இலங்கையில் உள்ள நீர்க்கொழும்பில் இந்து வாலிபர்
சங்கம் 30-01-1965-இல் தமிழ்விழா நடத்தியது. அதில் நடந்த கவியரங்கத்தில் தான்
மஹாகவி என்ற கவிஞர் இயற்றிய ‘குறும்பா’ முதன்முதலில் படிக்கப்பட்டது.
அதன்பின் ‘இளம்பிறை’ என்ற திங்கள் இதழில் சில பாக்கள் வெளிவந்தன. இலங்கையின்
சிறந்த தமிழ் இலக்கியப் படைப்பாளிகளில் ஒருவரான எம்.ஏ. ரஹ்மான்,
தம் ‘அரசு வெளியீடு’ சார்பாக, மஹாகவியின் நூறு குறும்பாக்களைத் தொகுத்து அச்சிட்டு
வெளியிட்டார். 17-2-1966-இல் மஹாகவியின் குறும்பா என்ற பெயரில்
அந்த நூல் வெளிவந்தது.
நூலின் முகப்புப் பக்கத்தில் ‘தமிழில் முதன்முதலில்
லிமரிக்ஸ்’ என்ற குறிப்பு உள்ளது. “சிரிப்புக்கும், சிந்தனைக்கும், கருத்துக்கும்,
கற்பனைக்கும் பெருவிருந்தாய் 100 குறும்பாக்கள்” என்ற அறிவிப்பும் உள்ளது.
இதிலிருந்து சிரிக்க வைப்பது, சிந்தனையைத் தூண்டுவது,
சீர்திருத்தத்தை வேண்டுவது, சுவைப்புத் திறனை (ரசனை) வளர்ப்பது இவையே குறும்பாவின்
நோக்கம் என உணரலாம்.
|