பழந்தமிழ் மக்கள் வேறு இன மக்களுடன் நெருங்கிய தொடர்பு கொள்வதற்கு முன்பே இசையும் அதோடு இணைந்த கூத்தும் உருவாகி வளரத் தொடங்கின. இசை, கூத்து ஆகியவற்றின் கலை நுட்பங்களை விளக்கும் இலக்கணத் தமிழ் நூல்கள் எழுந்தன. இந்நூல்கள் எழுதப்பட்ட காலம் முச்சங்க காலம் என அறியப்படுகிறது. இம்முச்சங்க காலம் இற்றைக்கு ஏறத்தாழ மூவாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டது. எனவே தமிழர் இசையும் கூத்தும் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே செவ்விய கலைகளாக (classical arts) விளங்கின என உறுதியாகக் கொள்ளலாம். மேற்கண்ட கருத்தை மேலும் தெளிவுபடுத்திக் கொள்ள முச்சங்க காலத்தில் இசைக்கும் கூத்துக்கும் இலக்கணம் எழுதிய தமிழ் நூல்கள் யாவை என்று தெரிந்து கொள்வோமா? 1.1.1 பழந்தமிழ் இசை இலக்கண நூல்கள் இசையும் கூத்தும் ஒன்றோடொன்று இணைந்த கலைகள். கூத்து என்பதைப் பழந்தமிழ் மக்கள் நாடகம் என்றும் அழைத்தனர். நாட்டியம், ஆடல் என்ற சொற்களும் கூத்துக் கலையைக் குறிக்கும். முச்சங்க காலத்தில் இசைக்கு இலக்கண நூல்கள் எழுதப்பட்டன. கூத்துக்கும் இலக்கணம் எழுதப்பட்டது. எனவே இரு கலைகளை இணைத்தும் இலக்கண நூல்கள் எழுதப்பட்டன. கால ஓட்டத்தில் பல நூல்கள் அழிந்துபோயின. எஞ்சிய நூல்கள் பற்றி இடைக்கால உரையாசிரியர்கள் குறிப்பிடுகின்றனர். அந்நூல்கள் பற்றித் தெரிந்து கொள்வோமா?
இதுவரை சொன்ன பழந்தமிழ் இசை இலக்கண நூல்கள் எல்லாமே காலத்தால் அழிந்துவிட்டன. இது தமிழுக்கு ஒரு பெரிய இழப்பு. 1.1.3 தொல்காப்பியத்தில் இசைக் கூறுகள் பழந்தமிழ் இலக்கண நூல்களுள் முழுமையாகக் கிடைக்கும் நூல் தொல்காப்பியம். இது தொல்காப்பியர் என்பவரால் எழுதப்பட்டது. எழுத்து, சொல், பொருள் என்ற தமிழ் இலக்கணம் கூறும் நூல் இது. இசைத்தமிழ், தொடர்பான செய்திகளை இந்நூலில் ஆங்காங்குக் காணலாம். எடுத்துக்காட்டாகப் பொருளதிகாரம் அகத்திணையியல் 18 ஆம் சூத்திரம் தமிழக வாழ்க்கை நெறியின் அடிப்படைப் பண்பாட்டுக் கருவூலங்களைக் குறிப்பிடுகிறது. அந்தச் சூத்திரம் வருமாறு : (தொல். அகத்திணையியல் - 18) இங்கு தெய்வம், உணா, மா, மரம், புள், பறை, யாழ் ஆகிய பொருள்கள் சொல்லப்பட்டுள்ளன. இந்த ஏழும் தமிழர் பண்பாட்டுக் கருப்பொருள்கள். ஏழு கருப்பொருளில் ஒன்று யாழ். மற்றொன்று பறை. தொல்காப்பியம் கூறும் ‘யாழ்’ என்னும் சொல் பழந்தமிழர் வகுத்த பண்ணிசையைக் குறிக்கும். இது மிடற்றிசை (குரலிசை), நரம்புக் கருவியிசை (யாழ் என்னும் தந்திக் கருவி இசை) காற்றுக் கருவியிசை (குழல் கருவியிசை)ஆகியவற்றின் முறைகளும் மரபுகளும் பற்றியதாகும்.
தொல்காப்பியர் காலம் கி.மு. 3 ஆம் நூற்றாண்டளவினது என்பது அறிஞர்கள் கருத்து. இந்நூலின் காலக் கணிப்பு தமிழர் இசையின் தொன்மையை உறுதிப்படுத்துகிறது அல்லவா? 1.1.4 ஐந்துதிணைப் பண்கள், அதற்குரிய காலம் பழந்தமிழக மக்கள் இயற்கையோடு இணைந்து வாழ்க்கை நடத்தினர். தாம் வாழ்ந்த நிலத்தை ஐந்தென வகுத்துக் கொண்டனர். மலையும் மலைசார்ந்த இடமும் "குறிஞ்சி" என்றனர். காடும் காடு சார்ந்த இடமும் "முல்லை" என்றனர். வயலும் வயல் சார்ந்த இடமும் "மருதம்" என்றனர். கடலும் கடல் சார்ந்த இடமும் கடலோரப் பகுதியும் "நெய்தல்" என்றனர். குறிஞ்சியும் முல்லையும் தன் இயல்பில் திரிந்து பாலை என்னும் வடிவம் கொள்ளும். (குறைவான வளம் கொண்ட நிலப் பகுதியைப் "பாலை" என்றனர்). நிலத்தை ஐந்தாக வகுத்துக் கொண்ட தமிழர் அந்தந்த நிலத்துக்குரிய இசையை உருவாக்கினர். அந்தந்த நிலத்திற்குரிய பண்களைக் கீழ்க்கண்டவாறு வகுத்துக் கொண்டனர்.
இசைக்கருவிகளும் அவற்றுக்கான பொழுதும் "பண்" பாடிய தமிழர் அவ்வந் நிலத்தில் இசைத்த யாழ், முழக்கிய பறை, தொழுத தெய்வம் ஆகியவற்றையும் வகுத்துக் கொண்டனர். பண் இசைப்பதற்குரிய சிறுபொழுதையும் வரையறை செய்தனர். இதோ! இந்த அட்டவணையைப் பாருங்கள்! |
1 | 2 | 3 | 4 | 5 | 6 |
நிலம் | இசைத்த பண் | இசைத்த யாழ் | முழக்கிய பறை | தொழுத தெய்வம் | பண்ணிற்குரிய சிறுபொழுது |
குறிஞ்சி
|
குறிஞ்சிப்பண் | குறிஞ்சி யாழ் | வெறியாட்டுப் பறை தொண்டகப் பறை | சேயோன் என்னும்முருகன் | யாமம் அல்லது நள்ளிரவு. |
முல்லை | முல்லைப்பண் | முல்லையாழ் | ஏறுகோட்பறை | மாயோன் என்றதிருமால் | மாலை |
மருதம் | மருதப்பண் | மருத யாழ் | நெல்லரி மணமுழவு | வேந்தன் என்றஇந்திரன் | விடியல் |
நெய்தல் | செவ்வழிப் பண் | விளரி யாழ் | மீன் கோட் பறை | வருணன் | எற்பாடு |
பாலை | பாலைப்பண் | பாலை யாழ் | துடி | கொற்றவை | நண்பகல் |