காந்தி யின் தூய வாழ்க்கையால் கவரப்பட்டவர்
பிச்சமூர்த்தி. சமூக வாழ்வில் எளிமை, நேர்மை, ஒழுக்கம், மனித நேயம், சேவை இவை
இவர் வியந்து பின்பற்றிய காந்திய நெறிகள். சிறுமை கண்டு பொங்கும் நெஞ்சம் இவருடையது.
‘வாழ்வில் பெரும் செல்வத்தைத் தேடிக்கொள்ள எந்தக் கெட்ட வழியையும் பின்பற்றலாம்’
என்னும் ‘பிழைப்பு வாதத்தை’ இவர் கடுமையாக வெறுக்கின்றார்; எதிர்க்கின்றார்.
பெட்டிக் கடை நாரணன் என்ற அங்கதக் கவிதையாக இந்த எதிர்ப்பு உணர்வு வெளிப்பட்டு
உள்ளது.
உலகப் போர்க் காலத்தில் வளர்ந்த ‘கள்ளச் சந்தை’ வணிகம்
பற்றியது இக்கவிதை. போரின் விளைவால் உற்பத்தி, போக்குவரத்து இவை பாதிக்கப்பட்டு
உணவு போன்ற பொருள்களுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டது. பேராசை கொண்ட வணிகர்கள்
பொருள்களைப் பதுக்கி வைத்து, மறைவாக மிக அதிக விலைக்கு விற்றுக் கொள்ளை லாபம்
சம்பாதித்தனர். மேலும், கலப்படம் செய்தும் மக்களை ஏமாற்றினர். இதற்குக் கள்ளச்சந்தை
என்றும் கறுப்புச் சந்தை என்றும் பெயர். அரசாங்கம் இந்தக் கொள்ளைக்காரர்களிடம்
இருந்து மக்களைக் காப்பாற்றப் பங்கீட்டுக் கடை (ரேசன் கடை)களை ஏற்படுத்தியது.
அந்தக் கடை உரிமை பெற்ற வணிகர்களும் இந்த வகைக் கொள்ளை வியாபாரத்தில் ஈடுபடத்
தொடங்கிவிட்டனர். இந்தக் கொடுமையைப் பொறுக்க முடியாமல் பிச்சமூர்த்தி படைத்த
கவிதைதான் ‘பெட்டிக்கடை நாரணன்’.
முதலில் பெட்டிக்கடை வைத்த நாரணன் அரசாங்க அதிகாரி
ஒருவர் தயவால் பங்கீட்டுக் கடை உரிமம் பெற்றான். அரிசியுடன் களிமண் உருண்டை
கலப்படம் செய்தும், மண்ணெண்ணெயைக் ‘கறுப்பில்’ விற்றும் கொள்ளை இலாபம் அடைந்தான்.
தன்செயலை நியாயப்படுத்திப் பேசுகிறான். கவிஞர் நையாண்டியாய்ப் பேசுகிறார் :
மண்ணெண்ணெய் வர்ணம்
இரண்டுதான்
என்றாலும்
மஞ்சளும் வெளுப்பும்
என்றாலும், பலபேர்கள்
கறுப்புஎன்று கதறினர்...
பாவமான கலப்படத்தை நியாயப்படுத்தி அவன் பேசும் பேச்சும்
பரிகாசமாய் வெளிப்படுகிறது : பாவம் ஒன்று இல்லாவிட்டால்
பார் உண்டா?
பசி உண்டா?
(பார் = உலகம்)
மண்ணில் பிறப்பதற்கு
நெல் ஒப்பும்போது
களிமண்ணில் கலந்திருக்க
அரிசி மறுப்பது இல்லை....
நட்சத்திரம் போல
நல்முத்துப் போல
சுத்தமாக அரிசிவிற்க
பங்கீட்டுக் கடைஎன்ன
சல்லடையா?
முறமா?.....
மூட்டை பிரிக்கும் முன்னர்
முந்நூறு பேர்
இருந்தால்
சலிப்பது எங்கே?
புடைப்பது எங்கே?
புண்ணியம் செய்யத்தான்
பொழுது எங்கே?
அங்கயற் கண்ணியின்
அருள் என்ன சொல்வேன் !
பங்கீடு வாழ்க !
பாழ்வயிறும் வாழ்க !
வாழ்வில் தினமும் நடப்பதை அப்படியே இலக்கியமாய் ஆக்குவதை
‘நடப்பியல்’ என்பர். பேச்சு நடையில் நடைமுறை வாழ்க்கையின் புதிய கோலங்களை நேராகப்
பேசுகிறார். கற்பனையும் உவமை உருவக அணிகளும் இருந்தால்தான் அது கவிதை என்ற
பழமையான கருத்தை உடைத்து விட்டது இந்தப் புதுக்கவிதை.
‘இருபதாம் நூற்றாண்டுத் தமிழ்க்கவிதை வரலாற்றில்
‘பெட்டிக் கடை நாரணன்’ முக்கியமான கவிதை’ என்கிறார் புகழ்பெற்ற இலக்கியப் படைப்பாளியான
சுந்தர ராமசாமி.
|