1.3
வெண்பாவின் பொது இலக்கணம்
வெண்பாவில் வெண்பாவுரிச்சீரும் (காய்ச்சீர்) இயற்சீரும் (ஈரசைச் சீர்) வரும். ஈற்றுச் சீராக மட்டும் அசைச்சீர் (ஓரசைச்சீர்) வரலாம். இவை தவிர மற்ற சீர் எதுவும் வெண்பாவில் வராது.
வெண்டளைகள் (இயற்சீர் வெண்டளை, வெண்சீர் வெண்டளை) மட்டுமே அமையும். வேற்றுத் தளைகள் வெண்பாவில் வாராது.
வெண்பா
அளவடிகளால் அமையும். ஈற்றடி மட்டும் சிந்தடியாய் வரும். ஏனைய அடி எதுவும்
வராது.
வெண்பா ஒரு விகற்பத்தாலோ பல விகற்பத்தாலோ வரும். விகற்பம் என்பது இங்கு எதுகை அமைப்பைக் குறிக்கும். ஒரு பாவில் எல்லா அடிகளிலும் எதுகை அமைப்பு ஒன்றாக இருந்தால் அது ஒரு விகற்பம்; பாவில் பல எதுகை அமைப்புகள் வந்தால் அது பல விகற்பம். வெண்பாவுக்குரிய எடுத்துக் காட்டுப் பாடல்களைப் பார்க்கும் போது விகற்ப இலக்கணம் உங்களுக்குத் தெளிவாகும்.‘எதுகை என்பது இரு சீர்களில் இரண்டாம் எழுத்து ஒன்றி வருவது’ என்பதை அறிவீர்கள் அல்லவா?
வெண்பாவின் ஓசை செப்பலோசை ஆகும்.
வெண்பாவின் ஈற்றுச் சீர் நாள், மலர் என்னும் வாய்பாடுகளையுடைய அசைச்சீராகவோ, காசு, பிறப்பு என்னும் வாய்பாடுகளையுடைய, குற்றியலுகரத்தில் முடியும் நேரீற்று இயற்சீராகவோ (மாச்சீர்) வரும். முற்றியலுகரத்தில் முடியும் நேரீற்றியற்சீரும் வரலாம். வேறு எவ்வகைச் சீரும் வெண்பா ஈற்றில் வராது. |