நாடகக்கலை பற்றிச் சிந்தித்த அறிஞர்களின் கருத்துக்களின் அடிப்படையில் நாடகக் கலையில் இன்று ஏற்பட்டுள்ள படைப்பு நிலைத் தன்மைகளைக் காணலாம். நாடகங்கள் மேடையில் நடத்தப்படுவதற்காக எழுதப்படுகின்றன. அது மட்டுமன்றிப் படிப்பதற்காகவும் எழுதப்படுகின்றன. கேட்கும் நாடகங்களாக வானொலிக்கும் எழுதப்படுகின்றன. எப்படியாயினும் நாடகம் மேடையில் நடிக்கத்தக்கதாக இருக்க வேண்டும். தனியாகப் படிப்பவரும் வானொலியில் கேட்பவரும் தம் மனமேடையில் நாடக நிகழ்வுகளைக் கற்பனையில் காண்பார்கள். எழுதப்படுகிற நாடகம் மேடையில் உடலசைவுகள், வசனம், காட்சி, அமைப்பு, ஒப்பனை, ஒலிகள் ஆகியவற்றைக் கொண்டு நடிகர்களால் நிகழ்த்திக் காட்டப்படுகிறது. உடலசைவின் மூலம் பாத்திரங்களை, நடிகர் படைத்துக்காட்டுவார்கள். குரல் ஏற்ற இறக்கங்களின் மூலம் நிகழ்ச்சிக்கு வலுவும் அர்த்தமும் தருவார்கள். மேடையமைப்பின் மூலம் இடம், காலம், சூழ்நிலை ஆகியன படைத்துக் காட்டப்படும். வசனம், ஒலி ஆகியவற்றின் மூலம் கருத்து உணர்வெழுச்சி தரும் காலத்தை உணர்த்தும் சூழல்களும் காட்டப்படும். எழுத்தில் இல்லாத பலவற்றை நடிப்பில் காட்ட முடியும் என்பதால், நாடகத்தைப் படிப்பவரை விட, நேரில் பார்ப்பவர் நாடகத்தில் ஒன்றிவிட முடியும். இதை நீங்கள் அனுபவப்பூர்வமாக அறிந்திருக்கலாம். நாடக இலக்கியம் என்பது சொற்களைக் கோர்த்துத் தருவதால் மட்டும் உருவாகிவிடுவதில்லை. சொல் நயமோ பொருள் நயமோ இருப்பதால் மட்டும் இலக்கிய வடிவமான நாடகம், நாடகம் ஆகிவிடாது உணர்ச்சியைக் காட்டும் வசனங்களால் மட்டு்ம் அது நாடகம் ஆகிவிடாது. தத்துவார்த்த தர்க்கவாதங்கள் கருத்துச் செறிவு, உவமைகள், நயமான மொழிநடை இவற்றால் மட்டும் அது நாடகம் ஆகிவிடாது. இவை எல்லா இலக்கியங்களுக்கும் உரியவை. மேடையில் நிகழ்த்தப்படக்கூடிய சாத்தியங்களைக் கொண்டிருந்தால்தான் அது நாடகமாகும். நாவல், சிறுகதை முதலான படைப்பிலக்கியங்கள் போலவே நாடக இலக்கியத்திற்கும் கரு, பாத்திரம், கால அளவு, கட்டமைப்பு, காட்சி அமைப்பு, தொடக்கம், குறிப்பு, வசனம், முடிவு, தலைப்பு, உத்திகள் என்று பல கூறுகள் இருக்கின்றன. இக்கூறுகளை, இன்றைய நாடகக்கலை வளர்ச்சியே உருவாக்கியிருக்கிறது. 