1.4 புறப்பொருள் வெண்பா மாலை கூறும் பொருள்
தொல்காப்பியர், கைக்கிளை
முதலாப் பெருந்திணை
இறுவாயாக நின்ற ஏழு அகத்திணைகளுக்கும் புறத்திணைகள்
ஏழினைக் கூறினார். இந்நூலாசிரியர் ஐயனாரிதனார் பன்னிரு
படலத்தை நோக்கி இலக்கணம் செய்தார். ஆதலின் பன்னிரண்டு
திணைகளைக் கொண்டுள்ளார். அவை யாவன :
(1) |
வெட்சித் திணை |
(2) |
கரந்தைத் திணை |
(3) |
வஞ்சித் திணை |
(4) |
காஞ்சித் திணை |
(5) |
நொச்சித் திணை |
(6) |
உழிஞைத் திணை |
(7) |
தும்பைத் திணை |
(8) |
வாகைத் திணை |
(9) |
பாடாண் திணை |
(10) |
பொதுவியல் |
(11) |
கைக்கிளை |
(12) |
பெருந்திணை |
என்பனவாம்.
இத்திணைகளின் வரைவிலக்கணத்தையும்
அவ்வத்
திணைகளுள் வரும் துறைகளின் கருத்துகளையும் இனி வரும்
பாடங்களில் விரிவாகப் படிக்கலாம். ஆதலால், திணைகள் கூறும்
செய்தியைத் தொகுத்து நல்கும் பழஞ்செய்யுள் ஒன்றை மட்டுமே
இங்குத் தருவது போதுமானது.
வெட்சி
நிரைகவர்தல்; மீட்டல் கரந்தையாம்;
வட்கார்மேற் செல்வது வஞ்சியாம்; - உட்காது
எதிரூன்றல் காஞ்சி; எயில்காத்தல் நொச்சி;
அதுவளைத்தல் ஆகும் உழிஞை; - அதிரப்
பொருவது தும்பையாம்; போர்க்களத்து மிக்கோர்
செருவென் றதுவாகை யாம். |
(நிரை – ஆநிரை, பசுக்கூட்டம்;
வட்கார் = பகைவர்;
உட்காது = அஞ்சாது;
எதிரூன்றல் = எதிர்த்து
வரும் படையைத் தடுத்து நிறுத்தல்; எயில்
= கோட்டை, மதில், அரண்; பொருவது
= போர் செய்வது; செரு
= போர்)
இச்செய்யுள்
போர் நிகழ்ச்சிகள் எட்டினையே குறிக்கின்றது. ஆகையால் ஏனைய ஒழிபு உள்ளிட்ட
பாடாண், பொதுவியல், கைக்கிளை, பெருந்திணை ஆகிய நான்கும் நுவலும் செய்தி
களையும் நோக்க வேண்டியுள்ளது.
பாடாண் திணையாவது, பாடப்படுகின்ற ஆண்மகன் ஒருவனுடைய
சீர்த்தி, வலிமை, கொடை, தண்ணளி முதலியவற்றை ஆய்ந்து சொல்வதாகும். பொதுவியலாவது,
வெட்சி முதலான திணைகட்கெல்லாம் பொதுவாகவுள்ளனவும் அத்திணைகளில் கூறாமல்
தவிர்த்தனவும் ஆகிய இலக்கணங்களைக் கூறும் பகுதியாகும். கைக்கிளையாவது,
ஒருதலைக் காமத்தைப் பற்றியது. பெருந்திணையாவது
பொருந்தாக் காமம் பற்றியது. ஒழிபு
என்பது பாடாண் திணைப் பகுதியிலும் வாகைத் திணைப் பகுதியிலும் கூறப்படாதுபோன
புறத்துறைகளை உணர்த்துவது.
1.4.1 நொச்சி, உழிஞை முறை வைப்பு
வெட்சி முதல் தும்பை ஈறாகவுள்ள ஏழும் புறம் ;
வாகை,
பாடாண், பொதுவியல் என்னும் மூன்றும் புறப்புறம்;
கைக்கிளையும் பெருந்திணையும் அகப்புறம்.
எயிலை (மதிலை) வளைத்து முற்றுகை இடுவது உழிஞை.
முற்றுகையிடவும், எயிலைக் காப்பது நொச்சி.
ஆதலால்,
உழிஞைத் திணையை அடுத்து நொச்சியை வைப்பது முறை
என்பது போலத் தோன்றுகின்றது. இதனை, வெளிப்படுத்தும் சான்றுகள்:
உழிஞையும்
நொச்சியும் தம்முள் மாறே - (பன்னிருபடலம்)
|
|
வெட்சி கரந்தை வஞ்சி காஞ்சி
உட்குடை உழிஞை நொச்சி தும்பை என்று
இத்திறம் ஏழும் புறம்என மொழிப.
