அன்புடைய இருவர் நல்வினையால் எதிர்ப்பட்டு, காதல் கொள்வது
ஆகும். காம வேட்கை மிகுதியால் தான் இக்காதல் உருவாகிறது.
இதுவே காமப் புணர்ச்சி எனப்படுகிறது. இது நல்வினைப் பயனால் தன்னியல்பில் நிகழும் புணர்ச்சியாதலின் இயற்கைப் புணர்ச்சி எனவும், தெய்வப் புணர்ச்சி எனவும்படும். முன்னுறு புணர்ச்சி எனவும் இது வழங்கப்படும்.
காதல் எவ்வாறு உண்டாகும் என்பதைத் தொல்காப்பியர்
களவியல் நூற்பாவில் (2) விளக்குகிறார்.
ஒருவனும் ஒருத்தியும் கூடிவாழும் இல்லறத்தின் பயனால்
அவ்விருவரையும் ஒவ்வொரு பிறவியிலும் சேர்த்தும், பிரித்தும்
வைப்பதுமான இருவகை ஊழ்வினை உண்டு. அவற்றுள் நல்லூழின்
ஆணையால் ஒத்த பிறப்பு, குடி, ஆண்மை, ஆண்டு, அழகு, அன்பு,
நிறை, அருள், உணர்வு, திரு என்னும் பத்துப் பண்புகளுடன்
இருக்கும் ஓர் ஆணும், பெண்ணும் கண்டு காதல் வயப்படுவர்.
இதில் தலைவன் தலைவியுடன் ஒத்த பண்புடையனாகவோ
தலைவியின் மிக்கோனாகவோ இருத்தல் வேண்டும்.
தலைவி தன்னுடன் ஒத்த நலன்களால் சிறந்து தோன்றிய வழி
தலைவனுக்கு ‘இவள் தெய்வ மகளோ?’ என்ற ஐயம் தோன்றும்.
ஆனால் அவள் அணிந்துள்ள மாலை, அணிகலன் ஆகியவற்றைக்
கண்டு அவள் மானிட மகளே எனத் தெளிவான்.'
பிறகு அவள் தன்மேல் விருப்பம் கொண்டிருக்கிறாளா என
அறிய அவள் கண்களை நோக்குவான். காம வேட்கையினால்
அந்நான்கு கண்களும் தாம் கொண்ட காதலை உரைக்கும்.
ஒருவரை ஒருவர் காணும் முதற்காட்சியிலேயே மெய்யுறு
புணர்ச்சிக்கு உடன்படாது, உள்ளப் புணர்ச்சி அளவிலேயே
ஒழுகி மணந்து கொண்ட பின்னரே கூடி மகிழ்வர். |