1.0 பாட முன்னுரை

    வாழ்க்கைக்கு மிகப் பயன்தரும் கலையாக விளங்குவது கட்டடக் கலையாகும். நாகரிகத்தின் கருவாக அது விளங்குவதால் அதன் சிறப்புக் கூறுகளைத் தெரிந்து கொள்வது நல்லது.

    தமிழக வரலாற்றுக்கும், பண்பாட்டிற்கும் ஏற்ப ஐந்திணைகளாகப் பிரிக்கப்பட்ட நிலப்பகுதிகளில் கட்டப்பட்ட குடியிருப்புகள் விளக்கப்படுகின்றன.

    கட்டடக்கலையின் சிறப்பை உணர்வதற்கு நகர அமைப்பின் சிறப்பும் பாகுபாடுகளும் விளக்கப்படுகின்றன. இலக்கியங்களில் மதுரை, பூம்புகார் ஆகிய நகரங்கள் வருணிக்கப்படுதலும் சுட்டிக் காட்டப்படுகிறது.

    தனி மனிதக் குடியிருப்புகளும் அரசர்களின் குடியிருப்பாகிய அரண்மனையும், நாட்டுப் பாதுகாப்பிற்கான அரண்களும் கூறப்படுகின்றன. வீரர்களுக்குரிய படைக் கருவிகள் கிடைக்கும் வண்ணம் படைக்கொட்டிலும் உள்ளது என்பதும் கூறப்படுகின்றது.

    மரக்கலம் (கப்பல்) செலுத்துபவர்களுக்குக் கடற்கரை தெரியும்படி ஒளிமிக்க விளக்கு உடைய கலங்கரை விளக்கம் அமைக்க வேண்டுமென்ற எண்ணம் முற்காலத்திலேயே இருந்துள்ளது.