2.3 முப்பொருள் வெளிப்பாடு 

சென்ற பாடத்தில் முல்லைத் திணைக்கு உரிய முதல், கரு, உரிப் பொருள்கள் எவ்வாறு வெளிப்பட்டன என்பதை அறிந்தீர்கள். அதைப் போல இப்பாடத்தில் குறிஞ்சித் திணைப் பாடல்களில் முதல், கரு, உரி ஆகிய முப்பொருள் வெளிப்பாடு அமையும் தன்மையை அறியலாம்.

2.3.1 முதற்பொருள் வெளிப்பாடு
  • நிலம்
  • குன்ற நாடன் குன்றத்துக் கவாஅன்
    பைஞ்சுனைப் பூத்த பகுவாய்க் குவளையும்

    (ஐங்குறுநூறு- 199 : 1-2)

    (குன்ற நாடன் = முருகன் அல்லது நிலத்தலைவன்; குன்றத்துக்கவாஅன் = பக்கமலை; பகுவாய் = மலர்ந்தவாய்)

    தலைவியின் பண்பைப் பாராட்டும் தலைவனின் கூற்றாக இப்பாடல் அமைகிறது. இப்பாடலின் மேற்காட்டிய இருஅடிகளும் குறிஞ்சி நிலத்தை நம் கண் முன் கொண்டு வருகின்றன. முருகனது அல்லது தலைவியின் தந்தையது மலையின் பக்க மலையில் மலர்ந்த வாயை உடைய குவளை மலர்கள் பசிய சுனையில் பூத்துக் கிடக்கின்றன என்பது இதன் பொருள்.

    கல்கெழு நாடன் கேண்மை
    (நற்றிணை-206, ஐயூர் முடவனார்)

    (கல் = மலை; கெழு = நிறைந்த; கேண்மை = நட்பு)

    சாந்த நறும்புகை
    தேங்கமழ் சிலம்பின் வரையகம் கமழும்

    (ஐங்குறுநூறு- 253 : 1-2)

    (சந்தனம்; தேன்கமழ்சிலம்பு = தேன்மணக்கும் மலை; வரையகம் = பக்கமலை)

    குன்றம், கல், மலை, வரை, சிலம்பு, வெற்பு, சாரல் ஆகிய சொற்கள் குறிஞ்சி நிலப்பகுதியைக் குறிப்பவை.

  • பொழுது
  • கூதிர்ப்
    பெருந்தண் வாடையின் முந்து வந்தனனே

    (ஐங்குறுநூறு-252 : 4-5)

    (கூதிர்ப் பெருந்தண் வாடை = கூதிர்க் காலத்துப் பெரிய குளிர்ந்த காற்று)

    இவ்வரிகளில் பெரும்பொழுதாகிய பனிக்காலம் சுட்டப்படுகிறது.

    இருளிடை என்னாய்நீ இரவுஅஞ்சாய்
    (கலித்தொகை- 38 :14)

    (இருளிடை = இருண்டு கிடக்கும் இடம்)

    நடுநாட் கங்குலும் வருதி
    (ஐங்குறுநூறு-296 : 3)

    (நடுநாட் கங்குல் = நள்ளிரவு)

    இவ்விரு பாடல் அடிகளும் சிறுபொழுதான யாமத்தைக் குறிக்கின்றன.

    2.3.2 கருப்பொருள்கள் வெளிப்பாடு

    குறிஞ்சித் திணைக்குரிய சில கருப்பொருள்கள் பாடல்களில் வெளிப்படுவதைச் சான்றுகள் கொண்டு அறியலாம்.

  • தெய்வம் : முருகன்
  • முருகயர்ந்து உவந்த முதுவாய் வேல
    (குறுந்தொகை-362 : 1, வேம்பத்தூர்க் கண்ணன்
    கூத்தனார்)

    முருகனை வழிபட்டு மகிழ்ந்த அறிவு மிகுந்த வேலனே! என்பது இதன் பொருள்.

  • மக்கள்: சிலம்பன்,
  • விண்டோய் மாமலைச் சிலம்பன்
    (குறுந்தொகை: 362:6)

    பின்னிரும் கூந்தல் நன்னுதல் குறமகள்
    (ஐங்குறுநூறு-285 : 1)

    (பின்னிரும் கூந்தல் = பின்னிய கரிய கூந்தல்; நுதல் = நெற்றி)

  • பறவை : கிளி, மயில்
  • வெள்ள வரம்பின் ஊழி போகியும்
    கிள்ளை வாழிய பலவே!

    (ஐங்குறுநூறு-281 : 1-2)

    (ஊழி = இறுதிக் காலம்; வரம்பு = எல்லை; கிள்ளை - கிளி)

    ‘வெள்ளம் பெருக்கெடுக்கும் யுக முடிவான இறுதிக் காலத்தையும் தாண்டி, கிளியே நீ பல்லாண்டு வாழ்க!’ என்பது இதன் பொருள்.

    மயில்கள் ஆலப் பெருந்தேன் இமிர
    (ஐங்குறுநூறு-292 : 1)

    மயில்கள் அகவ, பெரிய வண்டுகள் ஒலிக்கும்.

  • விலங்கு: புலி
  • ஆகொள் வயப்புலி ஆகும் அஃது
    (அகநானூறு-52 : 6, நொச்சி நியமங்கிழார்)

    (ஆகொள் = பசுவைக் கவர்கின்ற; வய = வலிய)

    மராஅ யானை மதம்தப ஒற்றி
    (அகநானூறு-18 : 4, கபிலர்)

    (மராஅ = இனத்தோடு சேராத; தப = கெட; ஒற்றி = மோதி)

    இனத்தோடு சேராத ஆண்யானையின் மதம் அழியுமாறு அதனை வெள்ளம் மோதி இழுக்கும் என்பது பொருள்.

