2.2 வரலாற்று நோக்கில் சிறுகதை வளர்ச்சி

தமிழ் அச்சு எழுத்துகள் தயாரிக்கப்பட்ட பின்னர், அச்சடித்த நூல்கள் பல தமிழில் வெளிவந்தன. மேலும் ஆங்கிலக் கல்வி அறிமுகப்படுத்தப்பட்டது. இவற்றின் விளைவாகப் புதிய இலக்கிய வகைகள் மலர்ந்தன. அவற்றுள் ஒன்று சிறுகதை. சிறுகதையின் வளர்ச்சி பற்றிய வரலாற்றினை நோக்குவோம்.

2.2.1 முதல் காலக் கட்டம் (1900 - 1925)

தமிழில் மேலைநாட்டு மரபை ஒட்டிய நவீனச் சிறுகதை முயற்சிகள் 20ஆம் நூற்றாண்டின் தொடக்கக் காலக் கட்டத்தில் மேற்கொள்ளப்பட்டன. ஆங்கிலத்திலும் தமிழிலும் நாவல் படைத்து வந்த அ.மாதவையா 1910ஆம் ஆண்டில் இந்து ஆங்கில நாளிதழில் வாரம் ஒரு கதையாக 27 சிறுகதைகளை எழுதினார். பின்பு இக்கதைகள் 1912இல் Kusika’s Short Stories என்ற பெயரில் இரண்டு தொகுதிகளாக வெளிவந்தன. பன்னிரண்டு ஆண்டுகள் கழித்து 1924இல், இக்கதைகளில் பதினாறை, மாதவையாவே தமிழில் மொழிபெயர்த்து, குசிகர் குட்டிக் கதைகள் என்ற பெயரில் இரு தொகுதிகளாக வெளியிட்டார். சமூகச் சீர்திருத்த நோக்குடன் இக்கதைகளைப் படைத்ததாக மாதவையா அந்நூலின் முன்னுரையில் குறிப்பிட்டுள்ளார். இதில் இடம்பெற்ற திரௌபதி கனவு, குழந்தை மணத்தையும், கைம்பெண் கொடுமையையும், அவனாலான பரிகாரம் என்ற கதை வரதட்சணைக் கொடுமையையும் பேசின. மாதவையா, தாம் ஆசிரியராக இருந்து வெளியிட்ட பஞ்சாமிர்தம் இதழிலும் தமிழில் பல சிறுகதைகள் எழுதியுள்ளார்.

மகாகவி சுப்பிரமணிய பாரதியாரும் பல சிறுகதைகளைப் படைத்துள்ளார். நவதந்திரக் கதைகள், வேணுமுதலி சரித்திரம், மன்மத ராணி, பூலோக ரம்பை, ஆவணி அவிட்டம், ஸ்வர்ண குமாரி, ஆறில் ஒரு பங்கு, காந்தாமணி, ரயில்வே ஸ்தானம் என்று பல கதைகளை எழுதியுள்ளார். பாரதியார் கதைகள் சம்பவங்களைப் பேசுகின்றனவே தவிர, இவற்றில் சிறுகதைகளுக்குரிய உணர்ச்சி இல்லை என்று பேராசிரியர் சிவத்தம்பி குறிப்பிடுகின்றார்.

