தமிழில் தோன்றிய முதல் சதக இலக்கியமாக மாணிக்கவாசகரின்
திருச்சதகத்தைக் குறிப்பிடலாம். இச்சதகம் இயற்றப்பட்ட காலம் கி.பி. ஒன்பதாம்
நூற்றாண்டு. புலவர் ஒருவர் தாம் வாழ்ந்த நாட்டுப்புறப் பகுதியில் கண்டும்
கேட்டும் அறிந்தசெய்திகளைத் தொகுத்து ஒரு சதகம்
பாடினார். உடனே வேறு சில புலவர்களும் நாட்டின் மற்றப் பகுதிகளின் நிகழ்ச்சிகளைத்
தொகுத்துச் சதகங்கள் பாடினர். அவ்வாறு தோன்றியவை தொண்டை மண்டல சதகம்,
பாண்டி மண்டல சதகம், சோழ மண்டல சதகம், கொங்கு மண்டல சதகம், ஈழ மண்டல சதகம்,
நந்தி மண்டல சதகம் ஆகிய சதக இலக்கியங்கள்.
அடியார்களின் வரலாறுகளைத் தொகுத்துக் கூறுவதில்
ஆர்வம் கொண்ட ஒருவர் திருத்தொண்டர் சதகம் இயற்றினார். நாட்டில்
உள்ள பல பழமொழிகளைத் தொகுத்து, அவற்றை அமைத்துப் பாடிய சதகங்களும் உள்ளன.
தண்டலையார் சதகம், கோவிந்த சதகம் என்பவை
பழமொழிகளை அமைத்து, தெய்வ வழிபாட்டுடன் சேர்த்து இயற்றப்பட்டவை. ஜெயங்கொண்டார்
சதகத்தில் பழமொழிகளும் அவற்றை விளக்கும் கதைகளும் நிகழ்ச்சிகளும்
சேர்க்கப்பட்டுள்ளன. வாழ்க்கைக்கு உரிய நீதிகளை எடுத்துக் கூறும் சதகங்கள்
சில உண்டு. கைலாச நாதர் சதகம் என்பதில் நீதிகள் மட்டும்
அல்லாமல், சோதிடம் உடலோம்பல் முதலியன பற்றிய கருத்துகளும் கூறப்பட்டுள்ளன.
ஆறைக்கிழாரின் கார் மண்டல சதகம்
கி.பி. 12ஆம் நூற்றாண்டில் இயற்றப்பட்டது. படிக்காசுப் புலவரின் தொண்டை
மண்டல சதகம், தண்டலையார் சதகம் ஆகியனவும், குணங்குடி மஸ்தான் சாகிபுவின்,
நந்தீசர் சதகம், முகைதீன் சதகம் ஆகியனவும் கி.பி. 17ஆம்
நூற்றாண்டில் தோன்றியவை. அம்பலவாணக் கவிராயரின் அறப்பளீசுர சதகம்,
சாந்தலிங்க அடிகளாரின் வைராக்கிய சதகம் ஆகியன கி.பி. 18ஆம்
நூற்றாண்டில் இயற்றப்பட்டவை. கி.பி. 19ஆம் நூற்றாண்டில் வெளிவந்த இயேசுநாதர்
திருச்சதகம் என்பது யாழ்ப்பாணத்தாராகிய சதாசிவப் பிள்ளை இயேசுநாதரைப்
போற்றி எழுதிய சதகமாகும்.
திருவண்ணாமலை, திருப்பதி முதலான தலங்களின் தெய்வங்களை
வழிபடும் முறையில் அமைந்த சதகங்கள் பல உண்டு. இசுலாமிய மதத்தவர் பாடிய சதகங்கள்
அகத்தீசர் சதகம், அரபிச் சதகம் முதலியன. இவ்வாறு பலவகைக்
காரணம் பற்றியும், பல தலங்களைப் புகழ்ந்தும் பல வகைப் புலவர்களால் இயற்றப்பட்டவைதாம்
சதக இலக்கியங்கள்.
|