6.2 வரையறைகள் |
|||
அகப்பொருள் இலக்கணத்தில் பயன்படுத்தப்படும் கலைச்சொற்களுக்கு உரிய விளக்கங்கள் கீழே தரப்பட்டுள்ளன.
|
|||
(1) |
முதற்பொருள் | : | நிலமும், அதைச் சார்ந்த பொழுதுகளும்
|
(2) |
சிறு பொழுது | : | ஒரு நாளின் ஐவகைப்பட்ட கூறுபாடு
|
(3) |
பெரும் பொழுது | : | ஓர் ஆண்டின் அறுவகைப்பட்ட உட்பிரிவுகள்
|
(4) |
கருப்பொருள் | : | ஐவகை நிலங்களில் இடம் பெறும் உயிருள்ள, உயிரற்ற பொருள்கள்.
|
(5) |
உரிப்பொருள் | : | ஐவகைப்பட்ட நிலத்திற்குரிய ஒழுக்கம்.
|
(6) |
நிமித்தம் | : | அகப்பொருள், உரிப்பொருள் (ஒழுக்கம்) தொடர்பான முன் பின் செயல்பாடுகள்
|
(7) |
கைகோள் | : | தலைவன் தலைவி இருவரும் கைக்கொள்ளும் ஒழுக்க நடைமுறைகள்
|
(8) |
களவு | : | மறைமுகக் காதல் வாழ்க்கை
|
(9) |
கற்பு | : | வரைவு என்னும் திருமணத்திற்குப் பிந்தைய இல்லற வாழ்க்கை
|
(10) |
கைக்கிளை | : | தலைமக்களில் ஒருவருக்குத் தோன்றும் காதல்
|
(11) |
பெருந்திணை | : | பொருத்தம் இல்லாத காதல்
|
(12) |
குறிப்பறிதல் | : | தலைவிக்குத் தன் மீது விருப்பம் உள்ளதா என்பதை அவளது பார்வை வழியாகத் தலைவன் புரிந்து கொள்ளுதல்.
|
(13) |
இயற்கைப் புணர்ச்சி | : | தலைவனும் தலைவியும் முதன் முதலாகத் தாமே கண்டு கூடுவது.
|
(14) |
இடம் தலைப்பாடு | : | தலைமக்கள் கூடி மகிழ்ந்த குறிப்பிட்ட இடத்திலேயே மீண்டும் (மறுநாளும்) சந்திப்பது.
|
(15) |
பாங்கன் கூட்டம் | : | தலைவன், தன் தோழன் மூலமாகத் தலைவியைச் சந்தித்து மகிழ்வது.
|
(16) |
பாங்கியிற் கூட்டம் | : | தலைவன் தோழி மூலமாகத் தலைவியைச் சந்தித்து மகிழ்வது.
|
(17) |
உள்ளப் புணர்ச்சி | : | தலைமக்கள் இருவரும் உள்ளத்தால் ஒன்றுபட்டு மகிழ்தல்.
|
(18) |
மெய்யுறு புணர்ச்சி | : | உள்ளத்தால் அன்பு கலந்து ஒன்றிய தலைமக்கள் இருவரும் உடலால் சேரும் சேர்க்கை
|
(19) |
பூத்தரு புணர்ச்சி | : | தலைமகன் தலைவியின் கூந்தலில் மலர்க் கொத்தைச் சூட, அவனையே தலைவனாகத் தலைவி மனத்தளவில் முடிவு செய்தல்.
|
(20) |
புனல் தரு புணர்ச்சி | : | தலைவி ஆற்று வெள்ளத்தில் மகிழ்ந்து நீராட, அப்போது நிகழ்ந்த இடையூற்றில் இருந்து மீட்ட ஆடவனையே தனக்குரிய காதல் தலைவனாகக் கொள்ளுதல்.
|
(21) |
களிறு தரு புணர்ச்சி | : | தலைவி தினைப் புனம் காவல் புரிந்த காலத்தில் களிறு (யானை) ஒன்றின் தாக்குதலில் இருந்து தன்னைக் காத்தவனையே தலைவனாக ஏற்றல்.
|
(22) |
மதியுடன்பாடு | : | தலைவியின் களவுக் காதலைத் தோழி அறிந்து கொள்ளுதல்.
