4.5 வஞ்சி மறவர் செயல்கள்

போரில் வென்ற வஞ்சி மறவர் பகைநாட்டின் ஊர்களை எரியூட்டல் முதலான செயல்களில் ஈடுபடுவர். அவை பற்றிய செய்திகளை அடுத்துக் காண்போம்.

4.5.1 உழபுல வஞ்சி

உழல் - உழலல், உழத்தல். உழல் என்பது ‘உழ’ என நின்றது. பகை நாடு துன்பத்தில் உழலும் பொருட்டு எரியை ஊட்டுவது முன் நாளைய செயலாக இருந்தது. எனவே, எரியைக் கொளுவும் இச் செய்கை உழபுல வஞ்சி எனப் பெற்றது போலும்.

  • கொளுப் பொருளும் கொளுவும்
  • வஞ்சி வேந்தன் தன் பகைவருடைய வளம் பொருந்திய நாட்டினை தீயைக் கொண்டு கொளுத்தியதை உழபுல வஞ்சி என்பர்.

    நேராதார் வளநாட்டைக்
    கூர்எரி கொளீஇயன்று

    4.5.2 மழபுல வஞ்சி

    மழ என்ற உரிச்சொற்கு ‘இளமை’ என்பது பொருள். இளமை, வளமார்ந்த உடற்கட்டினை உடையதாதல். பகைவர் நாட்டு வளங்களைக் கவர்ந்து கொள்வது பற்றி மழபுல வஞ்சி என்னும் பெயரைப் பெற்றது.

  • கொளுப் பொருளும் கொளுவும்
  • பகைவருடைய பகைப்புலத் வஞ்சி மறவர் கொள்ளையிட்டு அவர்களது இல்லங்களில் வளம் இல்லையெனும் படியாகக் கைப்பற்றிக் கொண்ட செயலைச் சொல்வது மழபுல வஞ்சி என்னும் துறையாம்.

    கூடார்முனை கொள்ளைசாற்றி
    வீடுஅறக்கவர்ந்த வினைமொழிந்தன்று
  • எடுத்துக்காட்டு வெண்பா
  • களமர் கதிர்மணி காலேகம் செம்பொன்
    வளமனை பாழாக வாரிக் - கொளல்மலிந்து
    கண்ஆர் சிலையார் கவர்ந்தார் கழல்வேந்தன்
    நண்ணார் கிளைஅலற நாடு
  • எடுத்துக்காட்டு வெண்பாவின் கருத்து
  • வஞ்சி மறவர், பகைநாட்டில் வாழ்வோர் புலம்பவும், அவர்களது மனை பாழாகவும் பொருள்கள் பலவற்றையும் கவர்ந்தனர். அவர்களுடைய களமர்களையும் (ஏவல்மாக்கள்) கைப்பற்றினர்.