(பு.வெ.மாலை-நூ.19) |
என்றாலும்,
எதிர்
ஊன்றல் காஞ்சி; எயில் காத்தல் நொச்ச ;
அது வளைத்தல் ஆகும் உழிஞை |
எனவரும் பழம்பாடலில்
இடம் பெறும் ‘வைப்பு முறை’ பற்றி, ஐயனாரிதனார் நொச்சியை முன் வைத்துள்ளார்
என்று கருத வேண்டியுள்ளது. வெள்ளம் வந்த பிறகு அணை போடல் ஆகாது; முன்னமேயே
போட வேண்டும். அதுபோல, போர் வந்துற்ற போது காத்தலாகாது; முன்னரேயே
காக்கப்பட்டு வரல் வேண்டும் என்பது ஆசிரியர்தம் நோக்கமாக இருக்கக்
கூடும். இதுபற்றி நொச்சியை முன்னும் உழிஞையை அதன் பின்னும் வைத்திருக்கலாம்
அல்லவா? நினைத்துப் பாருங்கள்!
1.4.2 ஆசிரியரின் நுவலும் திறம்
மூத்த பிள்ளையாரையும் (விநாயகர்), நீலமிடற்றானையும்
வழுத்தும் கடவுள் வாழ்த்து வெண்பாக்கள் இரண்டொடு சிறப்புப்
பாயிரம் ஒன்றையும் முதற்கண் கொண்டுள்ள இந்நூல், புறம்
பற்றிய செய்திகளை நுவலும் திறத்தைச்
சிறிது காண்போம்.
வெட்சி, கரந்தை, வஞ்சி, காஞ்சி, நொச்சி, உழிஞை, தும்பை,
வாகை, பாடாண் என்னும் ஒன்பது திணைகளுக்கும் அவ்வத்
திணைதோறும் திணை இலக்கணத்தைத் துறை வகையால்
தொகுத்துரைக்கும் நூற்பாக்கள் ஒன்பதும் முதற்கண் அமைகின்றன.
(9 நூற்பாக்கள்)
பத்தாவது படலம் பொதுவியற் படலம். இதன் பகுதியான
இயல்கள் மூன்று. அவை :
(1) சிறப்பிற் பொதுவியல்
(2) காஞ்சிப் பொதுவியல்
(3) முல்லைப் பொதுவியல்
என்பனவாம். பொதுவியற்கு ஒன்றும், அதன் மூன்று பகுதிகட்கும்
தலைக்கு ஒவ்வொன்றாக மூன்றும் என நான்கு நூற்பாக்கள் இடம்
பெறுகின்றன. (1+3=4 நூற்பாக்கள்)
பதினொன்றாவதாகிய கைக்கிளைப் படலத்தின் பகுதிகளாகிய ஆண்பால் கூற்று,
பெண்பால் கூற்று என்ற இரண்டினுக்கும் தனித் தனி ஒரு நூற்பாவாக இரண்டு
நூற்பாக்கள் இடம் பெறுகின்றன (1+1=2).
பன்னிரண்டாவதாகிய
பெருந்திணைப் படலத்தைப் பெண்பாற் கூற்று, இருபால் பெருந்திணை எனப்
பகுத்துத் துறைவகையான் அவற்றுக்கு இலக்கணம் கூறப்படுகின்றது. இவற்றுக்கான
நூற்பா இரண்டு (2).
ஒழிபு
குறித்த நூற்பா ஒன்றும், புறம் - புறப்புறம் என்பவற்றை விளக்கும் நூற்பா
ஒன்றும் ஆக இரண்டு நூற்பாக்கள் ஒழிபியலில் இடம் பெறுகின்றன.(2) ஆக,
இந்நூலில் மொத்தம் பத்தொன்பது (9+4+2+2+2=19) நூற்பாக்கள் காணப்படுகின்றன.
இந்நூல் 341 துறைகளைக் கொண்டுள்ளது. துறைகளைத் திணை அல்லது படலம் வாரியாகக்
காண்போம்.
