3.3 ஒலிப்புமுறைப் பாகுபாடு |
|
மொழியியலார் தமிழில் உள்ள மெய் ஒலிகளை அவற்றின் ஒலிப்புமுறை அல்லது பிறப்புமுறை அடிப்படையில் வெடிப்பொலிகள், மூக்கொலிகள், மருங்கொலிகள், வருடொலிகள், உரசொலிகள், அரை உயிர்கள் என்னும் ஆறு வகைகளாகப் பாகுபாடு செய்திருப்பதை சற்று முன்னர்ப் பார்த்தோம். இங்கு அப்பாகுபாடு ஒவ்வொன்று பற்றியும் அவர்கள் கூறும் கருத்துகளை விளக்கமாகக் காண்போம். வாய் அறையின் (oral cavity) ஓர் இடத்தில் மூச்சுக்காற்று, குரல்வளை மடலால் முழுவதும் தடை செய்யப்பட்டுத் திடீரென்று வெடிப்போடு வெளியேறினால் அதனை வெடிப்பொலி அல்லது தடையொலி (Plosive or Stop Sound) என்பர் மொழியியலார். க், ச், ட், த், ப் என்பன வெடிப்பொலிகள் ஆகும். இவ்வெடிப்பொலிகள் ஒவ்வொன்றும் சொற்களில் வரும் இடம் நோக்கி இருவேறு வகையான ஒலிகளாக ஒலிக்கும். அவை குரல் இலா ஒலி (voiceless sound), குரல் உடை ஒலி (Voiced Sound) என்பன ஆகும். இவ்விரு வகை ஒலிகள் குறித்து மொழியியலார் தரும் விளக்கத்தைக் காண்போம்.
குரல்வளை மடல் (vocal cords) மூடுவதால் வாயின் அறையில் உள்ள காற்று அங்கிருந்து வெளிப்படுகிறது. இதனையே குரல் இலா ஒலி என்பர்.
குரல்வளை மடல் இறுக மூடும்போது அதன் ஒரு பகுதி சற்றுத் திறந்ததும் அதன் வழியாக மூச்சுக்காற்றானாது வேகமாக வெளிவரும்போது அந்தக் குரல்வளை மடல் சற்று அதிர்கிறது (vibration). இவ்வாறு ஏற்படும் அதிர்வு ஒலியை குரல் உடை ஒலி என்பர்.
வெடிப்பொலிகள் சொல்லில் முதலில் வரும்போதும், இடையில் இரட்டித்து வரும்போதும் பின்வருமாறு வன்மையாக ஒலிக்கும். க் - /k/ ச் - /c/ ட்- /t/ த்- /—/ ப்- /p/ சான்று: ‘க்’ - /k/ - கடல் (Kadal). பக்கம் (pakkam) ‘ப்’ - /k/ - பட்டு (pattu), கோப்பு (Koppu) இவ்வாறு வன்மையாக ஒலிக்கும் இத்தகு வெடிப்பொலிகளை மொழியியலார் குரல் இலா ஒலிகள் (Voiceless Sounds) என்கின்றனர். இவ்வொலிகளை நாம் ஒலிக்கும்போது குரல்வளை மடல் இறுக மூடியிருக்கும்.
