கதையின்
தொடக்கம் படிப்பவர் கவனத்தை ஈர்க்க வேண்டும். இவ்வாறு அமையும் கதைத் தொடக்கம்
கதைமாந்தர் உரையாடலில் தொடங்கலாம். கதைமாந்தர் ஒருவரின் மனநிலையைத் தெரிவிப்பதாக
இருக்கலாம். கதை நிகழும் இடம், அல்லது காலத்தின் வர்ணனையாக அமையலாம். வாசகரை
நேரடியாக விளித்து அவர்களைத் தன் வசப்படுத்தும் உத்தியாகவும் அமையலாம். புதுமைப்பித்தன்,
ஜெயகாந்தன் ஆகியோர் இவ்வுத்தியைக் கையாண்டிருப்பதை அவர்கள் சிறுகதைகளில்
காணலாம். “பொன்னகரத்தைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா?” இப்படித்
தொடங்குகிறது புதுமைப்பித்தனின் பொன்னகரம். இனி, சூடாமணி சிறுகதைகளின்
கதைத் தொடக்கங்களைப் பார்ப்போமா.
“பின்னால் காலடியோசை
ஒலிப்பது போல் இருந்தது. அவள் துணுக்குற்றாள்; அப்படியே நின்றாள். உற்றுப்பார்த்தாள்.
பிரமையா” - இப்படி இரவில் நடந்து போகும் ஒரு பெண்ணின் மனநிலையை உணர்த்துவதாகத்
தொடங்குகிறது வேலை சிறுகதை. “வலது தோள் மலோக்கு. கருநீல நிறம். கையிரண்டில்
வாளி, நீர், துடப்பம்” என்று வேலைக்காரப் பெண்ணின் வர்ணனையில் தொடங்குகிறது
விஜயா என்னும் சிறுகதை.
‘மே மாதத் தொடக்கம்’
என்று கோடைக் காலத்தை அறிமுகப்படுத்தும் கோடைக் காலக் குழந்தைகள்.
"சிறகு இல்லாமல் பறக்க
முடியுமா? ஒலி இல்லாமல் பாட முடியுமா? நள்ளிரவுக் கருமையை வானில் வண்ணங்களாய்க்
காண முடியுமா? இவ்வளவையும் வாணி செய்தாள்" என்று - வாணியின் மகிழ்ச்சியான
மனநிலையை வினாக்களாக்கித் தொடங்குகிறது அக்காவின் அறை என்னும் சிறுகதை.
வீம்பு என்னும்
கதையில் “அப்பாவை ரேஷன் கடையில் பார்த்ததுமே பகீரென்றது. இளைத்துத் துரும்பாயிருந்தார். நாலே
மாதங்களில் இத்தகைய வித்தியாசமா?” என்ற தொடக்கம், ‘அப்பா - மகன் மன வேறுபாடு;
பிரிவு ஆனால் உள்ளத்தின் ஆழத்தே பாசம்’ என்று கதையின் உள்ளடக்கத்தையே சுருக்கித்
தந்திருக்கிறது, "அக்கா ஒரு அலாதிப் பிரகிருதிதான்." என்று தொடங்கும் சிறுகதை
விசாலம். அவளுடைய பாத்திரப் படைப்பை மையமாக வைத்து எழுதப்பட்ட கதைக்கு
அதையே கதையின் தொடக்கமாக வைத்தது பொருத்தமாக அமைகிறது.
|