4.2 வஞ்சிப் போருக்கு முந்தைய நிகழ்வுகள் போர்மேற் செல்வதற்கு முன் சில நிகழ்வுகள் இடம் பெறுகின்றன. அவற்றைக் காண்போம். வஞ்சியாரின் நால்வகைப் படையும் எழுப்பும் அரவம் - சத்தம் - ஆதலின் வஞ்சியரவம் எனப் பெற்றது. வஞ்சியரவமாவது, ஒளி பொருந்திய வாளையுடைய படை மறவர்கள் வலிமையான வாரினாலே வலித்துக் கட்டிய முரசத்தோடு வலிய களிறுகள் பிளிற வெகுண்டு எழுந்ததைக் கூறுவதாகும். ஒள்வாள் தானை உருத்துஎழுந் தன்று முரசத்தின் முழக்கம், வஞ்சி சூடிய மறவரின் ஆர்ப்பரிப்பு, ஊழித் தீ அன்ன யானைப் படை மழைமேகமென ஆரவாரித்தல் ஆகியவற்றை ஒருசேர நோக்க, வஞ்சியரவம் என்னும் துறைப் பொருள் நிரம்புவதைக் காண்கின்றோம். வீரர்கள் எல்லாரும் தனித்தனியே சகுனம் பார்த்தல் இயலாது. ஆதலால், சகுனம் பார்க்கின்ற வேந்தன் எல்லார் சார்பிலும் தன்னுடைய முரசையோ, வெண் கொற்றக் குடையையோ உறைவாளினையோ நல்ல நேரத்தில் மங்கல திசையாகிய வடக்குப் பக்கத்தில் எழுவிப்பான் (செல்ல விடுவான்). எழுவிக்கும் இச்செயல், புறவீடு செய்தல் எனவும்படும். புறவீடு செய்வது குடையாயின், அச்செயல் குடைநிலை எனப்பெறும். வாளாயின் வாள் நிலை என்றும் வழங்கப் பெறும். தான் சூடிய மாலையின் வண்டினம் ஒலிப்பவும், புலவர் தன் புகழைப் பாடவும், தார்மாலை அணிந்த மன்னன், நல்ல நேரம் அமைந்த நாளில் தனது வெண் கொற்றக் குடையைப் புறவீடு செய்வது, குடைநிலை என்னும் துறையாம். கொய்தார் மன்னவன் குடைநாள் கொண்டன்று எடுத்துக்காட்டு வெண்பா துன்னரும் துப்பில் தொழுதுஎழா - மன்னர் உடைநாள் உலந்தனவால் ; ஓதநீர் வேலிக் குடைநாள் இறைவன் கொள. எடுத்துக்காட்டு வெண்பாவின் கருத்து வஞ்சி வேந்தன் தன்னைப் பணியாத மன்னர்மேல் போர் என்று குடையைப் புறவீடு செய்த அளவில், அவர்களுடைய வாழ்நாள் இல்லையாயிற்று. இன்ன நாளில் இன்ன நேரத்தில் போரென்று புறப்படுமுன், தனக்கு வெற்றியும் பகைமன்னர்க்குத் தோல்வியும் நேருமெனக் கணிவன் குறித்த நாளில் படையெல்லாம் ஒருசேரச் செல்ல இயலாமல் போகலாம். அதைத் தவிர்க்க வாளைப் புறவீடு செய்வான் அரசன். அது படைமறவரைப் புறப்படச் செய்ததாகக் கருதும் ஒரு வழக்கம் உண்டு. அதனால் வாளினை வடக்குப் பக்கமாகிய மங்கல திசையில் எழப் பண்ணும் நிலை, வாள்நிலை எனப் பெற்றது. வஞ்சியரசன் தன் பகைவர்மேலே தன்னுடைய படையைச் செலுத்தலை விரும்பித் தனது வெற்றிவாளை நல்ல முழுத்தத்திலே (நேரத்திலே) புறவீடு விட்டது, வாள்நிலை என்னும் துறையாகும். கொற்றவாள் நாள்கொண்டன்று. எடுத்துக்காட்டு வெண்பாவின் கருத்து சோதிட நூலார் குறித்த நேரத்தில் வாளினைப் புறவீடு செய்யவே, பகை நாட்டார்க்குத் தோல்வி வந்துறும் என்பதை அறிவிப்பதாய்க் கூகை (கோட்டான்) பகற்போதிலும் குழறுகின்றது (கூவுகிறது). குழறுவது, வாள்மங்கலம் (வாள்நிலை) செய்த மன்னனுக்கு வெற்றியுண்டாம் என்பது குறிப்பு. கொற்றவை ஒரு தெய்வம். கொற்றவையை வழிபடும் நிலைகள் பல. அவற்றை வெட்சிப் படலத்துக் கொற்றவை நிலை என்பதனில் கண்டோம். அவற்றை இங்கே நினைத்துப் பார்த்தால் பெயர்க்காரணம் புலனாகும். நீண்ட தோள்களைக் கொண்ட வஞ்சி வேந்தன், மேற்கொண்ட போர் வினையில் வெற்றியைக் கொள்வானாக என, நல்ல பொருள்களால் நிரம்பிய அகன்ற மண்டையை (பெரிய அகலை) வெற்றியாக உயர்த்தி, பகைவரைப் புறங்காணும் கொற்றவையின் அருள்நிலையை வஞ்சி மறவர் கூறுவது கொற்றவை நிலை ஆகும். கூடாரைப் புறங்காணும் கொற்றவைநிலை உரைத்தன்று எடுத்துக்காட்டு வெண்பா நிணம்குடர் நெய்த்தோர் நிறைத்துக் - கணம்புகலக் கைஇரிய மண்டைக் கணமோடி காவலற்கு மொய்இரியத் தான்முந்து உறும். தன் கையிலே கொண்ட மண்டையையும், பூதகணங்களையும் உடைய கொற்றவை, வஞ்சி வேந்தனின் பகைவரது வலிமை கெட்டழியும்படி, தானே முன்னதாக எழுந்தருள்வாள். அதாவது, கொற்றவை, பகைவரை அழித்து வெற்றியை நல்க, வஞ்சிவேந்தனுக்கு முன்னாக எழுந்து அருள்வாள். மறத்துறைக்குத் தெய்வமாக விளங்கும் கொற்றவையின் அருள்நிலை மட்டும் அன்றி, வலிமையுடைய வஞ்சி மறவரின் போர்த் திறனைத் தெரிவிப்பதும் கொற்றவை நிலை என்னும் துறைப் பொருளாகும் என்பர் புலவோர். அந்தமில் புலவர் அதுவென மொழிப |