வெடிப்பொலிகள் சொல்லில் மூக்கொலிகளை (ங், ஞ், ண், ந், ம், ன்) அடுத்து வரும்போதும், இரண்டு உயிர்களுக்கு நடுவில் வரும்போதும் வன்மையாக ஒலிக்காமல், சற்று மென்மையாகப் பின்வருமாறு ஒலிக்கும். க் - /g/ ச் - /j/ ட்- /d/ த்- / ப்- /b/ சான்று: ‘க்’ - /g/ - தங்கம் (Tangam). அகம் (Agam) ‘ப்’ - /b/ - இன்பம் (Inbam), உபயம் (Ubayam) இவ்வாறு சற்று மென்மையாக ஒலிக்கும் இத்தகு வெடிப்பொலிகளை மொழியியலார் குரல் உடை ஒலிகள் (voiced sounds) என்கின்றனர். இவ்வொலிகளை நாம் ஒலிக்கும்போது குரல்வளை இறுக மூடியிருந்தாலும், அதன் ஒரு பகுதி சற்றே திறந்திருக்கும். அதன் வழியாக மூச்சுக் காற்று வெளிப்பட்டுக் குரல்வளை மடலை அதிரச் செய்வதால், அப்போது எழும்பும் வெடிப்பொலிகள் வன்மைத் தன்மை குறைந்து மென்மைத் தன்மை அல்லது இசைமைத் தன்மை பெற்றுத் திகழக் காணலாம். வெடிப்பொலிகள் போலவே அமைந்து அண்ணக்கடை திறந்து மூக்கறை (nasal cavity) வழியே மூச்சுக்காற்று சென்று ஒலியை எழுப்பிய பின் வாயின் வழியே வெளிவருகிறது. இவ்வகையான ஒலிகளை மூக்கொலிகள் (Nasal Sounds) என்பர். மூக்கொலிகள் தோன்றும்போது குரல்வளை மடல்கள் சற்று அதிர்கின்றன. மூக்கொலிகள் வருமாறு: சான்று: ‘ங்’ /Œ/ ‘ஞ்’ / /‘ண்’ /–/ ‘ந்’ /n/ ‘ம்’ /m/ ‘ன்’ /‹/ வாய் அறையின் உள்ளே மூச்சுக்காற்று வரும்போது குரல் வளை மடல் அதிர்ந்தும், அதிராமலும் இருக்கும். அப்போது அண்ணக்கடை அடைப்புகளும் உண்டு. வாய் அறையினுள் அக்காற்று ஓர் இடத்தை அடைந்து நாக்கின் இரண்டு பக்கத்திலும் (இரு மருங்கிலும்) வெளிவருகின்றது. இவ்வாறு வெளிவருவதால் ஏற்படும் ஒலிகள் மருங்கொலிகள் எனப்படும். தமிழில் இரு மருங்கொலிகள் உள்ளன. அவை வருமாறு: ‘ல்’ /l/ ‘ள்’ /˜/ நாக்கின் நுனி (Apex) மேலே எழுந்து உள்நோக்கி வளைந்து பின் வேகமாகக் கீழே வரும்போது அண்ணத்தில் மோதுவதால் எழுகின்ற ஒலிகளே வருடொலிகள் (Flap Sounds) ஆகும். தமிழ் மொழியில் மூன்று வருடொலிகள் உள்ளன. அவையாவன: ‘ர்’ /r/ ‘ற்’ / r/‘ழ்’ /l/ மூச்சுக்காற்றானது வாய் அறையின் உள் புகுந்து வரும்போது அதனை முழுவதும் தடுக்காமல் அது வெளியேறும் பாதையைக் குரல் ஒலிப்பினால் குறுக்கி அந்த இடுக்கின் வழியே அதனைச் செலுத்தினால் உராய்வுத்தன்மை (friction) ஏற்படுகிறது. இந்த உராய்வுத் தன்மையோடு கூடிப் பிறக்கும் ஒலிகளே உரசொலிகள் (Fricative Sounds) ஆகும். தற்காலத் தமிழில் பின்வரும் இரண்டு உரசொலிகள் உள்ளன. ‘ஸ்’ /s/ ‘ஷ்’ /™/ ‘ய்’ (y), ‘வ்’ (v) என்னும் இரண்டையும் மொழியியலார் அரை உயிர்கள் (semi-vowels) என்று குறிப்பிடுகின்றனர். தமிழ் இலக்கண நூலார் இவற்றை இடையின மெய்கள் வரிசையில் வைத்துக் கூறினாலும், உடம்படு மெய்கள் என்றும் குறிப்பிடுகின்றனர். உடம்படு மெய்கள் பற்றி அடுத்த பாடத்தில் விரிவாகப் பார்க்க இருக்கிறோம். நாவின் அடிப்பகுதியானது முன் அண்ணத்தைப் பொருந்திய நிலையில், உள்ளிருந்து வரும் காற்று வாயில் சிறிது தடைப்படுத்தப்பட்டு வெளியே வருவதால் ‘ய்’ என்னும் அரை உயிர் பிறக்கிறது. உள்ளிருந்து வரும் காற்று, மேற்பல்லும் கீழ் இதழும் இயைந்து தடை ஏற்படுத்தும் நிலையில் வெளிவருவதால் ‘வ்’ என்னும் அரை உயிர் பிறக்கிறது. இதுகாறும் ஒலிப்புமுறை அடிப்படையில், தமிழில் உள்ள மெய் ஒலிகளை மொழியியலார் பாகுபாடு செய்து, அவற்றின் ஒலிப்புமுறை பற்றிக் கூறிய கருத்துகளை விரிவாகக் கண்டோம். இனி ஒலிக்கருவிப் பாகுபாடு பற்றி அவர்கள் கூறுவனவற்றைக் காண்போம். |