அகத்திணை மாந்தர்களின் மன, மண ஒழுக்கங்களைக்
களவு, கற்பு என்ற இரு பிரிவுகளில் அடக்குவர். இவ்விரண்டையும்
இணைத்து நிற்பது அறத்தொடு
நிற்றலாகும். தலைவியின் களவு
ஒழுக்கத்தை, அதாவது
பிறருக்குத் தெரியாமல்
தலைவன்-தலைவி மனங்கள்
ஒன்று சேர்ந்ததை உண்மையோடு
வெளிப்படுத்தலே
அறத்தொடு நிற்றல் ஆகும். தலைவி,தோழி,
செவிலி, நற்றாய் என ஒவ்வொருவரும் அறத்தொடு நிற்பதுண்டு.
அறத்தொடு நிற்றலின் விளைவு தலைவியை அவள்
விரும்பிய தலைவனுடன் கற்பு வாழ்க்கையில்
இணைப்பதாகும்.
தலைவியைத் தலைவனுக்குத் திருமணம் செய்வித்தலாகும்.
தலைவிக்கு உடனிருந்து பிறர் அறியாமல் களவுக்
காதலுக்கு
உதவியவள் தோழி. களவுக் காதல் கற்பாக
மாற வேண்டும். காதல் வெளிப்பட்டுத் திருமணம் நிகழ வேண்டும். ஆதலால்
வாய்ப்பு ஏற்படும் பொழுது தோழி
செவிலிக்குத்
(செவிலி-வளர்ப்புத்தாய்)
தலைவியின் காதலைக்
குறிப்பாகப் புலப்படுத்துகிறாள். களவை வெளிப்படுத்தல்
என்று
கூறாமல் அறத்தொடு நிற்றல் என்று பெயர்
வைத்துள்ளது
சிறப்பாகும். தலைவியின் கற்பு அறத்தைக்
காப்பதற்காகக்
களவு உண்மையை
வெளிப்படுத்துவதால் இது
அறத்தொடு
நிலை என்று சொல்லப்படுகிறது.
அகவன் மகளே ! பாடுக பாட்டே !
இன்னும் பாடுக பாட்டே அவர்
நன்னெடும் குன்றம் பாடிய பாட்டே !
(குறுந்தொகை-
23 : 3-5, ஒளவையார்)
(அகவன் மகள் = குறிசொல்லும் பெண்;
நன்னெடும் =நல்ல நெடிய; குன்றம் = மலை)
ஒரு குறிப்பிட்ட மலையைச் சார்ந்த
தலைவன் ஒருவனை விரும்பினாள் தலைவி. செவிலித்தாய் தலைவியின் போக்கில் மாற்றத்தை
உணர்கிறாள். எனவே குறத்தியை அழைத்துத் தலைவியின் மாற்றத்துக்குக் காரணம்
அறியக் குறி கேட்கிறாள். குறத்தி குறி கூறுமுன் வழக்கப்படி பல மலைகளையும்
பற்றிப் பாடத் தொடங்குகிறாள். தலைவனுடைய மலையைப் பாடும் போது தோழி குறுக்கிட்டுக்
கூறுகிறாள் : “குறத்தியே ! பாடு, பாடு, அவருடைய மலையை மட்டுமே பாடிக் கொண்டேயிரு”
என்கிறாள்.
இவ்வாறு குறி கூறுபவளைப் பார்த்து அவர் மலையை
மட்டுமே பாடும் என்பது தாய்க்கு ஐயத்தை உறுதியாக
ஏற்படுத்தும். அவர் மலை என்பதில்
உள்ள குறிப்பு
தலைவியின் மாற்றத்திற்கான காரணத்தைத் தாய்க்கு
வெளிப்படுத்திவிடும்.
களவு வெளிப்பட்ட பின் திருமண
ஏற்பாடுகள் தொடங்கிவிடும். இதுவே தோழியின் எதிர்பார்ப்பு.
இவ்வாறு குறிப்பாக நிகழ்வதே அறத்தோடு நிற்றல் நிகழ்ச்சி.
