4.4. காப்பிய உள்ளீடு

பெரிய புராணத்தில் இடம் பெற்றுள்ள தனி அடியவர்களுள் சிலர் சைவ சமயத்திற்கு அருந்தொண்டுகள் இயற்றியதோடு, தாமே சைவ சமயம் குறித்துத் தனிப்பாடல்களையும், பதிகங்களையும், சிற்றிலக்கியங்களையும் படைத்தளித்துள்ளனர். கழறிற்றறிவார் என்ற பெயர் கொண்ட சேரமான் பெருமாள் நாயனார், காரைக்கால் அம்மையார் ஆகியோர் இயற்றிய நூல்கள் 11 ஆம் திருமுறையில் இடம் பெற்றுள்ளன. திருஞானசம்பந்தர்,  திருநாவுக்கரசர் அருளிய பதிகப்பாமாலைகள் குறித்து முன்னரே விளக்கப்பட்டுள்ளது. திருமூலர் திருமந்திரமாலை ஆக்கி அளித்துள்ளார், தம் காலத்துக்கு முற்பட்ட இந்நூல்கள் யாவற்றையும் நன்கு ஆராய்ந்து அறிந்தே சேக்கிழார் பெரியபுராணம் பாடியுள்ளார் என்பது நன்கு தெளிவாகிறது.

4.4.1 சைவ சமயக் கோட்பாடுகள்

சைவ சமயம் தொடர்பான பல உண்மைகள் குறித்துப் பெரிய புராணம் விரிவாக விளக்கங்களைத் தருகிறது. சைவ சமயத்தில் சிவலிங்க வழிபாடு தொன்மையானது. சிவலிங்கத் திருமேனியின் உண்மை குறித்துச் சேக்கிழார்
காணாத அருவினுக்கும் உருவினுக்கும் காரணமாய்
நீள் நாகம் அணிந்தார்க்கு நிகழ் குறியாம் சிவலிங்கம்
(பெரியபுராணம்,  3648)


என்று பாடியுள்ளார். சிவலிங்கம் என்பது உருவமும் அன்று, உருவம் அற்றதும் அன்று; அருவமும் உருவமும் கலந்த ஒரு வழிபாட்டுச் சின்னம் என்று சேக்கிழார் விளக்கம் தருகிறார். சைவத்தில் இறைவனை வீழ்ந்து வணங்கும் முறைகள் இரண்டு உண்டு. அவை 1. பஞ்சாங்க நமஸ்காரம் 2. அட்டாங்க நமஸ்காரம். இதில் பஞ்சாங்க நமஸ்காரம் என்பது.

மண்ணுற ஐந்து உறுப்பால் வணங்கி
(270)

என்றும் , அட்டாங்க நமஸ்காரம் என்பது,

‘அங்கம் மாநிலத்து எட்டுற வணங்கி' (2856) என்றும் சேக்கிழாரால் விளக்கப்பட்டுள்ளன.

4.4.2 சிவபெருமான் அருள் திறம்

சைவ சமயக் காப்பியம் என்பதற்கு ஏற்பச் சிவபெருமானின் அடையாளங்களையும், அருட் செயல்களையும், வீர நிகழ்வுகளையும் சேக்கிழார் தம் நூலுள் விரிவாகப் பதிவு செய்துள்ளார்.

அடியார் இடுக்கண் தரியாதார்
(3483)

(இடுக்கண் - துன்பம்)

எவ்வுயிர்க்கும் தாயானான்
(2385)

அருவாகி உருவாகி அனைத்துமாய் நின்ற பிரான்
(4163)

தொல் உலகம் முழுவதும் அளித்து
அழித்து ஆக்கும் முதல்வர்
(3444)

முன்னாகி எப்பொருட்கும் முடிவாகி நின்றான்
(1421)

முந்தை மறை ஆயிரம் மொழிந்த திருவாயான்
(179)


என வரும் பெரிய புராணத் தொடர்கள் குறிப்பிடத்தக்க சிறப்புடையன.