3.4.1 கரு முதலில் நாடகக்கரு பற்றிப் பார்ப்போம். மற்ற படைப்புக்களுக்கு வாழ்க்கையே கருவாவது போல நாடகத்திற்கும் அதுவே கருவாகிறது. இதனால்தான் நாவல் முதலான படைப்புகளை எளிதாக நாடகமாக்க முடிகிறது. ஒரு தனி மனிதனின் இயல்பும் அணுகுமுறையும் மற்ற மனிதர்களின் இயல்போடும் அணுகுமுறையோடும் முரண்பட்டு மோதும் நிகழ்ச்சிகள் கருவாகலாம். தனி மனிதனுக்குள்ளேயே அவனுடைய அறிவிற்கும் உணர்விற்கும் இருக்கும் மோதல்கள் கருவாகலாம். ஆர்வத்தைத் தூண்டும் நிகழ்ச்சிகள், நகைச்சுவை நிகழ்ச்சிகள் சமூகத்தின் இருபிரிவினரிடையே நடக்கும் மோதல்கள் என எதுவும் கருவாகலாம். யாருக்காக எழுதுகிறோம் என்பதைப் பொறுத்தும் கருத்தேர்வு அமையும். பெண்களுக்கு, குழந்தைகளுக்கு, தொழிலாளர்களுக்கு, வளோளர்களுக்கு, மாணவர்களுக்கு என்று கரு வேறுபடும். பொதுவாக எல்லாருக்குமான பிரச்சினைகளான விலைவாசிப் பிரச்சினை, சாதிப் பிரச்சினை, தண்ணீர்ப் பிரச்சினை, வீட்டுவசதிப் பிரச்சினை, சுற்றுச்சூழல் பிரச்சினை என எதுவும் கருவாகலாம். 3.4.2 பாத்திரங்கள் நாடக நிகழ்ச்சிகளுக்கு ஏற்ற பாத்திரங்கள் அமையவேண்டும். நாடகத்தில் மிக அதிகமாகப் பாத்திரங்களைத் திணித்துவிடக்கூடாது. நாடகப் பாத்திரப் படைப்பில் வளர்ச்சி நிலை காட்டவேண்டும். நாடக வசனங்களில் பாத்திரப்பண்பு புலப்பட வேண்டும். பாத்திரங்களைப் படைக்கையில் மேடையில் அவர்களது இயக்கத்தை மனக்கண்ணால் கண்டு படைக்கவேண்டும். பாத்திரங்கள் மூலமே கதை சொல்லப்பட வேண்டியிருப்பதால் பாத்திரப் படைப்பில் மிகுந்த கவனம் வேண்டும். 3.4.3 கட்டமைப்பு மற்ற படைப்புகளைப் போல நாடகத்திலும் மோதல் அறிமுகம், மோதல் வளர்ச்சி, உச்சநிலை, முடிவு என்ற கட்டமைப்பு இருக்கவேண்டும். உச்சத்தை நோக்கி வளர்வதில்தான் நாடகத்தின் ஆற்றல் இருக்கிறது. முடிவு பற்றிய குறிப்பை உணர்த்தும் வகையில் நாடகப்போக்கு ஒருமுகப்படுத்தப்பட வேண்டும். அதே நேரத்தில் தீர்வை வெளிப்படையாகச் சொல்லாமல் மெல்ல மெல்ல அவிழ்க்க வேண்டும். நாடகக் கதையைப் பகுதி பகுதியாகப் பிரித்துக் காட்சிகளாக அமைப்பது இன்றியமையாதது. நாடகக் கதை நிகழக்கூடிய களங்களான இடங்களைத் தீர்மானிக்க வேண்டும். அதற்கேற்றவாறு காட்சிகளை அமைக்க வேண்டும்; நாடக நிகழ்ச்சிகளை அதற்கேற்பப் பிரிக்க வேண்டும். முதற்காட்சி கருவையும் பாத்திங்களையும் அறிமுகப்படுத்துவதாக இருக்கும் அடுத்தடுத்த காட்சிகளில் மோதல் வளரும். அடுத்தடுத்த காட்சிகளில் வேறுவேறு நிகழ்ச்சிகள் இடம்பெற வேண்டும். ஒரே நிகழ்வைத் துண்டுபோட்டுக் காட்சிகளை அமைக்கக் கூடாது. மகிழ்ச்சி, சோகம், அதிர்ச்சி, ஆறுதல், முயற்சி என்று மாறிமாறிக் காட்சிகள் அமையவேண்டும். தொடக்கக் காட்சியும் முடிவுக் காட்சியும் கவனமாக அமைக்கப்பட வேண்டும். 