இல்வாழ்க்கை எத்தகையது என்பதைக் கற்பனைச்
சித்திரம் வரைந்து தெளிவுபடுத்துகிறார் பாலை பாடிய
பெருங்கடுங்கோ.
செல்வத்தைத் தேடிப் பிரிவதை விட வறுமையிலும்,
இளமையும் காதலும் ஒரு சேர வாழ்வதே வாழ்க்கை என்று
தோழி தலைவனிடம் கூறுகிறாள்.
வாழும் நாளெல்லாம் இல்லத்தே இருந்து இருவரும் தத்தம்
ஒரு கை கொண்டு தழுவி, ஒரே ஆடையைக் கிழித்து
இருவரும் உடுத்துக் கொள்ளும் வறுமை மிக்க வாழ்க்கையாய்
இருந்தாலும், பிரியாது உள்ளம் ஒன்றி வாழ்வதே வாழ்க்கை.
பொருளைத் தேடிக் கொண்டு வரலாம்;
சென்று போன
இளமையைத் தேடிக் கொண்டுவர முடியுமா?
உளநாள்
ஒரோஒகை தம்முள் தழீஇ, ஒரோஒகை
ஒன்றன்கூறு ஆடை உடுப்பவரே ஆயினும்
ஒன்றினார் வாழ்க்கையே வாழ்க்கை அரிதுஅரோ
சென்ற இளமை தரற்கு
(கலித்தொகை -18 : 8-12)
(ஒரோஒகை = ஒரு கை; தழீஇ = தழுவி;
ஒன்றினார் = இணைந்தவர்; தரற்கு = கொண்டு வருவதற்கு)
உடன்போக்காய்த் தலைவனுடன் சென்ற தன் மகளைத்
தேடி வருகிறாள் செவிலி. ‘அவர்கள் இருவரையும்
கண்டீர்களா? எனக் கேட்கும் அவளுக்கு அந்தணர்கள்
‘கண்டோம்’ எனப் பதில் தருகின்றனர்; தலைவி சிறந்த ஓர்
ஆண்மகனைக் கணவனாக வழிபட்டு அவனுடன் சென்றது
நியாயமே எனக் கூறுகின்றனர். பெற்றோர்க்கும் மகளுக்கும்
உண்டான சொந்தம் எத்தகையது என்பதை அருமையான
கற்பனை கொண்டு தெளிவு படுத்துகின்றனர்.
பலஉறு நறுஞ்சாந்தம் படுப்பவர்க்கு அல்லதை
மலையுளே பிறப்பினும் மலைக்குஅவைதாம் என்செய்யும்?
நினையுங்கால் நும்மகள் நுமக்கும்ஆங்கு அனையளே;
சீர்கெழு வெண்முத்தம் அணிபவர்க்கு அல்லதை
நீருளே பிறப்பினும் நீர்க்குஅவைதாம் என்செய்யும்?
தேருங்கால் நும்மகள் நுமக்கும்ஆங்கு அனையளே;
ஏழ்புணர் இன்னிசை முரல்பவர்க்கு அல்லதை
யாழுளே பிறப்பினும் யாழ்க்குஅவைதாம் என்செய்யும்?
சூழுங்கால் நும்மகள் நுமக்கும்ஆங்கு அனையளே!
(கலித்தொகை -9 : 12-20)
(பலவுறு = பல நறுமணப் பொருள்களும் கலந்த;
படுப்பவர்க்கு = அணிபவர்க்கு; சாந்தம் = சந்தனம்;
முத்தம் = முத்து; நீர் = கடல்; ஏழ்புணர் இன்னிசை =
ஏழு நரம்பால் எழுப்பப்படும் இன்னிசை; முரல்பவர் =
மீட்டுபவர்)
குறிப்பிட்ட காலம் வரை மலைக்கும், கடலுக்கும்,
யாழுக்கும் (வீணைக்கும்) சொந்தமானவை சந்தனம், முத்து,
இசை ஆகியன. பின்னர் அவை பூசுபவர்க்கும்,
அணிபவர்க்கும், மீட்டுபவர்க்கும் அல்லவா சொந்தமாகின்றன?
அதுபோல் ஆராய்ந்து பார்த்தால் உன் மகள் குறிப்பிட்ட
பருவம் வரைதான் உனக்கு உரியவள்; அதன்பின் அவள்
காதலுக்குரிய காதலனுக்குத்தான் உரியவள் என்பதைப்
பக்குவமாகச் சொல்ல இக்கற்பனை பயன்படுகிறது. |