4.0 பாட முன்னுரை

    கீர்த்தனை என்பது ஓர் இசை வகை (musical form). கருநாடக இசையின் பல்வேறு இசை வகைகளில் கீர்த்தனை மிகப்பிரபலமானது. கீர்த்தி என்பது புகழ். இறைவன் புகழ் பாடவே கீர்த்தனைகள் முதலில் இயற்றப்பட்டன. காலப்போக்கில் நாடு, மொழி, நன்னெறி முதலான எல்லாப் பொருளிலும் கீர்த்தனைகள் எழுதப்பட்டன. கருநாடக இசையில் தெய்வம் தொடர்பான கீர்த்தனைகள் நிலைத்து நின்றன. அவை தரும் பக்தி உணர்வே அதற்கான காரணமாகும்.

     பல்லவி, அநுபல்லவி, சரணம் என்ற மூன்று பகுதிகளைக் கொண்டது கீர்த்தனை. இவை இனிமையான இராகங்களில் அமைந்திருக்கும். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், சமஸ்கிருதம் ஆகிய மொழிகளில் கீர்த்தனைகள் உள்ளன.