3.4.4 தொடக்கம் நாடகத்தின் தொடக்கம் ஒரு கேள்வியை முன்வைக்கும். பணப்பிரச்சினை தீருமா? தீராதா?, காதல் நிறைவேறுமா? நிறைவேறாதா?, பகைமை மறையுமா? மறையாதா?, வேலை கிடைக்குமா? கிடைக்காதா? தீயவன் திருந்துவானா? திருந்தமாட்டானா?- இப்படி ஒரு கேள்வி முன்வைக்கப்படும் இதற்கு விடை இறுதிக்காட்சியில் கிடைக்கும். மாறாக ஒரு நிகழ்ச்சி தொடக்கத்தில் வைக்கப்பட்டு அதன் விளைவுகள் சொல்லப்பட்டு இறுதியில் அதனால் வரும் பிரச்சினைகளைக் காட்டித் தீர்வு தரலாம். 3.4.5 முடிவு நாடக முடிவு அழுத்தமாக அமையவேண்டும். நாடகத்தில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கும் பிரச்சினைகளுக்கும் தீர்வு தரவேண்டும். முடிவுக் காட்சியில் மையப்பாத்திரங்கள் இடம்பெற வேண்டும். 3.4.6 வசனம் நாடகத்தில் உணர்வுகளையெல்லாம் பேச்சில் காட்டவேண்டும். நாடக வசனம் பிற படைப்புகளில் வரும் உரையாடல்களைவிட வலுவுள்ளதாக இருக்க வேண்டும். தொழில் முறை நாடகம், பயில்முறை நாடகம் என்பவற்றின் வசனங்கள் வேறுபட்டு அமைந்திருந்தன. தொழில் முறை நாடகங்களில் நீண்ட வசனங்கள். பயில்முறை நாடகங்களில் உணர்வு மிகை வசனங்கள், பரிசோதனை நாடகங்களில் சுருக்கமான செறிவான வசனங்கள் என்று அமைகின்றன. வானொலி, தொலைக்காட்சி நாடக வசனங்களும் வேறுபட்டவை. வரலாற்று நாடகங்கள், சமூக நாடகங்கள், புராண நாடகங்கள் இவற்றின் வசனங்கள் வேறுபடுகின்றன. வரலாற்று நாடகமென்றால் அந்தக்கதையின் நிலைக்களனாக உள்ள சூழ்நிலையையும் காலகட்டத்தையும் நினைவில் கொண்டு அதற்கேற்றபடி வசனம் எழுதவேண்டும். பாண்டிய அரசனின் சூழலுக்கும் முகலாய அரசனின் சூழலுக்கும் வேறுபாடு, வசனத்தின் மூலம் தெரிய வேண்டும். பெரும்பாலான அச்சில் வந்த இலக்கிய நாடகங்கள் நல்ல உயரிய நடையைப் பெற்றிருக்கின்றன. ‘ஒளவையார்’,’கவியின் கனவு’ முதலான நாடகங்களிலும் ‘இராசராசசோழன்’, ‘களம்கண்ட கவிஞன்’ முதலான நாடகங்களிலும் உயரிய நடை உள்ளது. மேடைத்தமிழில் புரட்சி செய்தவர் அறிஞர் அண்ணா. அவரது ‘வேலைக்காரி’, ‘ஓரரிவு’ முதலானவற்றில் அழகிய நடை கையாளப்பட்டுள்ளது. பொதுவாக வசனம் எதார்த்தத்தன்மையுடனும் சுருக்கமாகவும் குறிப்புணர்த்துவதாகவும் அமைவது சிறப்பு. நாடக உரையாடல், கதைப்பகுதியிலிருந்து வேறுபட்டதாகச் சுருக்கமாக இருப்பது இயல்பு. கதைகளில் நீளமாக எழுதப்படுகிற பகுதியை நாடக வசனத்தில் சுருக்கமாகச் சொல்லமுடியும். கதையில் “அவள் ஊருக்குப் போவதை அவன் விரும்பவில்லை. இங்கேயே இருந்து தன்னோடு வாழவேண்டும் என்று எதிர்பார்க்கிறான். அவள் போவதில் குறியாக இருப்பதால் கோபமாக இருக்கிறான். தன்னுடைய பாதுகாப்பு வளையத்திற்குள் அவள் இருப்பதை விரும்புகிறான். அவள் ஊருக்குப் போவது அவனுடைய வளையத்தை மீறிச் செல்ல முயல்வதாகிறது” என்று வரும். இது நாடக வசனத்தில் இவ்வளவு நீளமாக வர வேண்டியதில்லை. “நீ போறது எனக்குப் பிடிக்கல. “பெரிய ஆளாயிட்டயில்ல” என்றாலே தொனியாக அர்த்தம் வந்துவிடும். 