சிறுகதைத் தலைப்பிலேயே, கதைக்
கருவைப் புலப்படுத்தும்
உத்தியை இவருடைய பல சிறுகதைகளில் காணலாம். ‘சிறகுகள்
முறியும்’ என்பது பறத்தற்குரிய சிறகுகள் இருந்தும் சுதந்திரம்
பறிக்கப்பட்டதன் அறிகுறியாக இடப்பட்ட தலைப்பாகிறது.
இறந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம் ஆகிய மூன்றுக்கும்
பொருந்துவது போல் முறியும் என்று
குறிப்பிடுவதைக்
காணலாம்.
கதைக் கருவை உருவகமாக்கித்
தலைப்பிலே தரும் உத்தி
‘காட்டில் ஒரு மான்’ சிறுகதைத் தலைப்பில் காணலாம். மான்
கொடிய விலங்குகளுக்கு அஞ்சக் கூடியது. அச்சத்துடன்
ஓடினாலும் அதற்கென்று ஓர் உலகம் இருக்கிறது. ஒருநாள் தன்
கூட்டத்தை விட்டுத் தான் வாழும் காட்டில் ஒரு பகுதியை
விட்டு விட்டுப் புதியதொரு பகுதிக்கு வந்து விடுகிறது. எதைப்
பார்த்தாலும் புதியதாக இருப்பதால் அஞ்சி அஞ்சி ஓடுகிறது.
பிறகு துள்ளித் துள்ளி ஓடி அனைத்துப் பகுதிகளையும் அறிந்து
கொள்கிறது. அதன் பின்னர் அச்சமின்றி அங்கு வாழ்வதாகச்
சொல்லப்படும் இக்கதை ஒரு பெண்ணால்
அங்குள்ள
குழந்தைகளுக்குச் சொல்லப்படுகிறது. அந்த
மானைப்
போன்றவள்தான் அந்தப் பெண்ணும். மணமான அவளுக்குக்
குழந்தைப் பேறு கிட்டவில்லை. அவளால் அனைவரிடமும்
அன்பு செலுத்த முடியும். நல்ல எண்ணங்கள் கொண்ட அவள்
குழந்தைப் பேறில்லாத ஒரு பெண்ணுக்கு இச்சமுதாயத்தில்
என்னென்ன பழிகள் உண்டாகும் என்பதை
அறிந்து
கொண்டவளாய் இருக்கிறாள். அதற்கு ஏற்றாற்போல்
கணவனுக்கு மறுமணம் செய்து வைத்தாள்.
எல்லாக்
குழந்தைகளையும் அன்புடன் நேசித்தாள். பிள்ளை பெறாதவள்
என்று கூறும் இச்சமுதாயத்தைத் தன் உள்ள உறுதியால் வென்று
அந்த மான் போல் அச்சமின்றி வாழ்கிறாள்
என்பதை
உருவகமாக இச்சிறுகதை உணர்த்துவதைக் காணலாம்.
ஒரே தலைப்பில் (பயணம் 1, பயணம்
2, பயணம் 3) மூன்று
சிறுகதைகளைப் படைத்து வேறுபட்ட மூன்று
பயண
அனுபவங்களைச் சுவைபடச் சொல்கிறார் அம்பை (காட்டில்
ஒரு மான்).