குறிஞ்சிப் பாடல்களை இயற்றுவதில் மிகச் சிறந்தவர்
கபிலர். ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழின் பெருமையை
எடுத்துச் சொல்லக் கபிலர் பாடியது குறிஞ்சிப்பாட்டு. 261
அடிகளை உடைய குறிஞ்சிப்பாட்டு அறத்தொடு நிற்றல்
துறையில்
அருமையாக அமைந்துள்ளது. தோழி
செவிலித்தாய்க்குக் கூறும் கூற்றாக இப்பாட்டு அமைந்துள்ளது.
அன்னாய் வாழி வேண்டு அன்னை
(குறிஞ்சிப்பாட்டு -
1)
(அன்னாய்= அன்னையே; வாழி = வாழ்க;
வேண்டு=விரும்பிக் கேள் அன்னை = அன்னையே)
குறிஞ்சிப்பாட்டின் இம்முதல் அடி அறத்தொடு நிற்க
விரும்பும்
தோழி செவிலித்தாயின் கவனத்தைத் தன்முகமாகத்
திருப்பப் பேசும் பேச்சுத் தொடக்கம்.
தன்னை நோக்கித்
திரும்புபவள் தன் சொல்லின் உண்மையை நோக்கித்
திரும்புவாள்
என்று தோழி நம்புகிறாள்.
களவு ஒழுக்கத்தால் தலைவியின் மேனி (உடல்),
ஒழுக்கம் (இயல்புகள்) இவை வேறுபடுகின்றன. செவிலி,
வேலனையும்
கட்டுவிச்சியையும் (கட்டுவிச்சி - நெல்மணியை
முறத்தில் இட்டுக் குறிசொல்பவள்) வரவழைத்துக் காரணம்
கேட்கிறாள். அதனால் எப்பயனும் விளையவில்லை.
இந்நிலையில் தலைவி தோழியிடம், ‘தோழி! நம் வீட்டுக்
கட்டுக் காவலை மீறிச் சென்று, தலைவனும் நானும் கொண்ட
காதலைத் தாயிடம் சொல்வது தவறாகுமா?’ என்று கேட்கிறாள்.
நெடுந்தேர் எந்தை அருங்கடி நீவி
இருவேம் ஆய்ந்த மன்றல்
இதுஎன
நாம்அறி வுறாலின் பழியும் உண்டோ?
(குறிஞ்சிப்பாட்டு:
20-22)
(எந்தை = என்தந்தை, அருங்கடி = அரிய காவல்;
நீவி = கடந்து; இருவேம் ஆய்ந்த = தேர்ந்து கொண்ட;
மன்றல் = களவுமணம்)
“தோழியே ! தாம் விரும்பியவர்க்கு என்னை மணம்
முடிக்க நினைக்கின்றனர் தாயும் தந்தையும். அவர்களது
விருப்பமும், எனது மனமும் ஒன்றிப் போகுமாறு
செய்ய வேண்டும். ‘காவலைக் கடந்து நானும் தலைவனும்
தேர்ந்து கொண்ட மணம் இது’ என்று
நாமே தாயிடம்
எடுத்துச் சொன்னால் புகழே ஆகும். பழி ஆகாது”, இவ்வாறு
தலைவி தோழியை அறத்தொடு நிற்கத் தூண்டுகிறாள். அதன்
படியே
குறிஞ்சிப்பாட்டு முழுவதுமாகத் தோழி அறத்தொடு
நிற்கிறாள்.
தினைப்புனம் காக்குமாறு செவிலி தலைவியையும்
தோழியையும்
அனுப்பிய ஒருநாள், தலைவியை
நோக்கி வந்த
சினம் கொண்ட யானையிடமிருந்து தலைவன் காப்பாற்றியதையும்,
அன்று
முதல் அவர்களுக்கிடையே
தோன்றிய காதலையும்,
தலைவன்
தலைவியை மணந்து கொள்வதாக அருவிநீர்
உண்டு
வாக்குறுதி
(சத்தியம்) அளித்ததையும், அவன் அழகையும்,
பண்புகளையும், குடும்ப வளத்தையும் எல்லாம்
விரிவாகக்
கூறிச் செவிலியின் மனம், காதலர் காதலுக்கு ஆதரவாக
இசையும் வண்ணம் முயல்கிறாள்
தோழி.
குறிஞ்சித்திணைக்கு மிகுந்த நயம் சேர்ப்பது
அறத்தொடு
நிற்றல் துறையாகும்.
|