வ.வே.சு. யர் 1912ஆம் ஆண்டு, கம்ப நிலையம் என்ற பதிப்பகத்தின் மூலம் மங்கையர்க்கரசியின் காதல் முதலிய கதைகள் என்ற ஐந்து கதைகள் அடங்கிய தொகுதியை வெளியிட்டார். மங்கையர்க்கரசியின் காதல், காங்கேயன், கமல விஜயன், அழேன் ழக்கே, குளத்தங்கரை அரசமரம் என்ற ஐந்து கதைகளில் குளத்தங்கரை அரசமரம் என்ற கதையே தமிழின் முதல் சிறுகதையாகப் பல விமர்சகர்களால் சுட்டப்படுகின்றது. வ.வே.சு.அய்யர் இக்கதையில் பாத்திர ஒருமை, நிகழ்ச்சி ஒருமை, உணர்வு ஒருமை என்ற மூன்றையும் சிறப்பாக அமைத்துள்ளதாக இலக்கிய விமர்சகர்கள் கூறுகின்றனர். வரதட்சணைக் கொடுமை இக்கதையின் கருப்பொருளாகும். ருக்மணி என்ற பெண்ணுக்குத் திருமணம் ஆகிறது. வரதட்சணைப் பிரச்சினை காரணமாக, சாந்தி முகூர்த்தம் தடைபட்டு, கணவனுக்கு வேறு திருமணம் நிச்சயமாகியது. இதனால் ருக்மணி தற்கொலை செய்து கொள்கிறாள். தன் தவற்றை உணர்ந்த கணவன் துறவு பூணுகிறான். ஒரு மரம் இக்கதையைச் சொன்னதாக அமைந்துள்ளது இதன் தனிச்சிறப்பாகும். இக்கதை, 1913ஆம் ஆண்டு விவேக போதினி இதழில் வெளிவந்தது. வ.வே.சு. அய்யர் காலத்திற்குப் பிறகு நாரண துரைக்கண்ணன், தி.ஜ.ரங்கநாதன் போன்றவர்கள் சிறுகதைகள் படைத்துள்ளனர். நாரண துரைக்கண்ணன் சமுதாயப் பிரச்சினைகளைப் பேசும் கதைகள் பல எழுதியுள்ளார். 1915இல் தொடங்கி, சுமார் 60 ஆண்டுகள் வரை எழுத்துப் பணியில் இருந்தார் அவர். தி.ஜ.ர.வின் முதல் சிறுகதை சந்தனக் காவடி ஆகும். இவருடைய புகழ் பெற்ற சிறுகதை நொண்டிக்கிளி ஆகும். கால் ஊனமுற்ற ஒரு பெண், எவரும் தன்னைத் திருமணம் செய்து கொள்ளப் போவதில்லை என்று உணர்ந்த பின் எடுக்கும் புரட்சிகரமான முடிவே கதையாகும். கதையில், நொண்டிப் பெண்ணின் ஏக்கங்களும் எதிர்பார்ப்புகளும் நன்கு பதிவு செய்யப்பட்டுள்ளன. காந்தியத்தைப் பேசும் பல சிறுகதைகளையும் இவர் எழுதியுள்ளார்.

இவ்வாறு மாதவையா, பாரதியார், வ.வே.சு. அய்யர் போன்றோர் தமிழில் சிறுகதை முன்னோடிகளாகப் போற்றப்படுகிறார்கள்.

2.2.2 இரண்டாம் காலக் கட்டம் (1926 - 1945)

மௌனி

லா.ச.ரா.

மு.வரதராசனார்

அகிலன்

அண்ணா

மு.கருணாநிதி

இக்காலக் கட்டம் தமிழ்ச் சிறுகதை வரலாற்றில் சிறப்பான காலக் கட்டம் எனலாம். புதுமைப்பித்தன்,கு.ப.ரா., ந.பிச்சமூர்த்தி, பி.எஸ்.ராமையா, மௌனி போன்றவர்களும், கல்கி, ராஜாஜி, கே.எஸ்.வேங்கட ரமணி, சிட்டி, சங்கரராம், லா.ச.ரா. போன்றவர்களும் இக்காலக் கட்டத்தில் சிறுகதை எழுதியுள்ளனர்.

இவர்களில் கல்கி, நவசக்தி, விமோசனம், ஆனந்த விகடன் போன்ற இதழ்களிலும், பின்பு கல்கி இதழிலும் எழுதியுள்ளார்.அவர், அதிர்ஷ்ட சக்கரம், கவர்னர் விஜயம், காங்கிரஸ் ஸ்பெஷல், கோர சம்பவம், சாரதையின் தந்திரம், டெலிவிஷன், திருவழுந்தூர் சிவக்கொழுந்து என்று பல சிறுகதைகளை எழுதியுள்ளார். கதர் இயக்கம், தீண்டாமை அகற்றுதல், உப்புச் சத்தியாகிரகம், புலால் உணவு தவிர்த்தல், விதவா விவாகம், பாலிய விவாகக் கொடுமை என்று விடுதலை உணர்வுடைய கதைகளையும், சமூக உணர்வுடைய கதைகளையும் எழுதியுள்ளார். இவருடைய எழுத்தில் நகைச்சுவை முக்கியப் பங்கு வகிக்கிறது. அவர் எழுதிய வரலாற்று நாவல்களைப் போல இச்சிறுகதைகள் இலக்கியத் தகுதியைப் பெறவில்லை என்றாலும் சிறுகதை வளர்ச்சியில் கல்கியின் பங்கு முக்கியமான ஒன்றாக இருந்திருக்கின்றது என்பதை மறுக்க இயலாது.

