல்பாட்டை உடனே மேற்கொள்ளாமல் தாமதப்படுத்துதல்.

(47)

வன்புறை - 1 :

தலைவியின் ஐயத்தைத் தீர்க்கும் நோக்கில் தலைவன் உண்மையை வற்புறுத்திக் கூறுதல்.

(48)

வன்புறை - 2 :

தோழி, தலைவியை இடித்துரைத்து அறிவுரை கூறுதல்.

(49)

வன்புறை - 3 :

தலைவனது பிரிவு அவசியமானது; அதனை ஏற்றுப் பொறுத்திருத்தலே பொருத்தமுடையது என்று தோழி கூறுதல்.

(50)

வன்பொறை :

தலைவி, தன் மெல்லிய இயல்பிற்கு மாறாகத் தோழியின் அறிவுரைகளுக்குப் பிறகு, தலைவனது பிரிவைப் பொறுத்துக் கொண்டிருத்தல்.

(51)

மருளுற்று உரைத்தல் :

தலைவி பிரிந்து சென்றபோது தலைவன் மயக்கம் கொண்டு பேசுதல்.

(52)

தெருளுற்று உரைத்தல் :

தலைவி பிரிந்து சென்றபோது தலைவன் தெளிவு பெற்றுப் பேசுதல்.

(53)

தெய்வம் தெளிதல் :

இயற்கைப் புணர்ச்சியில் தலைவியைத் தன்னோடு இணைத்த தெய்வம் இடந்தலைப்பாட்டிலும் அவ்வாறு செய்யும் என்று தலைவன் தெளிவுடன் பேசுதல்.

(54)

விடை தழாஅல் :

தலைவன் ஆற்றல் மிகுந்த ஓர் எருதினைத் தழுவி அடக்குதல். இதனை ஏறு தழுவுதல் என்றும் கூறுவர்.

(55)

குற்றிசை :

தலைவன் தலைவியை முற்றிலுமாகத் துறந்து நிற்றல்.

(56)

குறுங்கலி :

தன்னை முற்றிலுமாகத் துறந்து நீங்கிய தலைவனைத் தலைவி பழிதூற்றிப் பேசுதல்.

(57)

சுரநடை :

தலைவியோடு சென்ற தலைவன் இடைவழியில் அவளை இழந்து அதற்காக வருந்துதல்.

(58)

முதுபாலை :

தலைவனோடு சென்ற தலைவி இடைவழியில் அவனை இழந்து அதற்காகப் புலம்புதல்.

(59)

தாபத நிலை :

தலைவனை இழந்த தலைவி மேற்கொள்ளும் தவ வாழ்க்கை.

(60)

தபுதார நிலை :

தலைவியை இழந்த தலைவன் மேற்கொள்ளும் தனிமை வாழ்க்கை.

(61)

போக்கு :

தலைவன் தலைவியை தன்னுடன் அழைத்துக் கொண்டு செல்லுதல். இதுவே உடன்போக்கு என்றும் கூறப்படும்.

(62)

கற்பொடு புணர்ந்த கவ்வை :

தலைவியின் காதலைப் பற்றிப் பலர் பேசும் அலர் எழுந்து அதன் தொடர்ச்சியாய் நிகழும் நிகழ்ச்சிகள்.

(63)

மனை மருட்சி :

இதனை அனை மருட்சி என்றும் கூறுவர். நற்றாய் தன் வீட்டில் இருந்து கொண்டு தலைவியின் பிரிவிற்காக வருந்துதல்.

(64)

மீட்சி - (1) :

உடன்போக்காகச் சென்ற தலைவியைத் தேடிச் சென்ற செவிலி அவளைக் காணாமல் திரும்பி வருதல்.

(65)

மீட்சி - (2) :

உடன்போக்காகச் சென்ற தலைவனும் தலைவியும் மீண்டு வருதல்.

(66)

பிரமம் :

தகுதியுடைய பிரம்மசாரிக்குப் பெண்ணைக் கொடுப்பது.

(67)

பிரசாபத்தியம் :

தலைவன் தலைவி இருவரது பெற்றோரும், உடன்பட்டுத் திருமணம் செய்து வைப்பது.

