6.2 அக இலக்கியங்களில் கைக்கிளை

குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்ற அன்பின் ஐந்திணைகளுக்கு உரிய மிகச் சில பாடல்களில் கைக்கிளையும் அமைந்திருப்பதைக் காணலாம். கைக்கிளைப் பாடல்களில் பெரும்பா லானவை ஆணின் ஒருதலைக் காதலைக் கூறும் ஆண்பாற் கைக்கிளைப் பாடல்களே ஆகும்.

6.2.1 குறுந்தொகை

நக்கீரனார் பாடிய (பாடல், 78) குறுந்தொகைப் பாடலில் பாங்கனின் கூற்றில் தலைவனின் ஒருதலைக் காதல் வெளிப்படுகின்றது. தனக்கு ஏற்பட்ட ஒருதலைக் காதலைத் தலைவன் தானே தனக்குள் சொல்லி மகிழும் மரபிலிருந்து சற்று மாறுபட்டுப் பாங்கன் தலைவனது ஒருதலைக் காமத்தைக் கண்டிக்கும் முறையில் கூறுவதாக அமைகிறது.

தலைவன் பெண் ஒருத்தியை நினைந்து காம நோய்க்கு உட்பட்டு மெலிந்ததை அறிகிறான் பாங்கன். அறவுரை கூறித் தலைவனைத் தேற்றுகிறான்.

நோதக் கன்றே காமம் யாவதும்
நன்றுஎன உணரார் மாட்டும்
சென்றே நிற்கும் பெரும்பே தமைத்தே

(குறுந்தொகை, 78)

( நோதக்கன்று = வெறுக்கத் தக்கது; பேதைமைத்தே = அறிவின்மை உடையது )

‘தலைவனே! காமம் என்பது, சிறிது அளவேனும் நன்மை தருவது என்று அறியாத பேதையாரிடத்தும் சென்று ஒருவரை இரந்து நிற்கச் செய்யும் தன்மையை உடையது. ஆதலால் அது வெறுத்து ஒதுக்கத் தக்கது என்று உணர்வாயாக.’

இப்பாடல் கைக்கிளைக்கும் பொருந்துகிறது. தமிழ்க் காதல் என்ற நூலில் வ.சுப.மாணிக்கம் இப்பாடலைக் கைக்கிளைப் பாடலாகக் கருதலாம் என்று கூறுவது (ப-106) இங்குக் குறிக்கத்தக்கது.

6.2.2 நற்றிணை

குறிஞ்சித் திணையில் மருதனிள நாகனார் பாடிய நற்றிணைப் பாடலில் கைக்கிளை அமைந்துள்ளதாகக் கூறுவர்.

சொல்லின் சொல்எதிர் கொள்ளாய்
திருமுகம் இறைஞ்சி நாணுதி கதும்எனக்
காமம் கைம்மிகின் தாங்குதல் எளிதோ

(நற்றிணை -39 :1- 3)

(மிகின் = கடந்தால்)

‘நான் உன்னை நாடிச் சில சொற்களைச் சொன்னால், நீ அவற்றை ஏற்கவில்லை; காமம் எல்லை தாண்டுமானால் அதைத்தாங்கிக் கொள்ள முடியுமோ?’ என்று தலைவன் தலைவியிடம் தன் காதலை எடுத்து உரைக்கின்றான். இங்குத் தலைவன் தானே பேசிப் புலம்புவது தெரிகிறது.

சொல்எதிர் பெறாஅன் சொல்லி இன்புறல்

என்று தொல்காப்பியர் கூறும் இலக்கணத்தை இப்பாடலின் முதல் அடி நினைவூட்டுகிறது.

· பெண்பாற் கைக்கிளை

தொல்காப்பியர் பெண்பாற் கைக்கிளை ஒழுக்கத்தைச் சொல்லவில்லை. இதற்குக் காரணம் சொல்வது போல் இளந்திரையனாரின் நற்றிணைப் பாடலில் ”தான் கொண்ட காதல் ஒழுக்கத்தைப் பெண் சொல்வது பொருந்துவதன்று” என்று தலைவி ஒருத்தி கூறக் காணலாம்.

தோழியிடம் பேசுகிறாள் தலைவி.

யானே,பெண்மை தட்ப நுண்ணிதின் தாங்கி

(நற்றிணை, 94 : 3)

(தட்ப = புலப்படுத்தாமல்)

என்று தன் பெண்மைத் தன்மையால் தலைவனிடம் தன் காதலைக் கூற முடியாத நிலையிலிருப்பதைத் தெரிவிக்கிறாள். ‘அவனிடம் காதல்கொண்டு, அவன் மார்பால் துன்புறும் என் நிலையை அறியாத இவன் என்ன ஆண் மகன்?' எனத் தன் ஆற்றாமையைக் கூறுகிறாள். இது ஒருவகையில் பெண்பால் கைக்கிளையாகத் தோன்றுவதைப் புரிந்து கொள்ளலாம்.

6.2.3 கலித்தொகை

கலித்தொகையின் 56, 57, 58 மற்றும் 109ஆம் பாடல்கள் கைக்கிளைப் பாடல்கள் ஆகும்.56 ஆவது பாடலில் கைக்கிளை அமைந்திருப்பதை இளம்பூரணர் உரையின் துணைகொண்டு முன்பே பார்த்தோம்.

