6.5 தொகுப்புரை

அறுபதுகளின் பிற்பகுதியிலிருந்து பெண்ணிய நோக்கில் தீவிரமாக எழுதிக் கொண்டிருக்கும் அம்பையின் சிறுகதைகள் இதுவரை மூன்று தொகுதிகள் வெளிவந்துள்ளன. மாத இதழ்களிலும், இலக்கிய இதழ்களிலும் தொடர்ந்து தன் சிறுகதைப் படைப்புகளை அளித்து வருகிறார். தமிழ் இலக்கியத்தில் பெண்கள் பற்றிய ஓர் ஆராய்ச்சி நூலை எழுதியுள்ள இவர் அந்த ஆய்வு அடிப்படையிலேயே சிறுகதைகள் படைத்து வருகின்றார். பிறப்பதற்கு முன்னரே ஒரு பெண்ணுக்கு இச்சமுதாயத்தில் வாழும் உரிமையில்லாமல் போகிறது. பிறந்த பின்னரோ அவள் உரிமைகளையும் உணர்வுகளையும் ஒடுக்குவதற்கு இச்சமுதாயம் வைத்திருக்கும் சாத்திரங்கள், கோட்பாடுகள் அனைத்தும் அம்பை கதைகளின் களன்களாகின்றன. குடும்பத்தில் தொடங்கிச் சமுதாயம் முடியப் பெண்கள் உரிமையற்று ஒடுக்கப்படுதலும், அந்த உரிமைகளைப் பெறும் முயற்சியில் அவள் ஈடுபடுதலும் அம்பையின் சிந்தனையில் கருக்கொண்டு சிறுகதை வடிவம் பெறுகின்றன.

புராணக் கதைகளைப் புதிய பார்வையோடு நோக்கி அம்பை புதிய சிந்தனைகளை வெளிப்படுத்துகிறார்.

கல்வி அறிவில்லாத கிராமத்துப் பெண் ஆணின் அடக்குமுறைக்கு உட்பட்டு வீட்டு வேலைகள் செய்யும் ஓர் அடிமைபோல்தான் இருக்கிறாள். தான் ஒடுக்கப்படுகிறோம் என்பதை அறியாதவளாய் இருப்பதால் அவள் மகிழ்ச்சியாக இருக்கிறாள். டாக்டர் பட்டம் பெற ஆராய்ச்சிப் படிப்பில் ஈடுபட்டிருக்கும் பெண்ணோ அந்த அடக்குமுறைகளினால் மிகுந்த மன வேதனைக்கு உள்ளாகிறாள். வேதனைக்கு உள்ளாகிறவள் ஒடுக்கப் பட்டிருப்பவளின் மகிழ்ச்சியைப் பார்த்து வியப்பதும் அம்பையின் கதைகளில் காணலாம். அறிவியல் தொழில் நுட்பச் சாதனங்களாகிய கணினிகளிலும் ஆணாதிக்க உணர்வு மிக்கிருப்பதை எடுத்துக் காட்டுகிறார் அம்பை. மனித நேய உணர்வினை எடுத்துக் காட்டும் சிறுகதைகளையும் அம்பை படைத்துள்ளார்.

கடலில் பிடித்த மீன்களில் மஞ்சள் மீன் ஒன்று மீனவர் கையிலிருந்து கீழே தப்பியது. அதை மீண்டும் கடலில் கொண்டு போய் விட்டு மகிழ்ச்சியடையும் உயர்ந்த உணர்வையும் அம்பை மஞ்சள் மீன் சிறுகதையில் எடுத்துக் காட்டுகிறார். வெவ்வேறு வகையான கதை மாந்தர்களைப் படைத்துக் காட்டுகிறார் அம்பை. வெவ்வேறு வகையான கதை மாந்தர் படைப்பு அம்பையின் படைப்புத் திறனுக்குச் சான்றாகும். ஆணாதிக்கம், அதை உணர்ந்த பெண்களின் எண்ணங்களும், பேச்சும், செயலும் அம்பையின் அனைத்துப் படைப்புகளிலும் எதிரொலிக்கின்றன எனலாம்.
 

தன் மதிப்பீடு : வினாக்கள் - II

1)

‘புனர்’ சிறுகதையின் உள்ளடக்கம் யாது?

(விடை)
2)
சமையலறையில் பெண்கள் உழைப்புச் சுரண்டப்படுதல் குறித்த சிறுகதை யாது?
(விடை)
3)
‘வாகனம்’ சிறுகதையில் பெண் இறுதியாகத் தேர்ந்தெடுத்துப் பயிலும் வாகனம் எது?
(விடை)
4)
உளவியல் ரீதியில் படைக்கப்பட்ட சிறுகதை எது?
(விடை)
5)
‘மஞ்சள் மீன்’ சிறுகதையின் உள்ளடக்கம் யாது?
(விடை)