3.2 கரந்தைத் திணையும் துறைகளும் கரந்தைத் திணையும் அதன் துறைகளும் பற்றிப் புறப்பொருள் வெண்பாமாலையில் உள்ள கரந்தைப் படலத்தில் ஐயனாரிதனார் கூறுவனவற்றைக் காண்போம். வெட்சியார் கவர்ந்து சென்ற ஆநிரைகளை மீட்கும் பொருட்டு அவர்களை இடைவழியில் வளைத்துக் கொண்டு, கரந்தைப் பூவைச் சூடிக் கரந்தை மறவர்கள் போரிடுவது பற்றிய ஒழுக்கங்களைக் கூறுவதால் கரந்தைத் திணை எனப்பட்டது. பகை மன்னனுடன் (கரந்தை மன்னனோடு) கருத்து மாறுபட்டான் வெட்சி மன்னன். அவனுடைய மறவர்கள் கரந்தை மறவரோடு போர் புரிந்து அவர்தம் ஆநிரையைக் கவர்ந்தனர். கவர்ந்த அந்த ஆநிரையை, வெட்சியாரின் வலிமையைத் தொலைத்து அவர்களிடமிருந்து கரந்தையார் மீட்பது கரந்தைத் திணை எனப் பெறும்.
துறை என்பதன் விளக்கத்தை முன்பாடத்திலேயே பார்த்தோம் அல்லவா? துறை என்பது நிகழ்வு ஒன்றன் படிநிலைகளுள் ஒன்று (Steps) என்பதை நினைவுக்குக் கொண்டு வாருங்கள். துறைகள் பதின்மூன்றனை உடையது கரந்தைத் திணை. அவை, கரந்தை அரவம், அதரிடைச் செலவு, போர் மலைதல், புண்ணொடு வருதல், போர்க்களத்து ஒழிதல், ஆளெறி பிள்ளை, பிள்ளைத் தெளிவு, பிள்ளையாட்டு, கையறுநிலை, நெடுமொழி கூறல், பிள்ளைப் பெயர்ச்சி, வேத்தியல் மலிபு, குடிநிலை என்பனவாம். இத்துறைகளை ஆநிரை மீட்கச் செல்லல், போரும் விளைவும் இளைஞர் சிறப்பு, போர் நிகழ்ச்சிகள், மன்னர் பெருமையும் வீரர் சிறப்பும் என்னும் ஐந்து நிலைகளில் வகைப்படுத்திக் காணலாம். |