3.4.7 காட்சியமைப்புக் குறிப்புகள் காட்சியமைப்புக் குறிப்புகள் நாடகத்தில் எழுதப்பட வேண்டும். அக்குறிப்புகள் நிறையப் பொருள் தருகின்றன. இடம், காலம், நிகழ்ச்சி பற்றிய குறிப்பு ஒவ்வொரு காட்சிக்கும் அமைக்கவேண்டும். மேடை நாடகங்களில் குறிப்புகள் விரிவாக இருக்கும். காட்சி அமைப்புக் குறிப்பு, ஒலிக்குறிப்பு, நடிப்புக்குறிப்பு, பாத்திரக்குறிப்பு இவையெல்லாம் தரப்பட வேண்டும். பாத்திரங்களின் வருகை செல்கை, பாத்திரத் தோற்றக் குறிப்பு எல்லாம் தரப்பட வேண்டும். 3.4.8 நாடகத் தலைப்பு நாடகத் தலைப்பும் இன்றியமையாதது. பாத்திரப் பெயரோ, குறியீட்டுத் தலைப்போ, நகைச்சுவைத் தலைப்போ கவர்ச்சியாக இருக்கும்படி அமைவது சிறப்பாகும். 3.4.9 நாடக உத்திகள் ஆர்வத்தைத் தூண்டுதல், உச்ச நிலை, எதிர்நிலை, குறிப்பு முரண் முதலான உத்திகள் நாடகத்திற்குச் சிறப்பளிப்பவை. ஆர்வத்தூண்டுதல் எந்தக் கதைக்கும் விறுவிறுப்பைத் தரும். செய்தியை மர்மமாக்கிப் பார்வையாளர் மனத்தில் கேள்விகளையும் ஐயங்களையும் பரபரப்பையும் இது உருவாக்குகிறது. உச்சநிலை என்பது நிகழ்ச்சிகளிலும் பாத்திரங்களின் உறவு நிலைகளிலும் ஏற்படலாம். இதற்குத் தீர்வு தருவது பார்வையாளர்களுக்குப் பிடித்ததை ஏற்படுத்துகிறது. எதிர்நிலை என்பது முரண்பட்ட தன்மையில் காட்சிகளை அமைத்துச் சுவையூட்டுவது. ஒரு காட்சி சோகம் என்றால் அடுத்த காட்சி மகிழ்ச்சி எனவும், ஒரு காட்சி சத்தம் என்றால் அடுத்த காட்சி அமைதி என்றும் மாற்றி மாற்றி அமைத்துச் சமநிலையை உருவாக்குதல். ஒன்றையொன்று மிகுதிப்படுத்திக்காட்ட இது உதவும். குறிப்பு முரண் என்பது பாத்திரங்களுக்குள் ஒரு பாத்திரத்திற்குத் தெரிவது இன்னொரு பாத்திரத்திற்குத் தெரியாமல் இருப்பதால் கதையில் ஏற்படும் மாற்றம். கணவன் இறந்துவிட அது தெரியாத மனைவி அவனுக்காகச் சமைத்து வைத்துக் காத்திருக்கப் பார்வையாளர் மனத்தில் இந்த முரண்பாடு உறுத்தும். இது குறிப்பு முரணின் ஆற்றல். இத்தகைய உத்திகளை நாடகத்தில் வைப்பது இன்றியமையாதது. மேற்கண்ட இத்தகைய கூறுகள் நாடக இலக்கியத்திற்கு இன்றியமையாதவை. இதைக்கொண்டுதான் ஒரு நாடகம் இலக்கியத்தன்மை பெற முடியும். |
|