கல்கி எழுதியவை, வெகுஜன இதழுக்கு ஏற்ப அமைய, அவருடைய காலக் கட்டத்தில் எழுதிய புதுமைப்பித்தன் கதைகள் வடிவம், உத்தி, உள்ளடக்க முறைகளில் பரிசோதனை முயற்சிகளாக அமைந்து இலக்கிய அந்தஸ்து பெற்ற சிறுகதைகளாகச் சிறந்தன. தமிழ்ச் சிறுகதை முயற்சியை உலகத் தரத்திற்கு எடுத்துச் செல்ல முயன்றவர்களுள் புதுமைப்பித்தன் முதன்மையானவர் ஆவார். மணிக்கொடி என்ற இலக்கியப் பத்திரிகையுடன் தொடர்பு கொண்டு மிகச்சிறந்த படைப்பு முயற்சியில் ஈடுபட்டார். மேல்நாட்டுச் சிறுகதை ஆசிரியர்களின் படைப்பாக்கத்தை நன்கு அறிந்த அவர், அவற்றை உள்வாங்கிக் கொண்டு, தமது சொந்தப் படைப்பாளுமையைக் கொண்டு அற்புதமான சிறுகதைகளைப் படைத்துள்ளார். புதுமைப்பித்தன் கேலிக்கதைகள், புராணக் கதைகள், தத்துவக் கதைகள், நடப்பியல் கதைகள் என்று பலவகையான கதைகளைப் படைத்துள்ளார். வறுமையைப் பற்றிப் பொய்க் குதிரை, ஒருநாள் கழிந்தது, பொன்னகரம், துன்பக்கேணி போன்ற கதைகளையும், புராணக் கதை மரபை வைத்துச் சாபவிமோசனம், அகல்யை அன்றிரவு போன்ற கதைகளையும், தத்துவ நோக்கோடு கயிற்றரவு, மகாமசானம், ஞானக் குகை போன்ற கதைகளையும், வேடிக்கை வினோதக் கதையாகக் கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும் என்ற கதையையும், நாட்டுப்புறக் கதைப் பாங்கோடு சங்குத்தேவனின் தர்மம், வேதாளம் சொன்ன கதை போன்ற கதைகளையும் எழுதியுள்ளார். தமிழ்ச் சிறுகதை வளர்ச்சியில் புதுமைப்பித்தனின் ஆளுமையும் மேதைமையும் பின் வந்த படைப்பாளிகளுக்கு முன் மாதிரியாக அமைந்தன எனலாம். புதுமைப்பித்தன் சாகாவரம் பெற்ற சிறுகதைகளைப் படைத்து, தமிழ் இலக்கியக் கருவூலத்திற்கு வளம் சேர்த்துள்ளார்.

ந.பிச்சமூர்த்தியின் கதைகளிலும் சிறுகதையின் வடிவமும் உத்தியும் சிறப்பாக அமைந்துள்ளன. மனித மன ஆழத்தை அவர் தம் கதைகளில் சிறப்பாக வடித்துள்ளார். பதினெட்டாம் பெருக்கு, தாய், வானம்பாடி, மண்ணாசை, விழிப்பு, பஞ்சகல்யாணி போன்ற பல இலக்கியத் தரமான கதைகளைப் படைத்துள்ளார் அவர். கு.ப.ராஜகோபாலன் இக்காலக் கட்டத்தைச் சேர்ந்த மற்றொரு சிறந்த எழுத்தாளர் ஆவார். இவர் ஆண் பெண் உறவை மையமாகக் கொண்டு பல கதைகளை எழுதியுள்ளார். அக்காலத்தில் பிறர் தொடத் தயங்கிய பிரச்சினைகளை அவர் ஆபாசமாகவோ உணர்ச்சியைத் தூண்டிவிடும் வகையிலோ இல்லாமல், ஆக்கப் பூர்வமாக அணுகிப் பார்த்துள்ளார். திரை, சிறிது வெளிச்சம், மூன்று உள்ளங்கள், ஆற்றாமை, விடியுமா, நூருன்னிசா, தாயாரின் திருப்தி போன்ற இவருடைய கதைகளும் குறிப்பிட்டுச் சொல்லத் தக்கனவாகும்.

