6.0 பாட முன்னுரை

     இருபதாம் நூற்றாண்டு, உலகில் புதுமைகள் பல தோன்றிய காலம். தமிழ் இலக்கியத்திலும் பல புதுமைகள் தோன்றின. உலகத் தொடர்பு வளர்ந்தது. பிறமொழி அறிவும் தொடர்பும் பெருகின. இதனால் வேறு மொழிகளில் உள்ள வடிவங்களில் கவிதை படைக்கும் பரிசோதனை முயற்சிகள் தமிழில் பெருகின. வடிவத்திலும் உள்ளடக்கத்திலும் புதுமையான கவிதைகள் படைக்கப்பட்டன.

     லிமரிக் (குறும்பா-Limerick) என்பது ஐரோப்பாவில் பத்தொன்பதாம் நூற்றாண்டில் தோன்றி விரைந்து பரவிய ஒரு புதிய கவிதை வடிவம். அதைப் போல் தமிழில் ‘குறும்பா’ படைக்கும் முயற்சி இருபதாம் நூற்றாண்டில்தான் மேற்கொள்ளப்பட்டது. ஈழத்தைச் (இலங்கை) சேர்ந்த ‘மஹாகவி’ அதனைத் தொடங்கி வைத்தார். தமிழ்நாட்டில் மீரா, ஈரோடு தமிழன்பன், த. கோவேந்தன் ஆகியோர் சிறந்த ‘குறும்பா’க்களை இயற்றினர்.

     மஹாகவி, மீரா, தமிழன்பன் இவர்களின் குறும்பாக்கள் பற்றி அறிந்து கொள்ளும் வகையில் இப்பாடப் பகுதி அமைக்கப்பட்டுள்ளது.