நண்பர்களே! இதுவரை, கவியரசு என்று போற்றப்படும் கண்ணதாசனின்
கவிதைகள் பற்றிய சில செய்திகளை அறிந்திருப்பீர்கள். இந்தப் பாடத்திலிருந்து
என்னென்ன செய்திகளை அறிந்துகொண்டீர்கள் என்று மீண்டும் ஒருமுறை நினைவுபடுத்திப்
பாருங்கள்:
- கண்ணதாசன் என்னும் கவிஞர் பற்றிப் பொதுவாக அறிந்து கொள்ள முடிந்தது.
- அவரது கவிதைகள் பற்றியும், அவற்றின் இலக்கியச் சிறப்புக்குக் காரணமான
எளிமை, இனிமை, தெளிவு பற்றியும் தெரிந்துகொள்ள முடிந்தது. சொல்லாட்சி,
உவமை, உருவகம் போன்றவை எவ்வாறு அமைந்துள்ளன என்பதைப் புரிந்து கொள்ள முடிந்தது.
- துன்பம், காதல் போன்ற சுவைகள் எவ்வாறு அமைந்துள்ளன என்பதை உணர்ந்து
கொள்ள முடிந்தது. கவிதைகளில் உள்ள தத்துவக் கருத்துகள், ஆன்மிக வெளிப்பாடுகள்
பற்றியும் ஓரளவு தெரிந்து கொள்ளமுடிந்தது.
- உள்ளத்தை ஒளித்து வைக்காமல் உலகத்துக்குக் காட்டி வாழ்ந்த ஓர் உயர்ந்த
கவிஞர் கண்ணதாசன் என்று புரிந்துகொள்ள முடிந்தது.
|