(68)

ஆரிடம் :

ஒன்றோ இரண்டோ பசுவும், காளையும் தானமாகப் பெற்றுக் கொண்டு பெண்ணைக் கொடுப்பது.

(69)

தெய்வம் :

வேள்விகள் பலவும் இயற்றும் ஓர் வேள்வி ஆசிரியனுக்குப் பெண்ணைக் கொடுப்பது.

(70)

கந்தர்வம் :

கொடுப்போரும், கேட்போரும் இன்றித் தலைமகனும், தலைமகளும் தனி இடத்தில் எதிர்ப்பட்டுத் தாமே கூடி இன்புறுவது.

(71)

ஆசுரம் :

பெண்ணின் தந்தைக்குப் பணம் கொடுத்து, பெண்ணுக்கும் அணிகலன்களை அணிவித்து, அப்பெண்ணை வாங்கி மணந்து கொள்வது.

(72)

இராக்கதம் :

தலைவியை அவளது விருப்பமோ அவளது உறவினர் ஒப்புதலோ இன்றி அடைவது.

(73)

பைசாசம் :

உறங்கிய பெண், (கள் உண்டு) களித்திருக்கும் பெண், பித்துப்பிடித்த பெண் முதலானவர்களுடன் கூடிக் களிப்பது.

(74)

செவ்வணி :

பூப்பெய்திய தலைவி நீராடியதை அறிவிக்கச் செய்யும் முறை. தோழிக்குச் சிவப்பு ஆடையும், சிவந்த அணி மணிகளும் அணிவித்தல்.

(75)

வெள்ளணி :

புதல்வனைப் பெற்றுப் பதினைந்து நாள்கள் கடந்து நெய்யாடுதல் முடிந்தமையைத் தோழி மூலமாகத் தலைவனுக்கு உணர்த்துதல். தோழிக்கு வெள்ளாடை, வெள்ளை அணிகளை அணிவித்தல்.

(76)

புனைந்துரை :

அகப்பாடலின் நாடகப் பாங்கினைக் குறிப்பது, கற்பனையானது.

(77)

உலகியல் :

உலகியல்பை உள்ளவாறே அகப்பாடலில் அமைப்பது.

(78)

பாலது ஆணை :

முன்பின் அறிமுகம் இல்லாத தலைவன் தலைவியை ஒன்று சேர்த்து வைக்கும் ஊழ்.

(79)

யாழோர் கூட்டம் :

கந்தர்வர் எனப்படும், வானில் திரியும் தலைமக்கள் கூடி மகிழ்வது.

(80)

கிளவித் தொகை :

அகப்பொருள் செய்திகளைப் பிரித்து விளக்கும் துறைத் தொகுதி.

(81)

கிளவித் தலைவன் :

அகப்பாடலில் இயற்பெயர் சுட்டப் படாமல் இடம்பெறும் தலைவன்.

(82)

பயன் :

அகப்பாடலில் ஒருவர் கூற்று நிகழ்த்த அதனால் அடையும் பயன்.

(83)

முன்னம் :

ஓர் அகப்பாடல் குறிப்பாக உணர்த்தும் செய்தி.

(84)

மெய்ப்பாடு :

உள்ளத்து உணர்வுகள் பேச்சில் வெளிப்படுவதன் முன்னர் உடல் வழியாகப் வெளிப்படுவது.

(85)

எச்சம் :

சொல்லோ, கருத்தோ விடுபட்டு நின்று அதையும் உணர்ந்து பொருள் கொள்ளும் இலக்கண அமைப்பு.

(86)

உள்ளுறை :

புலவன் தான் சொல்லுகிற உவமத்தோடு ஒத்த வேறொரு பொருள் புலப்படுமாறு அமைக்கும் அணி அழகு.

(87)

இறைச்சி :

புலவன் செய்யுளில் கூறிய பொருளுக்குப் புறத்தேயும் வேறு ஓர் கருத்து புலப்படச் செய்வது.

(88)

திணை மயக்கம் :
முதற்பொருளும், கருப்பொருளும் ஒரே திணைக்கு உரியதாக அமைய, உரிப்பொருளாகிய ஒழுக்கம் வேறொரு திணைக்குரியதாக மாறியிருப்பது.