(அ) புறம்
(1)
வெட்சி |
- |
19 துறைகள் |
(2)
கரந்தை |
- |
13
துறைகள் |
(3) வஞ்சி |
- |
20 துறைகள் |
(4) காஞ்சி |
- |
21 துறைகள் |
(5) நொச்சி |
- |
8 துறைகள் |
(6)
உழிஞை |
- |
28 துறைகள் |
(7)
தும்பை |
- |
23 துறைகள் |
(ஆ) புறப்புறம்
(1) வாகை |
- |
32 துறைகள் |
(2)
பாடாண் |
- |
47
துறைகள் |
(3)
பொதுவியல் |
- |
37
துறைகள் |
(இ)
அகப்புறம்
(1)
கைக்கிளை |
- |
19 துறைகள் |
(2)
பெருந்திணை |
- |
36
துறைகள் |
வகை - 3, திணை - 12, ஆகத் துறைகள் - 341.
இந்த 341 துறைகளையும் விளக்க ஆசிரியர் ஐயனாரிதனார் 361 எடுத்துக்காட்டுகளைப்
படைக்கின்றார். இந்த எடுத்துக்காட்டுகள் வெண்பா யாப்பிலும் மருட்பா
யாப்பிலும் இயற்றப் பெற்றுள்ளன. இவ் வெண்பாக்களின் கருத்துகளைச் சுருக்கமாகக்
கூறும் ஒரு பகுதி இருக்கிறது. இதனைக் கொளு
என்று குறிப்பிடுவார்கள். கொளு எடுத்துக்காட்டு வெண்பாக்களின் முன்னர்
இடம் பெறும்
இந்நூலில் இடம்பெறும் வெண்பாக்கள், கைக்கிளை ஒழிந்த
ஏனைய திணைகளுக்கே காணப்படுகின்றன. கைக்கிளை 19
துறைகளை உடையதேனும் இதனுள் இடம்பெறும் ‘கனவின்
அகற்றல்’ என்னும் துறைக்கு மட்டும் இரண்டு மருட்பாக்கள்
உள்ளன.
ஒழிபியலின் துறைகள் 18. இவற்றை விளக்க வந்த எடுத்துக்காட்டு
வெண்பாக்கள் 18. இப்பதினெட்டு
வெண்பாக்களுக்கு முன்னர் மட்டும் ‘கொளு’ காணப்படவில்லை.
தொல்காப்பியருககுப் பின்னாளைய
இலக்கண ஆசிரியர்கள்
அகம், அகப்புறம், புறம், புறப்புறம் எனப் பகுத்தனர். இவ்வகையில்,
புறத்திணைகள் 7, புறப்புறம் என்பதன் பாற்படுவ (மூன்று) 3,
அவை :
(1) வாகை, பாடாண் - பொது
(2) அகப்புறமாவன கைக்கிளை - பெருந்திணை என்னும் 2
(3) கூறாது ஒழிந்தவற்றைக் கூறும் ஒழிபு -1
1.4.3 உரையாசிரியர்
இவ்வரிய நூலின் உரையாசிரியர், சாமுண்டி
தேவ நாயகர்
என்பவர் ஆவார். மாகறல் என்ற ஊரினர். இது, சோழ மண்டலத்து
மேற்கானாட்டைச் சேர்ந்தது என்று கல்வெட்டொன்று கூறுவதாகச்
செந்தமிழ்த் தொகுதி கூறுகின்றது.
சயங்கொண்ட
சோழமண்டலத்து மேற்கா னாட்டு
மாகறலூர் கிழார் சாமுண்டி தேவ நாயகர்
- செந்தமிழ்த் தொகுதி
-1, (45-46) |
‘கிழார்’
என வருவது கொண்டு இவர் வேளாண் குடியினர் எனத் துணியலாம். இவரது காலம்
கி.பி.13 அல்லது கி.பி.14ஆம் நூற்றாண்டு ஆகலாம்.
இவ்வுரையாசிரியர்க்கு முன்னரும் இந்நூலுக்கு ஏட்டு வழியிலோ, வாய்மொழி
வகையிலோ உரைகள் இருந்துள்ளன. இதனை, இவ்வுரையாசிரியரின் ‘உரைப்பாரும்
உளர்’, ‘பொருளுரைப்பாரும் உளர்’ என்னும் சொற்றொடர் ஆட்சிகளே மெய்ப்பிக்கின்றன.
இவருடைய உரை இரத்தினச் சுருக்கமானது; பொழிப்புரையாய் அமைந்தது; வெண்பாவோ
அன்றி மருட்பாவோ எந்த வண்ணம் அமைந்துள்ளதோ, அந்த வண்ணமாகவே உரைவகுப்பது.
உரையை விளக்க, இவர் ஆளும் சில பாடல்கள் எந்த நூலில் இடம் பெறுகின்றன
என்பது இந்நாளில் அறிய இயலவில்லை. இவருடைய உரையைக் கொண்டே இனிவரும்
பாடங்களை, நீங்கள் படிக்க இருக்கின்றீர்கள்.
|