மௌனி, இக்காலக் கட்டத்தைச் சேர்ந்த மற்றொரு சிறந்த படைப்பாளி ஆவார். மௌனியின் சிறுகதை முயற்சி வித்தியாசமானது. குறியீடு என்னும் உத்தியை அவர்தம் கதைகளில் அதிகம் எடுத்தாண்டுள்ளார். அதனால், மௌனியின் கதைகளைச் சாதாரண வாசகர்களால் அத்துணை எளிதாகப் புரிந்து கொள்ள இயலாது. இவருடைய தமிழ்நடையும் அசாதாரணமானது. ஏன்? இவருடைய முதல் கதையாகும். இவருடைய சிறுகதைகள் அனைத்தும் அழியாச் சுடர், மௌனியின் கதைகள் என்ற பெயர்களில் இரு தொகுதிகளாக வெளிவந்துள்ளன.

இந்தக் காலக்கட்டத்தில் எழுதிய மற்றொரு எழுத்தாளர் லா.ச.ராமாமிர்தம். இவர் கதை சொல்லும் நடையும் வித்தியாசமானதாகும். இவர், மந்திர உச்சாடனம் போலச் சொற்களை ஒலிப்பாங்குடன் பயன்படுத்தும் விதத்தில் தமக்கென ஒரு முத்திரையைப் பதித்துள்ளார். சிறுகதை வடிவத்தையும் தாண்டி, விசுவரூபம் எடுப்பன இவருடைய கதைகள். தரங்கிணி, காயத்திரி, இதழ்கள், புலி ஆடு, ஜ்வாலை என்பன இவருடைய சிறுகதைகளில் சிலவாகும்.

இக்காலக் கட்டத்தில் எழுதிய குறிப்பிடத்தகுந்த பிற சிறுகதை எழுத்தாளர்கள் பி.எஸ். ராமையா, கி.ரா. என்ற கி.ராமச்சந்திரன், சிதம்பர சுப்பிரமணியன், டி.எஸ். சொக்கலிங்கம், சங்கு சுப்பிரமணியன் போன்றவர்கள் ஆவர்.

2.2.3 மூன்றாம் காலக் கட்டம் (1946 - 1970)

தமிழ்ச் சிறுகதை வரலாற்றில், மூன்றாவது பகுதியான இக்காலக் கட்டத்தில், மிகப் பலர் சிறுகதை எழுதுவதை மேற்கொண்டார்கள். கரிச்சான் குஞ்சு, தி.ஜானகிராமன், எம்.வி.வெங்கட்ராம், ரா. பாலகிருஷ்ணன், விந்தன், கு.அழகிரிசாமி, மு.சிதம்பர ரகுநாதன், அகிலன், நா.பா என்ற நா.பார்த்தசாரதி போன்றவர்களும், திராவிட இயக்க எழுத்தாளர்களான அண்ணா, மு.கருணாநிதி ஆகியவர்களும், மு.வ. என்னும் மு.வரதராசனார், ஜெயகாந்தன் ஆகியவர்களும் சிறுகதைகள் படைத்துள்ளனர். இவர்களில் சிலர் சிறுகதை இலக்கியத்திலும், சிலர் நாவல் இலக்கியத்திலும், சிலர் இவ்விரண்டு இலக்கிய வகைகளிலும் தடம் பதித்துள்ளனர்.

