1.4. அறநூல்கள்

பதினெண்கீழ்க் கணக்கு நூல்கள் அறநூல்களாகக் கருதப்படுகின்றன. அவை நீதிக்கருத்துகளை வெளியிடுகின்றன. அதன்மூலம் மக்கள் வாழ்வை வளப்படுத்தும் சீரிய தொண்டினைச் செய்கின்றன.

1.4.1 திருக்குறள்

அற நூல்களுள் ஒன்றான திருக்குறள் காமத்துப் பாலில் வரும்,

தாம் வீழ்வார் மென்தோள் துயிலின் இனிதுகொல்
தாமரைக் கண்ணான் உலகு

(குறள் : 1103)

என்னும் குறளில் உள்ள இரண்டாம் அடிக்கு, ‘செங்கண்மால் உலகம்’ என்பார் உரையாசிரியர் பரிமேலழகர்.

1.4.2 திரிகடுகம்

மாவலி அரசனிடம், குள்ள வடிவம் உடையவனாக மூன்றடி மண் கேட்டதையும், கண்ணனாய்க் குருந்த மரத்தைச் சாய்த்ததையும், வண்டி வடிவில் வந்த அசுரனைக் கொன்றதையும் திரிகடுகம் கடவுள் வாழ்த்துச் செய்யுள் பின்வருமாறு சுட்டுகிறது.

கண் அகல் ஞாலம் அளந்த தூஉம், காமரு சீர்த்
தண் நறும் பூங்குருந்தம் சாய்த்ததூஉம், நண்ணிய
மாயச் சகடம் உதைத்த தூஉம் - இம்மூன்றும்
பூவைப் பூவண்ணன் அடி

(சகடம் = வண்டி)

இப்பாடல் வழி திருமாலின் திரு அவதாரச் சிறப்பையும், திருவடியின் பெருமையையும் அறிய முடிகிறது.