|
(23) |
நேர்தல் | : | பாங்கன், தலைவனது கருத்துக்கு உடன்பட்டு, செயல்பட முடிவு செய்தல்.
|
(24) |
முன்னுற உணர்தல் | : | தலைவியை, உற்றுநோக்கி, தோழி அவளது காதலை உணர்தல்.
|
(25) |
குறையுற உணர்தல் | : | தலைவன் வந்து தன் குறையைக் கூற, அதன் வழித் தோழி தலைவியின் காதலை உணர்தல்.
|
(26) |
சேட்படை | : | தலைவனது வேண்டுகோளைத் தலைவி உடனடியாக ஏற்காமல் மறுப்பது.
|
(27) |
குறைநயப்பித்தல் | : | தலைவனின் மனக்குறையைத் தோழி ஏற்றல்.
|
(28) |
மடல் | : | பனை ஓலையால் செய்யப்பட்ட குதிரை வடிவம்.
|
(29) |
மடல் கூற்று | : | தலைவன் தலைவி மீது தனக்குள்ள காதலைப் புலப்படுத்தி மடலேறுவேன் என்று சொல்வது.
|
(30) |
மடல் விலக்கு | : | தலைவன் மடலேறுதல் கூடாது என்று தோழி தடுத்துப் பேசுவது.
|
(31) |
குறி இடம் | : | தலைவனும் தலைவியும் சந்திக்கும் இடம்.
|
(32) |
பகற்குறி | : | பகலில் தலைமக்கள் சந்திக்கும் இடம்.
|
(33) |
இரவுக் குறி | : | இரவில் தலைமக்கள் சந்திக்கும் இடம்
|
(34) |
குறி இடையீடு | : | தலைமக்கள் குறியிடத்தில் சந்திக்கும் நிலைக்கு ஏற்படும் இடர்ப்பாடு.
|
(35) |
அல்லகுறிப் படுதல் | : | இரவுக் குறியில் தலைவனது வருகைக்கான அறிவிப்பைப் பிழையாகப் புரிந்துகொண்டு ஏமாற்றம் அடைதல்.
|
(36) |
அறத்தொடு நிற்றல் | : | தலைவியின் காதலை உரியவருக்கு உரியவாறு எடுத்துரைத்துக் கற்பு வாழ்வை மலரச் செய்யும் அருஞ்செயல்.
|
(37) |
முன்னிலை மொழி | : | ஒரு செய்தியை நேரடியாக உரியவரிடம் கூறுதல்.
|
(38) |
முன்னிலைப் புறமொழி | : | ஒரு செய்தியை உரியவரிடம் நேரடியாகக் கூறாமல் அவர் முன்னிலையில் வேறு யாருக்கோ கூறுவது போலச் சொல்லுதல்.
|
(39) |
இற்செறிப்பு | : | தலைவி வெளியில் செல்லாதவாறு வீட்டுக் காவலில் வைத்தல்.
|
(40) |
அறப்புறம் காவல் | : | அறமன்றங்கள், ஆலயங்கள் முதலானவற்றைப் பாதுகாப்பதற்காகத் தலைவியைப் பிரிவது.
|
(41) |
வாயில்கள் | : | தலைவியின் ஊடலை நீக்கி மீண்டும் தலைவனை ஒன்று சேர்க்கும் செயல் புரிபவர்கள்.
|
(42) |
வரைவு கடாதல் | : | தோழியோ தலைவியோ, தலைவனிடம் திருமணத்தை வற்புறுத்துதல்.
|
(43) |
வரைவு மலிதல் | : | திருமணம் தொடர்பான முயற்சிகள் தொடங்கி, தொடர்ந்து நடக்கும் நிகழ்ச்சிகள்.
|
(44) |
ஆற்றாமை | : | தலைவனது பிரிவைத் தாங்காமல் தலைவி வருந்துதல்.
|
(45) |
உவர்த்தல் | : | தலைவனது களவுத் தொடர்பை - அதுவே தொடர்வதைத் தோழி வெறுத்தல்.
|
(46) |
செலவு அழுங்குதல் | : | தலைவன், தலைவியைப் பிரிந்து செல்லும் செயல்பாட்டை உடனே மேற்கொள்ளாமல் தாமதப்படுத்துதல்.
