1.1 கட்டடம்

    தமிழில் ‘கட்டடம்’ எனும் சொல், ‘கட்டுமான வடிவம்’ என்ற பொருள் தரும். கட்டு, அடம் என்ற இரு சொற்களும், கட்டுதற்குரிய அடுக்கு அடுக்கான வடிவம் (Building) என்பதைக் குறிக்கின்றது. ‘கட்டிடம்’ எனும் சொல், கட்டடத்திற்குரிய இடத்தை (Site - மனையை) உணர்த்தும்.

  • கவின் கலை
  •     அழகு அனுபவ (Aesthetic experience) வெளிப்பாடு கவின்கலை ஆகும். கவின் கலைகளுள் ஓவியம், சிற்பம், கட்டடம், நடனம், நாடகம் ஆகியவை காட்சிக் கலைகள் (Visual arts) என்ற பாகுபாட்டில் அடங்கும். இத்தகைய கலைகளுள் கட்டடக்கலை, உலகியற் பயன்மிக்கது. நாட்டு வரலாற்றுக்கும் நாகரிகத்திற்கும் பெரிதும் துணை நிற்கக் கூடிய கலையாக அது விளங்குகிறது.

        கட்டடக் கலையை நன்கு புரிந்து கொள்ள, அதன் சிறப்புப் பிரிவுகளைத் தெரிந்து கொள்வது நல்லது.

    1.1.1 நுண் கூறுகள்

        கட்டடக் கலைக்கு மூன்று கூறுபாடுகள் தேவைப்படும். அவை,

    1.

    எதற்காக ஒரு கட்டடம் கட்டப்படுகிறதோ அதற்கான சமூகத் தேவைகளை அது நிறைவு செய்ய வேண்டும்.
    2.



    கட்டடத்திற்குப் பயன்படும் பொருள்கள் கட்டமைப்பு ஆகியவை உறுதியாகவும், பொருத்தமாகவும், நீடித்து நிற்பவையாகவும் இருத்தல் வேண்டும்.
    3.



    கட்டடம் பார்வைக்கு அழகனுபவத்தால் இன்பந்தரக் கூடியதாகவும் அமைதல் வேண்டுமென்று அறிஞர்கள் பொதுவாகக் கூறுவர்.

        சிற்பநூல் தேர்ச்சி பெற்றவர்கள், தமிழகத்தைப் பொறுத்த வரையில் கட்டடக் கலையின் தொழில் நுட்பத்தையும் சிறப்பினையும் நன்கு புரிந்து கொள்ளுவதற்கு முதலில், அடிப்படையாக ஊரமைப்பை அல்லது நகர அமைப்பைத் தெரிந்து கொள்வது சிறந்தது. எனவே, அதுபற்றித் தொடர்ந்து சில நுண்குறிப்புகளைக் காண்போம். அதற்குக் கட்டடக் கலைக் கொள்கையைத் தெரிந்து கொள்ளல் வேண்டும்.

    1.1.2 கட்டடக் கலைக் கொள்கை

        உலகத்தில் அறிவியல் ஆராய்ச்சி வளர்ந்து வருகிறது. கலைகள் பற்றிய வரலாற்றையும் கொள்கைகளையும் திறனாய்வுகளையும் ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்டு, தாம் கண்ட முடிவுகளைக் கூறி வருகின்றனர்.

  • தொன்மை
  •     மனிதனது வாழ்வியலுடன் ஒட்டி வளர்ந்த தொன்மையான கவின் கலையாகக் ‘கட்டடக் கலை’ போற்றப்படுகின்றது. மனிதன் முல்லை நிலத்தில் வாழக்கற்றுக் கொண்ட காலத்திலேயே (chalcolithic age) தனக்கெனக் குடிசையோ வீடோ கட்டிக் கொள்ளக் கற்றுக் கொண்டான். அதற்கேற்ப அவனது கட்டடக் கலை அறிவும் வளர்ந்து வந்துள்ளது.

        சங்க காலத்தில் மாட மாளிகைகளும், கூடகோபுரங்களும், கோட்டை கொத்தளங்களும், அரண்மனைகளும் இருந்தமை பற்றிச் சங்க இலக்கியங்களும் சிலப்பதிகாரம், மணிமேகலை முதலிய காப்பியங்களும் கூறுகின்றன. ஆனால், இன்றைக்கு அவற்றின் இடி பாடுகள் கூடக் கிடைக்கவில்லை. பல்லவர், சோழர், பாண்டியர் முதலியோர் கட்டிய ஆலயங்கள் காணக்கிடைக்கின்றன. அவர்கள் வாழ்ந்த அரண்மனைகள், பாதுகாப்பு வழங்கிய கோட்டை கொத்தளங்கள் எங்கே? ஒன்று கூட இருந்த இடம் தெரியவில்லை.

        இந்நிலையில் பல்லவ மன்னர்கள் குடைவரைகளையும் ஒற்றைக் கல்கோயில்களையும் கட்டுமானக் கோயில்களையும் பாறைக் கற்களால் உருவாக்கித் தந்துள்ளனர். அவற்றைக் கொண்டுதான் தமிழ்நாட்டுக் கட்டடக்கலை உருவாகி வளர்ச்சி பெற்று வருகின்றது என்பது தெளிவு; இதனையே கட்டடக் கலைக் கொள்கையாகக் கொள்ள வேண்டுமென்பர்.