தி.ஜானகிராமன், தமிழ் எழுத்துலகில் நாவல், சிறுகதை என்ற இரண்டு இலக்கிய வகைகளிலும் முன்வரிசையில் நிற்பவர். கு.ப.ரா. வைப் போன்று ஆண், பெண் உறவைக் கதைப் பொருளாக்கிக் கொண்டவர் ஆவார். கதைமாந்தர் படைப்பிலும், மொழி ஆளுகையிலும் வெற்றி பெற்ற இவர் மறதிக்கு, செய்தி, முள்முடி, சிலிர்ப்பு போன்ற பல கதைகளை எழுதியுள்ளார்.

இக்காலக் கட்டத்தில் சிறுகதை, நாவல் என்ற இரண்டு படைப்பிலும் சிறந்து விளங்கிய எழுத்தாளர்களுள் அகிலனும், நா.பா.வும் ஜெயகாந்தனும் குறிப்பிடத்தக்கவர்கள். அகிலன் பதினேழு சிறுகதைத் தொகுதிகளை எழுதி வெளியிட்டுள்ளார். இவரின் முதல் சிறுகதை காசு மரம் என்பதாகும். வறுமை, ஆண் பெண் உறவுகள், விதவை நிலை, வரதட்சணைக் கொடுமை என்று பல பொருண்மைகளில் இவர் கதைகள் படைத்துள்ளார். நட்பு, வீரம், காதல் போன்ற இலக்கியப் பொருண்மைகளும் இவருடைய கதைகளில் காணக்கிடைக்கின்றன. இவருடைய எரிமலை என்ற இக்கதை சிறுகதைத் தொகுதி தமிழ்நாடு அரசின் பரிசு பெற்றது. பின்பு அக்கதை, எங்கே போகிறோம் என்ற நாவலாக அவரால் விரித்து எழுதப்பட்டது. சகோதரர் அன்றோ, கங்காஸ்நானம், சிசுவின் குரல், ஏழைப் பிள்ளையார், பெரிய மீன், ஆண்-பெண், குழந்தை சிரித்தது, சத்திய ஆவேசம், நெல்லூர் அரிசி, பசியும் ருசியும், விடுதலை என்பன இவர் எழுதிய சிறுகதைகளுள் சிலவாகும்.

அகிலனைப் போன்று மரபிலக்கியப் பாங்கில் கதை இலக்கியத்தை எடுத்துச் சென்றவர் நா.பா. தெய்வத்தாலாகாதெனினும், ஆயுதம், தகுதியும் தனிமனிதனும், பிரதி பிம்பம், ஒரு கவியின் உள்உலகங்கள், மறுபடியும் ஒரு மஹிஷாசுர வதம், அமெரிக்காவிலிருந்து பேரன் வருகிறான், களவும் கற்று, ஒரு சர்வதேசக் கருத்தரங்கு போன்ற பல சிறுகதைகளை எழுதியுள்ளார்.

திராவிட இயக்கச் செல்வாக்குடன் பகுத்தறிவுப் பாதையில் கதை படைத்தவர்களுள் அண்ணா, மு.கருணாநிதி, ஆசைத்தம்பி, தென்னரசு, டி,கே,சீனிவாசன், தில்லை வில்லாளன் போன்றவர்கள் குறிப்பிடத்தக்கவர்கள். இவர்களில் உள்ளடக்கம், உத்தி, நடை ஆகியவற்றை முழுமையாகக் கையாண்டு கதை படைத்தவர்களுள் அண்ணா முதன்மையானவர். சாதி சமய மறுப்பு, வறுமை, கலப்பு மணம், பலதார மணம், விதவை மணம் என்பனவற்றை அடிப்படையாகக் கொண்டன இவருடைய கதைகள். தஞ்சை வீழ்ச்சி, சொர்க்கத்தில் நரகம், திருமலை கண்ட திவ்விய ஜோதி, புலி நகம், பிடி சாம்பல் போன்ற பல கதைகளில் மத நம்பிக்கையைக் கண்டித்துள்ளார். செவ்வாழை இவருடைய மிகச் சிறந்த கதையாகும். ஏழ்மையின் கொடுமையை இக்கதையில் மிகச் சிறப்பாக எடுத்துக்காட்டியுள்ளார். வடிவ உத்தியுடன் பகுத்தறிவுப் பாதையில் கதை எழுதியவர் மு.கருணாநிதி. குப்பைத்தொட்டி, கண்டதும் காதல் ஒழிக, நளாயினி, பிரேத விசாரணை, தொத்துக் கிளி, வாழ முடியாதவர்கள் போன்ற இவருடைய சிறுதைகள் குறிப்பிடத்தக்கன.

