அறம், பொருள், இன்பம், வீடு என்ற நான்கும் உணர்த்துவன
பேரிலக்கியங்கள். இவற்றில் ஒன்றோ பலவோ குறைந்துவரின் அவை சிற்றிலக்கியங்கள்
என்று சொல்லப்படும். தமிழ் இலக்கிய வரலாற்றில் நாயக்கர்கள் ஆட்சிக்காலம்
சிற்றிலக்கியக்காலம் என்று சொல்லப்படுகின்றது. கி.பி. 1350 முதல் கி.பி.
1750 முடிய உள்ள காலம் நாயக்கர்கள் ஆட்சிக்காலமாகும். ஏனெனில் இக்காலத்தில்
தான் சிற்றிலக்கியங்கள் மிகுதியாகத் தோன்றின. இது பிரபந்தம்
என்று வடமொழியில் வழங்கப்படுகிறது. பிரபந்தங்கள் 96 வகை என்பர். இதற்கேற்பத்
தமிழிலும் சிற்றிலக்கியங்கள் 96 என்ற வழக்கு உள்ளது. இலக்கியத்தில் தோன்றிய இந்தப் புதிய வகையினை,
‘விருந்தே தானும் புதுவது கிளந்த யாப்பின் மேற்றே’ என்று
பழைய இலக்கண நூலாகிய தொல்காப்பியம் சுட்டுகிறது. சிற்றிலக்கியங்கள்
பெரும்பாலும் மிகுதியான கற்பனையைக் கொண்டவை. சிற்றிலக்கியங்கள் தமிழகத்தின்
வரலாற்றை ஓரளவு நமக்குத் தெரிவிக்கின்றன. அக்காலச் சமூக நிலை பற்றியும்
ஓரளவு அறிய முடிகின்றது. அக்காலக் கவிதைப் போக்கினையும்
நாம் அறிந்து கொள்ளலாம்.
|