2.5 தொகுப்புரை

வில்லிபாரதத்தில் கிருட்டிணன் தூது காப்பியத்தின் உயிர்ப்பகுதி. சாம, பேத, தான, தண்டம் என்னும் அரச நீதியை ஒட்டித் தருமன் கண்ணனைத் தூது விடுக்க எண்ணினான். கண்ணனும் தருமனையும் அவனது தம்பியரையும் உடனிருத்தி அவர்கள் கருத்தினை வினவினான்.

“போர் நிகழ்ந்தால் இருபக்கத்திலும் பலரும் மாள்வர். பெரியோர்களையும், உறவினர்களையும், தம்பியரையும் போரில் கொன்று பெறும் வெற்றியைக் காட்டிலும், திருதராட்டிரன் சஞ்சய முனிவரிடத்துச் சொல்லி அனுப்பியவாறே, காடுகளில் இரவும் பகலும் திரிந்து பழங்களையும், கிழங்குகளையும் உண்டு பிழைத்திருத்தலே சிறப்பாகும். உன் தூது வெற்றி பெறாவிட்டால் பின்னர்ப் போரிடலாம். கௌரவரிடம் நாட்டின் ஒரு பகுதியைக் கேள். தரவில்லையென்றால், ஐந்து ஊர்களைக் கேள். அவையும் இல்லையென்றால், ஐந்து இல்லம் வேண்டும், அவற்றையும் தர மறுத்தால் போருக்குப் புறப்படச் சொல்” என்றான் தருமன்.

வீமன் தருமன் உரையைக் கேட்டுச் சினங்கொண்டான். “கண்ணபிரானே! ஊனமிலாத் தருமன் மானமில்லாமல் பேசுகிறான். திரௌபதி அரசவையில் மானத்தால் கூவி முறையிட்ட காலத்தில் ‘சினங்கொள்ளாதே’ என்று கூறி, நமக்கும் நம் குலத்திற்கும் என்றும் தீராத பழியை உண்டாக்கினான்.’ என்று விரைந்து பேசிய வீமனின் கோபத்தைக் கண்ணன் தணித்தான்.

அப்பொழுது விசயன் எழுந்து, கண்ணனையும் தருமனையும் வணங்கி, “இனியும் பொறுத்துக் கொண்டிருந்தால் பகைவர்களை அழிப்பது எப்போது? திரௌபதி குழலை முடிப்பது எப்போது? துகில் உரியப்பட்ட போது, பெருமாளை அழைத்தவாறு அவள் நின்றாள். நாம் மாண்டவரைப் போல வாளா இருந்தோம். இம் மாசு தீர வேண்டாமா? கண்ணன் யாது சொன்னாலும் துரியோதனன் கேட்கமாட்டான்” என்றான். அடுத்து, நகுலனும், “தூதினால் பயன் இல்லை” என்று பேசினான். கண்ணன் தூது போனாலும் துரியோதனன் நாட்டைக் கொடுக்கமாட்டான். ஆதலால் நாட்டைத் தருமாறு கையேந்தி நிற்காமல் போர் தொடுத்தல் வேண்டும் என்றான். அடுத்ததாக, சகாதேவனை மட்டும் தனியாக அழைத்துப்பேசி, கண்ணன் அவனது கருத்தை அறிய முற்பட்டான். சகாதேவன் ‘ஆதிமூர்த்தியே, நீ தூது போனால் என்ன? போகாவிட்டால் என்ன? எது எவ்வாறாயினும் எல்லாம் உன் நினைவின் படியே முடியும். அதனை உள்ளபடியே யான் அறிவேன்’ என்றான். திரௌபதியும் கண்ணனிடம், போரில்லாமல் நாடு கிடையாது என்று சொல்ல, கண்ணன் போர் வேண்டாம் என்று சொல்லவும், திரௌபதி அழுதவாறே நின்றாள். பின்னர், கண்ணன் திரௌபதியின் கண்ணீரைத் துடைத்து, அமைதிப்படுத்தினான். பிறகு, கண்ணன் மலையையும், காட்டையும், ஆறுகளையும் கடந்து அத்தினாபுரி நோக்கிப் புறப்பட்டான்.

கண்ணன் விதுரன் வீட்டில் தங்கியமையால், துரியோதனனுக்கும் விதுரனுக்கும் பிளவு ஏற்பட்டது. விதுரன் வில்லினை ஒடிக்கவும் செய்தான். இது தூதின் முதல் வெற்றி.

அடுத்து, அசுவத்தாமனைத் துரியோதனனிடமிருந்து பிரிக்கச் சூழ்ச்சி செய்தான் கண்ணன். இது இரண்டாவது வெற்றி. குந்தியின் மூலமாகவும், இந்திரனை கொண்டும் கர்ணனின் வலிமையைக் குறைக்கும் முயற்சியில் ஈடுபட்டான் கண்ணன். இவ்வாறு கண்ணன் தூதனாகவும், சூதனாகவும் இருந்து, பாரதப் போரைத் துவக்கி, வெற்றியைப் பாண்டவர்க்கு அளித்துக் காத்ததாகக் காப்பியம் அமைகிறது.

தன் மதிப்பீடு : வினாக்கள் - II

1.
கிருட்டிணன் தூதில் இடம் பெற்றுள்ள கிளைக் கதைகளுள் ஒன்றினைக் குறிப்பிடுக.
2.
மாலைப் பொழுதின் வருணனையை வில்லிபுத்தூரார் எங்ஙனம் விளக்கியுள்ளார்?