6.1 நிலம் தேர்ந்தெடுத்தல்

    கோயில் கட்டுவதற்கு     முன், உரிய நிலத்தைத் தேர்ந்தெடுத்துச் சமப்படுத்துதல் வேண்டும். அமைக்க விருக்கும் கோயிலின் அளவையொட்டி நிலத்தில் ஒரு சதுரம் வரைவர். அதனைப் பக்கத்திற்கு எட்டாக 64 சதுரங்களாகவோ, பக்கத்திற்கு ஒன்பதாக 81 சதுரங்களாகவோ அமைப்பர். இவற்றில் நடுவிலுள்ள சதுரங்களில் கருவறை விமானத்தையும், ஓரங்களிலுள்ள சதுரங்களில் பிராகாரம், பரிவாரக் கோயில்கள் முதலியவற்றை அமைத்திடுவர். இடைப்பட்ட சதுரங்களை வெளியாக விட்டுவிடுவர்.

6.1.1 ஆலயத்தின் ஆதார அங்கங்கள்

ஆலயம் எழுப்புகையில்,

1. அதிட்டானம் (அடிநிலை), 2. சுவர் (கால்), 3. பிரஸ்தரம் (கூரை), 4. கழுத்து (கிரீவம்), 5. சிகரம் (தலை), 6. குடம் (ஸ்தூபி),

என ஆறு பகுதிகளாகக் கொண்டு, ஒவ்வொன்றிலும் சிற்பிகள் தம்     திறமையை நுண்கலைக் கூறுகள் வாயிலாக வெளிப்படுத்துவர்.