மக்களின் கதைகேட்கும்
ஆர்வம் தொல்பழங் காலந்தொட்டே வேரூன்றியுள்ளது. அதன் பல்வேறு வெளிப்பாடுகள்தாம்
தொடக்கம் முதல் இன்றுவரை இதிகாசங்கள், காப்பியங்கள், புதினங்கள், சிறுகதைகள்,
நாடகங்கள், கூத்துகள், காலட்சேபங்கள் எனப் பல்வேறு வடிவங்களைப் பெற்றுத்
திகழ்கின்றன. பழங்காலத்தில் கதைகள் வாய்மொழி மூலமாகவே பரப்பப்பட்டுள்ளன.
ஒருவர் கூறுவதைப் பலர் கூடியிருந்து கேட்டு மகிழ்ந்துள்ளனர். பின்பு
கதை இலக்கியங்கள் கூத்து வடிவிலும், நாடக வடிவிலும் நடித்துக் காட்டப்பட்டன.
தொழிற் புரட்சியாலும், அச்சு இயந்திரங்களின் வருகையாலும் கதை இலக்கியம்
நாவல், சிறுகதை என்ற புதிய இலக்கிய வகைகளாக உருப்பெற்றது. இருபதாம்
நூற்றாண்டு, கதை இலக்கியம் வளர்ச்சி பெற்ற காலமாகும். இதழ்களின் வருகையால்,
கதை இலக்கியம் பேருருவம் எடுத்தது. சிறுகதைகளும் புதினங்களும் இதழ்
வெளியீட்டில் முக்கிய இடத்தைப் பெற்றன.
இன்றைய
நிலையில் இலக்கிய உலகில் சிறுகதைகளுக்கென்றே ஒரு தனித்த இடம் உள்ளது.
கல்வி அறிவின் வளர்ச்சியும், இதழ்களின் வளர்ச்சியும் மக்களிடையே படிக்கும்
ஆர்வத்தை வளர்த்துள்ளன. வேகமாக இயங்கும் நவீன உலகிற்கு ஏற்ற வடிவமாகச்
சிறுகதைகள் அமைந்துள்ளன. இரயிலிலோ, பேருந்திலோ
பயணம் செய்யும் போது, அல்லது வேலைகளுக்கு நடுவே அவ்வப்போது கிடைக்கும்
சிறிய இடைவேளைகளில் கூடப் படித்து முடித்துவிடக் கூடிய
வகையில் சிறுகதைகள் சிறியவையாகவும் விறுவிறுப்பு உடையவையாகவும் அமைந்துள்ளன.
|