5.2 ஒலி மாற்றத்தில் ஒழுங்குமுறை

    மேலே கூறியவாறு ஏற்படும் ஒலி மாற்றங்கள் ஒரு சீராக ஒழுங்காக அமைந்துள்ளன என்கின்றனர் மொழியியலார். இம்மாற்றங்களைச் சில அடிப்படை விதிகளின் கீழ்க் கொண்டு வரமுடியும் என்றும் அவர்கள் கூறுகின்றனர். அவ்விதிகளுள் சிலவற்றைச் சான்றுகளுடன் விளக்கமாகக் காண்போம்.

    1. தமிழ் மொழியில் காணப்படும் ஐகார ஈற்றுச் சொற்களையும் அவற்றுக்கு இணையான மலையாள மொழிச் சொற்களையும் எடுத்து நோக்கினால் இவ்வுண்மை புலப்படும்.

    சான்று:

தமிழ் மலையாளம்
மலை - மல
தலை - தல
வரை - வர
சிலை - சில
கரை - கர

    இவை     போன்ற நூற்றுக்கணக்கான சொற்கள் இருமொழிகளிலும் காணப்படுகின்றன. தமிழில் ஐகாரத்தைக் கொண்டு முடிகின்ற சொற்கள் மலையாளத்தில் ஒழுங்கான முறையில் அகரத்தைக் கொண்டு முடிகின்றன. இத்தகு ஒலி மாற்றத்தை,

     >

    ai > a

    என்ற விதியில் அடக்கி விடலாம்.

    2. இத்தகு     ஒழுங்குமுறையைத்     தமிழ்மொழிக்கு உள்ளேயும் காணலாம். பழந்தமிழ் இலக்கியங்கள் என்று கருதப்படும் சங்ககால இலக்கியங்களில் யாகாரத்தை முதலாகக் கொண்ட சில சொற்கள் காணப்படுகின்றன. ஆனால் இச்சொற்கள் இடைக்காலத்தில் தோன்றிய இலக்கியங்களிலும், கல்வெட்டுகளிலும் யகர மெய்யை இழந்து ஆகாரத்தை முதலாகக் கொண்ட சொற்களாக மாறி வழங்குவதைக் காணலாம்.

     சான்று:

யாறு > ஆறு
யாண்டு > ஆண்டு
யாடு > ஆடு
யாமை > ஆமை
யார் > ஆர்

இத்தகு ஒலி மாற்றத்தை,

    யா > ஆ

    ya: > a:

என்ற விதியின் கீழ்க் கொண்டு வரலாம்.

    3. தற்கால எழுத்துத் தமிழில் உள்ள ழ, ற ஆகிய மெய்கள், தற்காலப் பேச்சுத்தமிழில் முறையே ள, ர என ஒலிக்கப்படுதல் காணலாம்.

    சான்று:

பழம் > பளம்
வாழை > வாளை
கறி > கரி
குறித்தான் > குரித்தான்

    இந்த ஒலி மாற்றங்களை,

    ழ > ள ற > ர

    l > ˜ ŗ > r

    என்ற அடிப்படை விதியின் கீழ்க் கொண்டு வரலாம்.

    மேலே கூறியவற்றை எல்லாம் அடிப்படையாக வைத்து நோக்கினால், மொழியில் காணப்படும் ஒலி மாற்றங்கள் தாறுமாறாக நிகழ்வன அல்ல என்பதும், அவை ஓர் ஒழுங்கான முறையிலே நிகழ்கின்றன என்பதும் நன்கு விளங்கும்.