பெரியாழ்வார், தொண்டரடிப் பொடி ஆழ்வார், திருப்பாணாழ்வார், குலசேகர ஆழ்வார். ஆண்டாள் ஆகியோரின் அருளிச் செயல்களைப் பற்றியது இப்பாடமாகும். நான்கு ஆழ்வார்களும் இறைவனுக்கு ஒவ்வொரு விதமாய்த் தொண்டாற்றினார்கள். ஆண்டாள் நாச்சியாரோ இறைவனிடத்துக் காதல் கொண்டு இறைவனையே மணக்க உறுதி கொண்டாள். இவர்கள் தொண்டிலும் காதலிலும் கனிந்து பாசுரங்கள் பல பிறந்தன.
ஆழ்வார்கள் திருமாலுக்குப் பூமாலை கொடுத்தும் சொல்மாலை சூட்டியும் வழிபட்டனர். நாயக-நாயகி பாவத்தில் தம்மை நாயகியாகவும் இறைவனை நாயகனாகவும் பாவித்துக் காதல் கொண்டனர்; ஆண்டாளுக்கோ பாவிக்க வேண்டிய தேவையில்லாததால் நாயகியாய் நின்று பள்ளமடையாகப் (பள்ளம் நோக்கிப் பாயும் வெள்ளமாக) பக்திக் காதலை வெளிப்படுத்தினாள். எல்லா ஆழ்வார்களையும் விட ஒருபடி மேலே சென்று பெருமானுக்குத் தொடுத்த மலர்மாலையைத் தான் சூட்டி அழகு பார்த்துப் பின் பெருமானுக்குக் கொடுத்து, சூடிக்கொடுத்த சுடர்க் கொடியாயினாள். மானிடர்க்கென்று பேச்சுப்படில் வாழகில்லேன் என்று கூறியவள் அருளிச் செய்தவை திருப்பாவை, நாச்சியார் திருமொழி ஆகிய நூல்களாகும். இவற்றைப் பற்றியும் இப்பாடத்தில் படிக்கலாம். |