2.3 திருமலை நாயக்கர் மகால்

    திருமலை நாயக்க மன்னர் தமிழகத்தின் பெருமையைத் தம் கலையார்வத்தால் உயர்த்தியவர். அவர் கட்டிய புதுமண்டபம், மதுரை ராஜகோபுரம், வண்டியூர்த் தெப்பக்குளம், திருமலை நாயக்கர் மகால் ஆகியவை சிற்ப எழிலோடு கூடிய கட்டடக் கலை நுட்ப முத்திரைகளாகும்.

2.3.1 சிறப்புகள்

    திருமலை நாயக்கர் மகால் திறமைமிக்க கலைஞர்கள் கட்டிய கட்டடக் கலை நுட்பம் வாய்ந்தது; இம்மகால், இந்து - முஸ்லீம் - காத்திக் சிற்ப முறையில் அமைந்துள்ளது என்பர்.

    இம்மகாலின் அற்புதமான வேலைப்பாடமைந்த வளைவுகள், மேல்தளங்கள், கூடங்கள், மிகப்பெரிய தூண்கள் (ஒவ்வொரு தூணும் 40 அடி உயரம்) ஆகியவற்றைக் கண்டு வியப்புறாமல் யாரும் இருக்க முடியாது. ஒரு தூணை மூவர் அல்லது நால்வர் சேர்ந்து அணைத்தாலும் அணைக்க முடியாத அளவிற்குப் பருத்த தூண்களாக இருப்பதை இப்போதுள்ள முற்றத்தில் காணலாம்; இதற்குக் கி.பி. 1636 ஏப்ரல் திங்களில் புகுமனை புகுவிழா நடத்தினார் நாயக்கர், என்பது தெரிய வருகிறது. இது போன்ற செம்மையான முறையில் அமைந்த அரண்மனைக் கட்டடத்தைத் தென்னகத்தில் காண்பது அரிது.

  • சிதைத்தல்

    இத்தகைய மிகச் சிறந்த கட்டடத்தை, திருமலை நாயக்கருக்குப் பேரனாகிய சொக்கநாத நாயக்கர் ஆட்சிக்கு வந்ததும் இதன் பல பகுதிகளை இடித்து விட்டான்; இடித்த பல பொருள்களையும் பொற்கலசங்களையும் கருங்கல் சவுக்கைகளையும் இரத்தின     சிம்மாசனைத்தையும்     திருச்சிராப்பள்ளிக்குக் கொண்டுபோய் விட்டான்; முன்பிருந்த கட்டடத்தில் நான்கில் ஒரு பங்கே இப்போது காணப்படுகிறது.