4.4 புதுக்கவிதை நிலைபேறு

புதுக்கவிதையின் உருவம், உள்ளடக்கம், உணர்த்தும் முறை ஆகியன குறித்துத் தெரிந்து கொண்ட நாம், புதுக்கவிதை தமிழில் தோன்றி வளர்ந்து நிலைபெற்றமை குறித்து அறிந்து கொள்ள வேண்டியதும் அவசியமாகும்.

அவ்வகையில், புதுக்கவிதைத் தோற்றம், புதுக்கவிதை இதழ்கள், புதுக்கவிதை நூல்கள், புதுக்கவிதையின் இன்றைய நிலை என்பனவாக வகைப்படுத்திக் காண்போம்.

4.4.1 புதுக்கவிதைத் தோற்றம்

அச்சு நூல்கள் பெருகியதால், மனப்பாடம் செய்வதன் தேவை குறைந்தது. மேனாட்டு இலக்கியத் தொடர்பால் தமிழில் உரைநடை வளர்ந்தது. கதை இலக்கியம், புதினம், சிறுகதை எனப் புதுவடிவம் கொள்ள, கவிதையும் உரைநடைத் தாக்கம் பெற்றுப் புதுக்கவிதையாகத் தோன்றியது.

தொடக்க காலத்தில் உரைப்பா, விடுநிலைப்பா, பேச்சு நிலைப்பா, உரைவீச்சு, சொற்கோலம், கட்டற்ற கவிதை, சுயேச்சைக் கவிதை (Free verse), வசன கவிதை எனப் பல பெயர்களால் வழங்கப்பெற்றது. பிறகு, ஆங்கிலத்தில் New Poetry, Modern Poetry எனக் கூறப்பட்டவைக்கு இணையாகப் புதுக்கவிதை எனப் பெயர் பெற்றது (Honey Moon - தேனிலவு ஆனாற்போல).

பாரதியார் தம் கவிதைகளை நவகவிதை எனக் குறிக்கின்றார். வசன கவிதைகளாகப் பலவற்றை ஆக்கியளித்துப் புதுக்கவிதைக்கு முன்னோடியானார்.

அடுத்து வந்த ந.பிச்சமூர்த்தி மரபுக்கவிதை சார்ந்தும், கு.ப.இராசகோபாலன் கிராமிய நடை சார்ந்தும், புதுமைப்பித்தன் தனிப் பாடல்களின் நடைசார்ந்தும் புதுக்கவிதைகளை அளித்தனர்.

4.4.2 புதுக்கவிதை இதழ்கள்

சூறாவளி, கலாமோகினி, கிராம ஊழியன், மணிக்கொடி, சிவாஜி, சரஸ்வதி, எழுத்து, இலக்கிய வட்டம், கசடதபற, ழ, கணையாழி, ஞானரதம், தீபம், வானம்பாடி போன்ற இதழ்கள் புதுக்கவிதைகளை வெளியிட்டுத் தமிழுக்குப் பெருமை சேர்த்தன; தாமும் பெருமை பெற்றன.

4.4.3 புதுக்கவிதை நூல்கள்
ஆசிரியர்
   நூல்
1. அப்துல்ரகுமான்
2. இன்குலாப்
3. கலாப்ரியா
4. கனல்
5. நா.காமராசன்
6. சிற்பி
7. சி.சு.செல்லப்பா
8. ஞானக்கூத்தன்
9. தமிழன்பன்
10. தமிழ்நாடன்
11. நகுலன்
12. பசுவய்யா
13. பழமலய்
14. ந.பிச்சமூர்த்தி
15. புவியரசு
16. சி.மணி
17. மீரா
18. மேத்தா
19. வல்லிக்கண்ணன்
20. வைரமுத்து
- பால்வீதி
- வெள்ளை இருட்டு
- சுயம்வரம்
- கீழைக்காற்று
- கறுப்பு மலர்கள்
- சர்ப்ப யாகம்
- மாற்று இதயம்
- அன்று வேறு கிழமை
- தோணி வருகிறது, விடியல் விழுதுகள்
- நட்சத்திரப் பூக்கள், மண்ணின் மாண்பு
- மூன்று
- நடுநிசி நாய்கள்
- சனங்களின் கதை
- காட்டுவாத்து, வழித்துணை
- இதுதான்
- வரும்போகும், ஒளிச்சேர்க்கை
- ஊசிகள்
- ஊர்வலம், கண்ணீர்ப் பூக்கள்
- அமர வேதனை
- திருத்தி எழுதிய தீர்ப்புகள்

இவை ஒரு சில சான்றுகளாகும். பாலா, வல்லிக்கண்ணன், ந.சுப்புரெட்டியார் போன்றோர் தம் திறனாய்வு நூல்களும் புதுக்கவிதை வளர்ச்சிக்குப் பெரிதும் உதவின.

4.4.4 புதுக்கவிதையின் இன்றைய நிலை

அறிவுமதியின் நட்புக்காலம், இ.இசாக்கின் காதலாகி, வைரமுத்துவின் கொடிமரத்தின் வேர்கள் முதலான நூல்கள் என இன்றும் தொடர்ந்து புதுக்கவிதை நூல்கள் வெளிவந்தவாறே உள்ளன.

தினத்தந்தி, தினமலர் போன்ற நாளிதழ்களின் வார இணைப்புகளிலும், பாக்யா போன்ற வார இதழ்களிலும் புதுக்கவிதைகள் பெரிதும் இடம் பெற்று வருகின்றன.

அணி, நறுமுகை, குளம், தை எனப் பல்வேறு இதழ்கள் புதுக்கவிதைக்கென்றே தோன்றிச் சிறப்புற வளர்ந்து வருகின்றன.

கல்லூரிகளின் ஆண்டு மலர்களிலெல்லாம் புதுக்கவிதையே பெரிதும் இடம் வகிக்கின்றது.

தஞ்சை பாரத் அறிவியல் நிர்வாகக் கல்லூரி, திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரி போன்ற நிறுவனங்கள் தேசிய அளவில் கருத்தரங்கம் நடத்திப் புதுக்கவிதை ஆய்வுக் கோவைகளை வெளியிட்டு வருகின்றன.