நண்பர்களே ! நாம் எண்ணத்தை மொழியாக வெளியிடுகிறோம்.
நம் எண்ண ஓட்டம் இரண்டு வழிகளில் அமைகிறது. ஒன்று, காரண காரியத்தோடு உலகின்
உண்மைகளை அறியத் துடிக்கும் அறிவுவழி. இன்னொன்று உலகையும் வாழ்வையும் சுவைக்கத்
துடிக்கும் நம் உணர்வின் வழி. மொழியாக வெளிப்படும் எண்ணம், அறிவின் வழியில்
நடந்தால் அது வசனம் (உரைநடை) ஆகிறது. அந்த எண்ணம் உணர்வின் பாதையில் ஓடினால்
அது கவிதை ஆகிறது.
ஒரு சான்று காட்டினால் இது இன்னும் தெளிவாக உங்களுக்குப்
புரியும்.
‘தீ சுடும்’ என்பது அறிவியல் உண்மை. இப்படிச் சொன்னால்
அது வசனம்.
‘தீ இனிது’ என்கிறார் பாரதி. தீ இனிமையானதா? இனிக்குமா?
இது அறிவியலுக்கு ஏற்காது. இந்த வார்த்தைகள் அறிவு நிலையில் வெளிப்பட்டவை அல்ல.
உணர்வு நிலையில் வெளிப்பட்டவை என்று புரிந்து கொள்கிறோம். இது பல கற்பனைகளை
எழுப்புகிறது. எனவே, இது கவிதை.
வார்த்தை, நம் அறிவுடன் மட்டும் பேசும்போது அது வெறும்
செய்தியை மட்டும் சொல்கிறது. வசனமாக நின்று போகிறது. வார்த்தை, நம் உணர்வுடன்
பேசும்போது உணர்ச்சியைத் தூண்டுகிறது. கற்பனையைத் தூண்டுகிறது. கவிதை ஆகிறது.
இதிலிருந்து நாம் புரிந்துகொள்வது என்ன? வசனம் கவிதை
இரண்டிற்கும் இடையில் உள்ள வேறுபாடு வடிவத்தில் இல்லை; பண்பில்தான் உள்ளது.
|