3.0 பாட முன்னுரை

ஆநிரை கவர்தல் - ஆநிரை மீட்டல், எயில் காத்தல் - எயில் வளைத்தல் முதலியன போரின் வகைகளாம். இவற்றை மேற்கொள்ளும் போது, எந்தப் படையோடு எந்தப் படை மோதுகிறது என்று அடையாளம் தெரிவதற்காகக் குறிப்பிட்ட பூவைச் சூடுவார்கள். சோழர்க்கு அடையாளப் பூ ஆத்திப்பூ; பாண்டியர்க்கு வேப்பம்பூ; சேரர்க்கு உரியது பனம்பூ. அவர்களது படைவீரர்களும் அந்தந்தப் பூவையே அணிந்து போரிடுவார்கள். அதே போல, அந்தந்தப் போர் நிகழ்ச்சிக்கும் வெவ்வேறு பூக்கள் அணிவார்கள். அப்பூக்களைத் திணைப் பூ என்று குறிப்பிடுவார்கள். ஆநிரை கவரச் செல்லும் வெட்சி மறவர்கள் வெட்சிப்பூ அணிவார்கள். சோழர் படை ஆநிரை கவரச் சென்றால், ஆத்திப் பூவோடு வெட்சிப் பூவும் சூடியிருப்பார்கள். இதனால் அந்தப் படை எந்த நாட்டைச் சேர்ந்தது என்பதும், என்ன பணியை முடிக்கப் புறப்பட்டிருக்கிறது என்பதும் தெரியவரும்.

திணைப் பூவை மட்டுமே சூடிக் கொள்ளும் வழக்கமும் உண்டு. மாணாக்கர்களே! வெட்சிப் பூவைச் சூடி, ஆநிரை கவர்ந்தமையை முன்னைய பாடத்தில் பார்த்தோம் அல்லவா? இப்பாடத்தில் நிரைமீட்டல் என்ற கரந்தை ஒழுக்கத்திற்குக் கரந்தைப் பூவைச் சூடிக் கொள்வர் என்பதை மனத்தில் கொண்டு, கரந்தைத் திணையும் அதன் துறைகளும் தரும் செய்திகளைக் காண்போம்.