  • மரம், பூ : சந்தன மரம், காந்தள் பூ
  • குன்றக் குறவன் ஆரம் அறுத்துஎன
    நறும்புகை சூழ்ந்த காந்தள் நாறும்

    (ஐங்குறுநூறு- 254 : 1-2)

    (ஆரம் = சந்தன மரம்; காந்தள் = காந்தள் மலர்)

  • தொழில் : தினை காத்தல்
  • சிறுதினைக் காவல னாகி
    (ஐங்குறுநூறு- 230 : 2)

    2.3.3 உரிப்பொருள் வெளிப்பாடு

    காதல் மிகுதியால் இரவு நேரத்தில் வந்து தலைவியைச் சந்திக்க விரும்புகிறான் தலைவன். அந்தப் பழக்கத்தைக் கைவிடுமாறு தோழி குறிப்பாகக் கூறுகிறாள்.

    காமம் ஒழிவது ஆயினும் யாமத்துக்
    கருவி மாமழை வீழ்ந்தென, அருவி
    விடர்அகத்து இயம்பும் நாடஎம்
    தொடர்பும் தேயுமோ நின்வயி னானே?

    (குறுந்தொகை- 42, கபிலர்)

    (கருவி = மின்னல், இடி போன்ற தொகுதி; விடர் = குகை, மலைப்பிளவு; இயம்பும் = ஒழுகும்)

    “தலைவனே! நீ இரவில் வராவிட்டால் மெய்யுற்றுப் பெறுகின்ற இன்பம் இல்லாமல் போகலாம். அதனால் என் தலைவி உன்னுடன் கொண்ட நட்புக் குறைந்து போகுமா? நள்ளிரவில் பெரும் தொகுதியை உடைய பெரிய மழை பெய்கிறது. மலைக் குகைகளின் வழியே ஒழுகும் அருவியின் ஓசை மறுநாளும் கேட்கிறது. அத்தகைய மலை நாட்டைச் சார்ந்தவனே! என் வினாவிற்கு விடையைச் சொல்வாயாக”.

    இப்பாடலில் தலைவன் - தலைவியின் கூடல் தொடர்பான செய்தி குறிக்கப்படுவதால், குறிஞ்சியின் உரிப்பொருள் தெளிவாகத் தெரிகிறது. (தலைவியைக் கூடத் தலைவன் முயல்வதும், தோழி அதற்கு மறுத்துரைப்பதும் கூடல் தொடர்பானவையே)

    இரவில் பிறர் அறியாதபடி மலையில் மழை பெய்கிறது. ஆயினும் அருவியின் ஒலியால் மழை பெய்தது அறியப்படுகிறது; பேசப்படுகிறது. அதுபோல் இரவில் பிறர் அறியாதபடி தலைவன் - தலைவி சந்திப்பு நிகழ்ந்தாலும், பகலில் தலைவியின் மேனி (உடல்) வேறுபாடு ஊரார்க்கு இரவுச் சந்திப்பை உணர்த்திவிடும்; அவர்கள் இதைப்பற்றிப் பழித்துப் பேசத் தொடங்கி விடுவார்கள். ஆகவே இச்சந்திப்பு வேண்டாம் என மறைமுகமாக உணர்த்துகிறாள் தோழி.

    நாறுஉயிர்
    மடப்பிடி தழீஇத் தடக்கை யானை
    (குறுந்தொகை- 332 : 3-4, இளம்போத்தன்)

    (நாறுஉயிர் = மணக்கும் மூச்சு; மடப்பிடி = இளைய பெண்யானை; தழீஇ = தழுவி; தடக்கை = பெரியகை)

    மணக்கும் மூச்சை உடைய இளமையான பெண் யானையை அன்புடன் தன் துதிக்கையால் தழுவிக்கொள்ளும் ஆண் யானை என்பது பொருள். யானைகளின் அன்புநிலை காட்டிக் கூடல் என்ற உரிப்பொருள் இங்கு உணர்த்தப்படுகிறது.

    இவ்வாறு அனைத்துக் குறிஞ்சித்திணைப் பாடல்களிலும் கூடல் என்ற உரிப்பொருள், கூடல் தொடர்பான செய்திகளைச் சுட்டி வெளிப்படுத்தப் படுகிறது.

    நனவில் புணர்ச்சி நடக்குமாம் அன்றோ
    நனவில் புணர்ச்சி நடக்கலும், ஆங்கே
    கனவில் புணர்ச்சி கடிதுமாம் அன்றோ

    (கலித்தொகை- 39 : 34-36)

    புணர்ச்சி என்ற சொல் இப்பாடலில் மீண்டும் மீண்டும் வந்து குறிஞ்சியின் உரிப்பொருளை வெளிப்படுத்துகிறது.


    தன்மதிப்பீடு : வினாக்கள் - I
    1) குறிஞ்சித் திணைப் பாடல்களைச் சிறப்பாகப் பாடியுள்ள புலவர் யார்?
    (விடை)
    2) குறிஞ்சித் திணைக்கு உரிய முதற்பொருள்கள் யாவை?
    (விடை)
    3) குறிஞ்சித் திணைக்கு உரிய உரிப்பொருள் யாது? (விடை)
    4) குறிஞ்சி நிலத்துக்கு உரிய தெய்வத்தின் பெயரைக் குறிப்பிடுக.
    (விடை)
    5) சிலம்பு, வெற்பு ஆகிய சொற்களின் பொருள் யாது?
    (விடை)
    6)
    இரவில் மழை பெய்ததை, பகலில் குறிஞ்சி நிலத்தார் எவ்வாறு அறிந்துகொள்வர்? (விடை)
    7)
    தடக்கை யானை எதனைத் தழுவியது? (விடை)