கபிலர் பாடிய குறிஞ்சிப் பாடலாகிய 57ஆவது பாடலில், கொடி போலவும், மின்னல் போலவும், அணங்கு போலவும் தோன்றும் பெண் ஒருத்தி பந்தாடிக் கொண்டிருக்கிறாள். அவள் மீது கைக்கிளைக் காதல் கொண்ட தலைவன் அவளைப் பார்த்துப் பல சொற்களையும் சொல்கின்றான். அதற்கு ஒரு விடையும் சொல்லாமல் தலைவி நிலம் நோக்கித் தலை கவிழ்ந்து தன் வீட்டுக்குச் செல்கிறாள்.

”குளிர்ந்த மாலையை அணிந்தவன் பாண்டிய மன்னன். அவனது பொதிகை மலையில் அழகை உடைய கொத்துக்களாய் அமைந்த வேங்கைப் பூ உண்டு. அப்பூவைப் போன்ற தேமலை உடையவளே! முத்துமாலை அணிந்த உன் இளம் முலைகள், இந்த இளம் பருவத்திலும் பாண்டியனின் வலிமையும், மதமும் உடைய யானையின் கொம்புகளை விடச் சினம் கொண்டவையாய் உள்ளன. இந்தக் கொடுமை உன்னுடைய இந்த இளமைப் பருவத்துக்குத் தக்கதோ?”
(அடிகள் : 16-19) என்று பல சொற்களைக் காம மிகுதியால் கூறுகிறான் தலைவன். அவள் பதில் கூறாமல், தலை கவிழ்ந்து தன் வீட்டுக்குச் சென்று விடுகிறாள். தன் அறிவை அவளிடம் இழந்துவிட்டு அரற்றுகிறான் தலைவன். இங்குத் தலைவியின் இளமை பற்றிக் கூறுவதனால் ‘காமம் சாலா இளமையோள்’ என்னும் தொல்காப்பிய இலக்கணம் பாட்டில் அமைந்திருக்கக் காணலாம். தன் சொற்களுக்கெல்லாம் அவள் மறுமொழி தராமல் சென்று விட்டாள் என அவன் கூறுவது ‘சொல் எதிர் பெறாஅன் சொல்லி இன்புறல்’ என்னும் கைக்கிளை இலக்கணத்தை உணர்த்துகிறது. ‘தன் அறிவைக்கவர்ந்து
சென்று விட்டாள்’ என அவன் வருந்துவது, ‘ ஏமம் சாலா இடும்பை’யை (மருந்து இல்லாத நோயை) அவன் கொண்டிருப்பதை உணர்த்துகிறது. இவ்வாறு கைக்கிளைக் காதலின் அனைத்து இலக்கணங்களுக்கும் விளக்கம் போல இப்பாடல் அமைந்திருக்கின்றது.

கபிலரே பாடிய, கலித்தொகையின் 58-ஆவது பாடலில் சிலம்பு ஒலிக்க, வளைக்கை வீசிக் கொண்டு நடந்து வரும் தலைவி தன் உயிரைக் கவர்ந்து கொண்டு போவதாகவும், அச்செயலை அவளது இளமை காரணமாக அவள் அறிந்திருக்கவில்லை என்றும் தலைவன் புலம்புகிறான்.

உளனாஎன் உயிரைஉண்டு உயவுநோய் கைம்மிக
இளமையான் உணராதாய்

(அடிகள் 7-8)

என அவளிடம் பேசுகிறான்.

(உளனா = சிறிதளவு உயிரோடு நான் இருக்கும்படி; உயவுநோய் = காமநோய்; கைம்மிக = மிக அதிகமாக)

வேறு யாராலும் தீர்க்க முடியாத நோயை உண்டாக்குவது அவள் அழகு. அதனை அவள் வீட்டார் அறிவர். அறிந்தும் அதற்கு மேலும் அவளை அலங்காரம் செய்து, தம் செல்வச் செருக்கினால் வெளியே புறப்பட விட்டுவிட்டார்கள்; அவர்களே தவறுடையவர்கள் எனப் புலம்புகிறான் தலைவன்.

களைநர்இல் நோய்செய்யும் கவினறிந்து அணிந்துதம்
வளமையால் போத்தந்த நுமர்தவறு

(களைநர் = நீக்குவார்; கவின் = அழகு; அணிந்து = அலங்காரம் செய்து; வளமை = செல்வச் செருக்கு; போத்தந்த = வெளியே புறப்படவிட்ட; நுமர்= உன் வீட்டார்)

கைக்கிளைக் காதலின் உச்ச நிலையில், ”என் நோய் பொறுக்கும் எல்லையைத் தாண்டி விட்டால் மடல்ஏறி உனக்கு ஒரு பழியை ஏற்படுத்தி விடுவேன் போல் இருக்கிறதே” என்றும் தலைவன் புலம்புகிறான்.

இப்பாடலிலும் தலைவன் தலைவியின் மறுமொழி பெறாமல் தானே பேசுகிறான்; அவள் காமத்திற்கு உரிய பருவம் வராத இளமையுடையாள் என்பதைக் கூறுகிறான் ; தனக்கு ஏற்பட்டுள்ள காமநோய் வேறு யாராலும் தீர்க்க முடியாதது என்பதை உணர்த்துகிறான். மேலும் தன்னைத் துன்புறுத்தும் தீங்கை அவள் மற்றும் அவளது உறவினர் பக்கமாகவும், தான் மடல் ஏறி உயிர் கொடுக்க இருக்கும் நன்மையைத் தன் பக்கமாகவும் சேர்த்துச் சொல்கிறான். இவை அனைத்தும் தொல்காப்பிய நூற்பாவில் சொல்லப்பட்ட கைக்கிளை இலக்கணத்துக்குப் பொருந்துமாறு அமைந்திருப்பதை நீங்கள் ஒப்பிட்டுக் கண்டு கொள்ளலாம்.