யாயும் ஞாயும் யாரா கியரோ
எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்
யானும் நீயும் எவ்வழி அறிதும்
செம்புலப் பெயல்நீர் போல
அன்புடை நெஞ்சம் தாம்கலந் தனவே
(குறுந்தொகை-40, செம்புலப்பெயனீரார்)
(யாய் = என்தாய்; ஞாய்
= உன்தாய்; எந்தை = என்தந்தை; நுந்தை
= உன் தந்தை; கேளிர் = உறவினர்; செம்புலம்
= செம்மண் நிலம்; பெயல்நீர் = மழைநீர்)
முன்பின் தெரியாத ஒருவனிடத்து
உள்ளத்தைப் பறிகொடுத்தாள் தலைவி. இவன் நம்மை மணப்பானோ அல்லது விட்டுவிடுவானோ
என உள்ளம் கலங்குகிறாள். அவளைத் தேற்றுகிறான் தலைவன்.
“என்தாயும், உன்தாயும் உறவினர்
அல்லர்; என் தந்தையும் உன் தந்தையும் உறவினர் அல்லர்; இதற்கு முன் நாம் ஒருவரை
ஒருவர் சந்தித்ததும் இல்லை. ஆனால் நம் நெஞ்சங்கள் அன்பினால் செம்புலப் பெயல்
நீர்போல ஒன்று கலந்துவிட்டன.”
இப்பாடலில் செம்புலப்பெயல்
நீர் போல என்ற உவமை நினைக்கும் போதெல்லாம் நயம் தருகிறது. செம்மண் நிலமும்,
எட்டாத உயரத்து வானமும் ஒன்றையொன்று நெருங்காத தூரத்தில் உள்ளவை. வானம் மழையைப்
பொழிகிறது. நிலம் அதனை ஏற்கிறது. சிறிது நேரத்தில் ஒன்றின் பண்பு இன்னொன்றுடன்
இணைந்து விடுகிறது. பிரிக்க முடியாத பிணைப்பு உருவாகிறது. செம்மண்ணின் நிறம்,
பெய்த மழை நீருக்கு வருகின்றது; நீரின் நெகிழ்ச்சித் தன்மை நிலத்துக்கு வருகிறது.
இவ்விரண்டையும் இனிப் பிரிக்க முடியாது. இவ்வாறே தலைவன், தலைவி காதலையும்
பிரிக்க இயலாது. முன்பின் அறியாத் தலைவன் தலைவியின் மனத்தில் நம்பிக்கையை
உண்டாக்குவதற்கு அருமையான உவமையைப் பயன்படுத்தி உள்ளது பாராட்டத் தக்கது.
குறிஞ்சித்திணைப் பாடல்களில்
எண்ணற்ற உவமைகள் நிறைந்து காணப்படுகின்றன.
சான்றாக :
இகல்மீக் கடவும்
இருபெரு வேந்தர்
வினையிடை நின்ற சான்றோர் போல
(குறிஞ்சிப்பாட்டு: 27-28)
‘பகை கொண்ட இரு பேரரசர்களை
ஒன்று சேர்த்துக் கூட்டும் அறிவுடையவரைப் போல’ என்பது இதன் பொருள். தோழி,
தலைவிக்கும் செவிலிக்கும் இடையே நின்று தலைவியின் காதலைத் தெரிவித்து, மணம்
கூட்டும் பெரும் முயற்சியில் ஈடுபடுவதற்குக் கவிஞர் இந்தப் பொருத்த மான உவமையைக்
கையாள்கிறார். |