புலவன் எடுத்தாளும் சொற்களே
ஒரு பாடலை
என்றும் நெஞ்சில் நிலை நிறுத்துவன. கார்ப்பருவம் வந்தது;
தலைவன் வரவில்லை; வருந்துகிறாள் தலைவி. தோழி,
தலைவியைத் தேற்றுகிறாள். ‘இது கார்ப் பருவம் அன்று
மயங்காதே’ என்கிறாள். தோழி கூறுவதைப் பாருங்கள் :
தோழியே! வினைமுடிக்கச் சென்ற தலைவன் வருவதாகச் சொன்ன பருவம் இதுதானே என்று என்னை வினவுகின்றாய்!
இது அன்று! அறிவில்லாமல், பருவ
காலத்தை மறந்து கடல் நீரை உண்டது மேகம். நீரை
உண்டதால் சுமை தாங்க மாட்டாமல் அது மழையைப்
பெய்தது. பிடவும், கொன்றையும், காந்தளும்
இன்னும்
பலவும் மலர்ந்து விட்டன. காரணம் அவற்றின் அறிவின்மை!
இவ்வாறு தலைவியைத் தேற்றும்
தோழி, ‘நீயும்
அறிவற்றுக் கார்காலம் என மயங்காதே’
என்ற
குறிப்புரையைத் தருகிறாள்.
மதியின்று
மறந்து கடல்முகந்த கமஞ்சூல் மாமழை,
பொறுத்தல் செல்லாது இறுத்த வண்பெயல்
காரென்று
அயர்ந்த உள்ளமொடு தேர்வில
பிடவமும் கொன்றையும் கோடலும்
மடவ வாகலின்,
மலர்ந்தன பலவே.
(நற்றிணை : 99)
(மதிஇன்று = அறிவில்லாது; கமம் = நிறைந்த;
மாமழை = மேகம்; இறுத்த
= பெய்தொழித்தல்;
அயர்ந்த = மறதி உற்ற; தேர்வில
= அறியாதன;
மடவ = அறிவில்லாதவை)
தலைவியைத் தேற்றக் கார்கால
அறிகுறிகளாகிய
மழையையும் மலர்களையும் குறைசொல்லும் தோழி,
மதிஇன்று, மடவ என்ற கடும் சொற்களால் அவற்றைக்
கடிந்து கொள்கிறாள். இளந்திரையனார் என்னும்
புலவரின் இச்சொல்லாட்சிகள் கவிதையின் உணர்ச்சிக்குப் பொருத்தமாக
அமைந்துள்ளதைக் காணலாம்.
தலைவியை, அவள் காதலிக்கும்
தலைவனுக்கு
அல்லாமல், வேறொருவனுக்கு மணம் பேசுகின்றனர்
பெற்றோர். இது வேற்று வரைவு எனப்படும். இந்நிலையில்
தலைவி தலைவனுக்குச் செய்தி தெரிவிக்கக்
கூறும்
கலித்தொகைப் பாடலில் சொல்லாட்சி சிறந்திருப்பதைக்
காணலாம்.
தருமணல் தாழப்பெய்து இல்பூவல் ஊட்டி
எருமைப் பெடையோடு எமர்ஈங்கு அயரும்
பெருமணம் எல்லாம் தனித்தே ஒழிய
வரிமணல் முன்துறைச் சிற்றில் புனைந்த
திருநுதல் ஆயத்தார் தம்முள் புணர்ந்த
ஒருமணம் தான்அறியும் ; ஆயின் எனைத்தும்
தெருமரல் கைவிட்டு இருக்கோ அலர்ந்த
விரிநீர் உடுக்கை உலகம் பெறினும்
அருநெறி ஆயர் மகளிர்க்கு
இருமணம் கூடுதல் இல்இயல்பு அன்றே
(கலித்தொகை- 114 : 12-21) (பூவல் = செம்மண்; பெடை = கொம்பு; புணர்ந்த =
கலந்த; தெருமரல் =
கலக்கம்)
“தோழியே! மணலை உடைய துறையில் தோழியரொடு
சிறி வீட்டைக் கட்டி விளையாடினேன் அல்லவா?
பின்பு தோழியர் கூட்டத்தில் இருந்து நான் தனியே
நீங்கினேன். தலைவன் என்னைச் சேர்ந்தான். அந்த ஒரு
மணத்தை என் மனம் மட்டும் அறியும். என் உறவினர்,
வீட்டில் மணலைப் பரப்பிச் செம்மண் பூசுகின்றனர்; தெய்வமாய் வைத்த எருமையின்
கொம்பை
வழிபடுகின்றனர். உறவினர்
நடத்த எண்ணும்
திருமணம் (பெருமணம்) வேறு ஒருவனுக்கு என்னை மணம்
முடிப்பதற்காக என்பதால், இரண்டு மணம் உண்டாகின்றது.
விரிந்த கடலை ஆடையாக உடுத்திய
உலகத்தைப்
பெற்றாலும் ஆயர் மகளுக்கு இருமணம் கூடுதல் இயல்பு
இல்லை”. இதுவே இப்பாடலின் பொருள் ஆகும்.
தலைவியின் பேச்சில் ஒருமணம், பெருமணம்,
இருமணம் என வரும் சொற்களின் ஆட்சி காதலின்
உண்மை இயல்பை வாதிட்டு எடுத்துக்
காட்டும்
கருவியாகப் பயன்படுவது காணலாம்.
தலைவி, ஆயர் மகளிரோடு சேர்ந்து
விளையாடிக்
கொண்டிருந்தாள். அப்போது குருந்தம்
பூவால் ஆன மாலை
சூடிய ஆயன் வருகிறான். அவன்
தலைவியை நோக்கி,
முற்றுஇழை ஏஎர் மடநல்லாய் ! நீஆடும்
சிற்றில் புனைகோ, சிறிது ?
(இழை = அணிகலன்; ஏஎர
=அழகு; மடநல்லாய் =
இளம்
பெண்ணே; புனைகோ
= கட்டவா)
என்று கேட்கிறான்.
‘நிறைந்த அணிகலன்களை அணிந்த அழகிய
இளம்
பெண்ணே! நீ கட்டி விளையாடும் மணல் வீட்டை
நானும்
சிறிது கட்டவோ?’ என்பது பொருள்.நீ
பெற்றேம்யாம் என்று, பிறர் செய்த இல்இருப்பாய்
கற்றது இலைமன்ற காண்
(கலித்தொகை :
111 )
என்று தலைவி பதில் சொல்கிறாள்.
“நீ மணந்து கொண்டு
எனக்கு ஒர் இல்லத்தை
அமைத்துக் கொடுக்க அறியாதவன். பெற்றோர் கட்டிய
வீட்டில் இருக்கவே எண்ணுபவன். ஆதலால் நீ உலகில்
எதையும் கற்றவன் இல்லை” என்று சொல்கிறாள் தலைவி.
இப்பாடலில் சிற்றில் என்ற சொல், வாழும் இல்லத்தைக்
குறிக்கும் இல் என்ற சொல் பிறக்கக் காரணமாகி விடுகிறது.
‘விளையாட்டு வினை’ ஆகிறது.
திருமணத்தை நிகழ்த்தத்
தலைவனைக் குறிப்பினால் தூண்டுகிறாள் தலைவி. |