இக்காலக் கட்டத்தில் எழுதிய ஜெயகாந்தன் சிறந்த சிறுகதை எழுத்தாளர் என்ற பெயரைப் பெற்றுள்ளார். முற்போக்கு எழுத்தாளராக அறியப்பட்ட அவர் தொடக்கத்தில் சோதனை ரீதியாகவும் பின்னர் ஜனரஞ்சகமாகவும் கதைகளைப் படைத்துள்ளார். இவருடைய பல சிறுகதைகள் விமர்சனத்திற்கும் விவாதத்திற்கும் உள்ளாயின. சிறுகதையின் உள்ளடக்கத்திற்கு மட்டுமல்ல, வடிவத்திற்கு உரமளித்தவர் இவர். இவருடைய எழுத்துகள் பலரை எழுதத் தூண்டின. இவருடைய பாணியில் இன்று பலர் எழுதிக் கொண்டிருக்கின்றனர்.

2.2.4 நான்காம் காலக் கட்டம் (1976 முதல் இன்று வரை)

எழுபதுகளில் சா.கந்தசாமி, இந்திரா பார்த்தசாரதி, ந.முத்துசாமி, அசோகமித்திரன், நீல பத்மநாபன், வண்ணநிலவன், வண்ணதாசன், சுஜாதா, நவபாரதி, சுப்பிரமணிய ராஜு, பாலகுமாரன் போன்றவர்களும் பா.செயப்பிரகாசம், பிரபஞ்சன், கிருஷ்ணன் நம்பி, ஜெயமோகன், ஜி.நாகராஜன் போன்றவர்களும் சிறுகதைப் படைப்புகளில் குறிப்பிட்டுச் சொல்லும்படியாகத் தடம் பதித்துள்ளனர். இந்தக் காலக் கட்டத்தில், நவீனத் தமிழ்ச் சிறுகதை இலக்கியம், கருத்திலும் சொல்லும் நேர்த்தியிலும் மொழியைக் கையாளும் முறையிலும் பல மாறுதல்களைக் கண்டுள்ளது. இச்சிறுகதைகள் தமிழ் மக்களின் வாழ்க்கையைப் பல்வேறு கோணங்களில் பிரதிபலித்துக் காட்டுகின்றன. சிறுகதைப் படைப்பே விமர்சன ரீதியாக எழுதப்பட்டது. அதனால் தேவையற்ற சொல் அலங்காரம், தேவையில்லாத வர்ணனைகள் என்பனவெல்லாம் தவிர்க்கப்பட்டு, படைப்பு அதன் முழு வீச்சோடு வெளிப்பட்டுள்ளது எனலாம். இருபத்தோராம் நூற்றாண்டு தொடர்பு யுகம், கணினி யுகம் என்றெல்லாம் சுட்டப்படுகிறது. இந்நூற்றாண்டில், இணைய இதழ்கள் என்ற புதுவகை இதழ்கள் தோற்றம் பெற்றன. அவற்றில் உலகத் தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகள் ஒருங்கே இடம் பெறுவதற்கான சாத்தியக் கூறுகள் உருவாகிக் கொண்டிருக்கின்றன. தமிழகத்திலிருந்து புலம்பெயர்ந்த காஞ்சனா தாமோதரன், கீதா பென்னட், இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்த இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியன் போன்றவர்கள் தொடர்ந்து இவ்விதழ்களில் எழுதி வருகின்றனர். இவர்களைத் தொடர்ந்து உலகத் தமிழ் எழுத்தாளர்கள் பலர் சங்கமிக்க இணைய இதழ்கள் வழி அமைத்தால் அது தமிழ்ச் சிறுகதை வளர்ச்சியை மற்றோர் உயரத்திற்கு உறுதியாக இட்டுச் செல்லும் என்பதில் ஐயமில்லை.