|
எழுத்தாளர் சு.சமுத்திரம்
நெல்லை மாவட்டத்தில்
திப்பணம்பட்டி என்ற கிராமத்தில் 15.12.1941இல்
பிறந்தவர்.
இளமையிலேயே தாய் தந்தையரை இழந்து பல்வேறு
இடர்ப்பாடுகளுக்கு இடையே பட்டதாரி ஆனவர். ஆசிரியர்,
கூட்டுறவுத் துறை ஆய்வாளர், ஊராட்சி வளர்ச்சி அதிகாரி ஆகிய
மாநில அரசுப் பதவிகளை ஏற்றுப் பணியாற்றியவர். பின்னர்
இந்தியத் தொலைக்காட்சியில் செய்தி ஆசிரியர், கள விளம்பரத்
துறை இணை இயக்குநர் போன்ற மத்திய அரசுப் பதவிகளையும்
ஏற்றுத் திறம்படப் பணியாற்றியவர். 1975இல்,
இவரது முதல்
சிறுகதை ஆனந்தவிகடன் இதழில் வெளிவந்தது. குற்றம்
பார்க்கில் என்ற சிறுகதைத் தொகுதி தமிழக அரசின்
பரிசு
பெற்றது.
|
|
1974ஆம் ஆண்டு முதல் படைப்புப்
பணியைத்
தொடங்கியவர். இதுவரை 20 புதினங்களையும் 21 சிறுகதைத்
தொகுப்புகளையும் படைத்து வெளியிட்டுள்ளார். ஒரு
சத்தியத்தின் அழுகை, ஒரு மாமரமும் மரங்கொத்திப்
பறவைகளும், மனம் கொத்தி மனிதர்கள், குற்றம் பார்க்கில்,
காகித உறவு, சமுத்திரம் கதைகள், உறவுக்கு அப்பால்,
மண்சுமை, ஏவாத கணைகள், காலில் விழுந்த கவிதைகள்,
மானுடத்தின் நாணயங்கள் முதலான 21
சிறுகதைத்
தொகுதிகளில் இவருடைய சிறந்த
சிறுகதைகளைக் காணலாம்.
சிறுகதையின் அளவு, ஆற்றல், ஆளுமை முதலிய
அனைத்தையும் டாக்டர் வாசவன் தம் வண்ணத்தமிழ் வாசல்கள் என்னும் நூலில்
பின்வருமாறு அருமையாக விளக்குகிறார்:
"கதைக்குக் கால் முளைத்தால்
மட்டும் போதாது.
இறக்கைகளும் முளைக்க வேண்டும். அந்த இறக்கைகள்
சுருங்கச் சொல்லலும், சுருக்கெனச் சொல்லலும்.
சிறுகதை
வடிவத்தில் சிறிதானாலும் வானத்தையும், பூமியையும்
அளந்துவிட்டு அளப்பதற்கு இன்னும் இடம் கேட்கின்ற
வாமனனைப் போன்றது. இராம பாணத்தைப் போன்று குறி
தவறாமல் இலக்கை எட்டக் கூடியது. அதனால்தான் வேறெந்தப்
படைப்பிலக்கியத்தையும் விடச் சிறுகதை உலகளாவக்
கோலோச்சுகிறது. நீங்கள் பார்க்கிற, பழகுகிற, உங்களையும்
மற்றவர்களையும் பாதிக்கிற ஒவ்வொரு நிகழ்ச்சியுமே
சிறுகதைதான்".
இக்கருத்தைப் பிரதிபலிப்பனவாக அமைந்தவைதாம்
சு.சமுத்திரத்தின் சிறுகதைப் படைப்புக்கள் எனலாம்.
நாள்தோறும் நாம் பார்க்கின்ற மனிதர்களின்
எண்ணங்கள்,
ஆசைகள், வாழ்க்கைச் சூழல்கள், அது தரும் நெருக்கடிகள்,
அவற்றால் மனிதன் தாழ்வதும் உயர்வதும் ஆகிய நிலைகள்
சமுத்திரத்தின் சிறுகதைகளில் படம் பிடிக்கப்படுகின்றன.
|