|
(47) |
வன்புறை - 1 | : | தலைவியின் ஐயத்தைத் தீர்க்கும் நோக்கில் தலைவன் உண்மையை வற்புறுத்திக் கூறுதல்.
|
(48) |
வன்புறை - 2 | : | தோழி, தலைவியை இடித்துரைத்து அறிவுரை கூறுதல்.
|
(49) |
வன்புறை - 3 | : | தலைவனது பிரிவு அவசியமானது; அதனை ஏற்றுப் பொறுத்திருத்தலே பொருத்தமுடையது என்று தோழி கூறுதல்.
|
(50) |
வன்பொறை | : | தலைவி, தன் மெல்லிய இயல்பிற்கு மாறாகத் தோழியின் அறிவுரைகளுக்குப் பிறகு, தலைவனது பிரிவைப் பொறுத்துக் கொண்டிருத்தல்.
|
(51) |
மருளுற்று உரைத்தல் | : | தலைவி பிரிந்து சென்றபோது தலைவன் மயக்கம் கொண்டு பேசுதல்.
|
(52) |
தெருளுற்று உரைத்தல் | : | தலைவி பிரிந்து சென்றபோது தலைவன் தெளிவு பெற்றுப் பேசுதல்.
|
(53) |
தெய்வம் தெளிதல் | : | இயற்கைப் புணர்ச்சியில் தலைவியைத் தன்னோடு இணைத்த தெய்வம் இடந்தலைப்பாட்டிலும் அவ்வாறு செய்யும் என்று தலைவன் தெளிவுடன் பேசுதல்.
|
(54) |
விடை தழாஅல் | : | தலைவன் ஆற்றல் மிகுந்த ஓர் எருதினைத் தழுவி அடக்குதல். இதனை ஏறு தழுவுதல் என்றும் கூறுவர்.
|
(55) |
குற்றிசை | : | தலைவன் தலைவியை முற்றிலுமாகத் துறந்து நிற்றல்.
|
(56) |
குறுங்கலி | : | தன்னை முற்றிலுமாகத் துறந்து நீங்கிய தலைவனைத் தலைவி பழிதூற்றிப் பேசுதல்.
|
(57) |
சுரநடை | : | தலைவியோடு சென்ற தலைவன் இடைவழியில் அவளை இழந்து அதற்காக வருந்துதல்.
|
(58) |
முதுபாலை | : | தலைவனோடு சென்ற தலைவி இடைவழியில் அவனை இழந்து அதற்காகப் புலம்புதல்.
|
(59) |
தாபத நிலை | : | தலைவனை இழந்த தலைவி மேற்கொள்ளும் தவ வாழ்க்கை.
|
(60) |
தபுதார நிலை | : | தலைவியை இழந்த தலைவன் மேற்கொள்ளும் தனிமை வாழ்க்கை.
|
(61) |
போக்கு | : | தலைவன் தலைவியை தன்னுடன் அழைத்துக் கொண்டு செல்லுதல். இதுவே உடன்போக்கு என்றும் கூறப்படும்.
|
(62) |
கற்பொடு புணர்ந்த கவ்வை | : | தலைவியின் காதலைப் பற்றிப் பலர் பேசும் அலர் எழுந்து அதன் தொடர்ச்சியாய் நிகழும் நிகழ்ச்சிகள்.
|
(63) |
மனை மருட்சி | : | இதனை அனை மருட்சி என்றும் கூறுவர். நற்றாய் தன் வீட்டில் இருந்து கொண்டு தலைவியின் பிரிவிற்காக வருந்துதல்.
|
(64) |
மீட்சி - (1) | : | உடன்போக்காகச் சென்ற தலைவியைத் தேடிச் சென்ற செவிலி அவளைக் காணாமல் திரும்பி வருதல்.
|
(65) |
மீட்சி - (2) | : | உடன்போக்காகச் சென்ற தலைவனும் தலைவியும் மீண்டு வருதல்.
|
(66) |
பிரமம் | : | தகுதியுடைய பிரம்மசாரிக்குப் பெண்ணைக் கொடுப்பது.
|
(67) |
பிரசாபத்தியம் | : | தலைவன் தலைவி இருவரது பெற்றோரும், உடன்பட்டுத் திருமணம் செய்து வைப்பது.
|
(68) |
ஆரிடம் | : | ஒன்றோ இரண்டோ பசுவும், காளையும் தானமாகப் பெற்றுக் கொண்டு பெண்ணைக் கொடுப்பது.
|
(69) |
தெய்வம் | : | வேள்விகள் பலவும் இயற்றும் ஓர் வேள்வி ஆசிரியனுக்குப் பெண்ணைக் கொடுப்பது.
|
(70) |
கந்தர்வம் | : | கொடுப்போரும், கேட்போரும் இன்றித் தலைமகனும், தலைமகளும் தனி இடத்தில் எதிர்ப்பட்டுத் தாமே கூடி இன்புறுவது.
|
(71) |
ஆசுரம் | : | பெண்ணின் தந்தைக்குப் பணம் கொடுத்து, பெண்ணுக்கும் அணிகலன்களை அணிவித்து, அப்பெண்ணை வாங்கி மணந்து கொள்வது.
|
(72) |
இராக்கதம் | : | தலைவியை அவளது விருப்பமோ அவளது உறவினர் ஒப்புதலோ இன்றி அடைவது.
|
(73) |
பைசாசம் | : | உறங்கிய பெண், (கள் உண்டு) களித்திருக்கும் பெண், பித்துப்பிடித்த பெண் முதலானவர்களுடன் கூடிக் களிப்பது.
|
(74) |
செவ்வணி | : | பூப்பெய்திய தலைவி நீராடியதை அறிவிக்கச் செய்யும் முறை. தோழிக்குச் சிவப்பு ஆடையும், சிவந்த அணி மணிகளும் அணிவித்தல்.
|
(75) |
வெள்ளணி | : | புதல்வனைப் பெற்றுப் பதினைந்து நாள்கள் கடந்து நெய்யாடுதல் முடிந்தமையைத் தோழி மூலமாகத் தலைவனுக்கு உணர்த்துதல். தோழிக்கு வெள்ளாடை, வெள்ளை அணிகளை அணிவித்தல்.
|
(76) |
புனைந்துரை | : | அகப்பாடலின் நாடகப் பாங்கினைக் குறிப்பது, கற்பனையானது.
|
(77) |
உலகியல் | : | உலகியல்பை உள்ளவாறே அகப்பாடலில் அமைப்பது.
|
(78) |
பாலது ஆணை | : | முன்பின் அறிமுகம் இல்லாத தலைவன் தலைவியை ஒன்று சேர்த்து வைக்கும் ஊழ்.
|
(79) |
யாழோர் கூட்டம் | : | கந்தர்வர் எனப்படும், வானில் திரியும் தலைமக்கள் கூடி மகிழ்வது.
|
(80) |
கிளவித் தொகை | : | அகப்பொருள் செய்திகளைப் பிரித்து விளக்கும் துறைத் தொகுதி.
|
(81) |
கிளவித் தலைவன் | : | அகப்பாடலில் இயற்பெயர் சுட்டப் படாமல் இடம்பெறும் தலைவன்.
|
(82) |
பயன் | : | அகப்பாடலில் ஒருவர் கூற்று நிகழ்த்த அதனால் அடையும் பயன்.
|
(83) |
முன்னம் | : | ஓர் அகப்பாடல் குறிப்பாக உணர்த்தும் செய்தி.
|
(84) |
மெய்ப்பாடு | : | உள்ளத்து உணர்வுகள் பேச்சில் வெளிப்படுவதன் முன்னர் உடல் வழியாகப் வெளிப்படுவது.
|
(85) |
எச்சம் | : | சொல்லோ, கருத்தோ விடுபட்டு நின்று அதையும் உணர்ந்து பொருள் கொள்ளும் இலக்கண அமைப்பு.
|
(86) |
உள்ளுறை | : | புலவன் தான் சொல்லுகிற உவமத்தோடு ஒத்த வேறொரு பொருள் புலப்படுமாறு அமைக்கும் அணி அழகு.
|
(87) |
இறைச்சி | : | புலவன் செய்யுளில் கூறிய பொருளுக்குப் புறத்தேயும் வேறு ஓர் கருத்து புலப்படச் செய்வது.
|
(88) |
திணை மயக்கம் | : | முதற்பொருளும், கருப்பொருளும் ஒரே திணைக்கு
உரியதாக அமைய, உரிப்பொருளாகிய ஒழுக்கம் வேறொரு திணைக்குரியதாக மாறியிருப்பது. |